8 Aug 2007

SMS - அன்புவழி ஆயுதம்

நமக்கு வருகிற SMS பெரும்பாலும் விளம்பரங்களாகவே இருப்பதால், அதைப் பார்ப்பதற்கே பல நேரங்களில் தொல்லையாய் இருக்கிறது. ஆனால் சீனாவில் நடந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் SMS மூலம் எத்தகைய சாதனைகளும் செய்யலாம் என அறியலாம். 'சிறு துறும்பும் பல்குத்த உதவும்' அல்லது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.ஒரு சீன இளம்பெண் கடைவீதிக்குப் போயிருந்த போது, ஒரு திருடன் அவள் கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்து விட்டான். அந்த கைப்பையில் சுமார் 630 அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள சீனப்பணமும், அத்துடன் அப்பெண்ணின் செல்போன், ஓட்டுனர் உரிமம் மற்றும் I.D. முதலிய முக்கிய ஆவணங்களும் இருந்தனவாம். அந்தப் பெண் தன் தோழியிடம் உள்ள செல்போன் மூலம் தனது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மணியடிக்கிறது ஆனால் திருடன் எடுக்கவில்லை. ஆனால் இணைப்பையும் துண்டிக்கவில்லை.அடுத்ததாக அப்பெண் செய்தது முதலில் ஒரு SMS: – 'உன் நிலைமையை என்னால் உணர முடிகிறது. அதனால் உன்னை என்னால் ஒரு திருடனாக எண்ண மனம் இடந்தரவில்லை. உனக்கு வேறு வழியில்லாததால்தான் இவ்வாறு எடுத்திருக்கிறாய் என நினைக்கிறேன்' என்பதாக அனுப்பினாள்.அடுத்த SMS: – 'உன்னைப் போன்றவர்கள் நினைத்தால், நல்ல வழிமுறைகளில் சிறந்த சாதனைகள் செய்ய இயலும். முயன்ற ஓரிரு இடங்களில் நீ பெற்ற தோல்விகள் உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்' என்பதாக.அடுத்து, அதற்கடுத்து, அதற்கடுத்து என தொடர்ந்து வரிசையாக (21) இருபத்தியொரு SMS அனுப்பினாள். அதனூடாக 'அப்பணத்தை அவன் எடுத்துக் கொள்வதால் தனக்கேதும் வருத்தமில்லை. திறமைசாலியான இளைஞர்களில் ஒருவன் தவறான வழியில் சென்றுள்ள மன வேதனைதான்' எனவும், இன்னும் 'பணம் போனாலும் அதிலுள்ள (கை பேசியில் சேமிக்கப்பட்டுள்ள) தொலைபேசி எண்களும், மற்ற முக்கிய ஆவணங்களும் தொலைவதால் அவளுக்கேற்பட விருக்கிற மன அழுத்தத்தையும்' குறிப்பிடத் தவறவில்லை.அவள் வீட்டுக்கு திரும்பிய போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, அவளுடைய கைப்பை அழகாக பொதியப்பட்டு, அவள் வீட்டுக் கதவருகில் அவளுக்காக காத்திருந்தது. அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. உள்ளது உள்ளபடியே. ஆனால் கூடவே ' அவள் அனுப்பிய SMSகளால் தன் மனம் திருந்தியதாகவும், தன் செயலுக்கு வருந்துவதாகவும், இனி இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான வழிகளில் கவனத்தைத் திருப்பி,சிறந்த மனிதனாக வாழப்போகிறேன்' என்ற குறிப்போடு.(துபாய் 96.7 FM மலையாள வானொலியில் சொல்லக் கேட்டது. சிறிது மெருகேற்றப்பட்டுள்ளது.)
Posted by சுல்தான் at 1:31 PM

No comments: