21 Sept 2008

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆணையர் எச்சரிக்கை

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்:

“போலி இ-மெயில்களை நம்பி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி எச்சரித்துள்ளார்.

ஆப்பிரிக்கா நாடுகளில் பல போலி லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாட்டு மக்களுக்கு லட்சக்கணக்கில் இ-மெயில்களை அனுப்புகின்றனர். மெயிலில் “ஆன்லைன் லாட்டரி மூலம் பல கோடி ரூபாய் பணம் பரிசாக உங்களுக்கு கிடைத்துள்ளது. இப் பரிசை பெற நீங்கள் குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டு வங்கியில் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்படும்.

உழைக்காமலே கோடி கணக்கில் பணம் கிடைத்தும் என்ற பேராசையில், போலி இ-மெயில்களை நம்பும் சிலர் வங்கியில் பணத்தைச் செலுத்துகின்றனர். இதன்பின், மீண்டும் பணம் செலுத்தும்படி மற்றொரு இ-மெயில் வரும்.

2-வது முறையும் பணத்தைச் செலுத்திய பின், போலி நிறுவனத்திடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்காது.

இத்தகைய நூதன மோசடியில் சிக்கி பணம் இழந்த ஒரு சிலரே போலீஸில் புகார் அளிக்கின்றனர். போலி இ-மெயிலால் சில ஆயிரங்களை இழந்தவர்கள் போலீஸில் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸர் கூறியது:

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் மிக சிலரே போலீஸில் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த மோசடியில் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இணையதள வசதியைப் பயன்படுத்தி மோசடி செய்யும் வெளிநாட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் ஏராளமான நடைமுறை சிக்கல் உள்ளன என்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. “சொந்த விவரங்களையும் (பயோடேட்டா), பணத்தையும் வங்கியில் செலுத்தினால், உங்களுக்கு வேலை ரெடி’ என்ற ரீதியிலான இ-மெயில்களை இந் நிறுவனங்கள் அனுப்புகின்றன. இவற்றை நம்பிக் கூட ஏமாந்தவர்கள் உண்டு.

இப் பிரச்னை குறித்து மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மோசடி இ-மெயில்களுக்கு பதில் அனுப்பவோ, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவதோ கூடாது. அறிமுகமில்லாதவர்களிடம் வங்கிக் கணக்கு எண், ரகசிய பாஸ்வேர்டு போன்ற விவரங்களை அளிக்க வேண்டாம். லாட்டரி பரிசுகளை வென்றுள்ளதாக கூரியர், இ-மெயில்களில் மூலம் வரும் தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்..

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

- அலசல்

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

பொதுவாக எல்லோருக்கும் ஒருவித எண்ணம் உண்டு. "எப்போதும் கடுமையாக உழைக்கிறோம். புதிதாக யோசிக்கிறோம். மற்றவர்கள் இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே! ஒரு பாராட்டுகூட கிடையாதா...? என்று அங்கலாய்ப்பார்கள்.

பலரிடம் உள்ள இந்த எண்ணம் இது உண்மைதானா என்பது பற்றி எஸ்.பி.எம். பவுண்டேசன் என்ற அமைப்பு ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அர்த்த சாஸ்திரத்தில் சில தகவல்களை எடுத்து கூறி இதன்படி செயல்பட்டால் வாழ்வில் வெற்றிபெற தகுந்த ஆள் யார்? என்பதை முடிவு செய்யலாம் என்கிறது அந்த நிறுவனம்.

இதற்காக மூன்று முக்கிய விஷயங்களை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) எடுத்த காரியத்தை முடிக்கிறீர்களா?

2) அதற்கு தேவையான விடை கிடைத்ததா?

3) அந்த பணியை செய்ததில் திருப்தி அடைகிறீர்களா?

இந்த மூன்றையும் கணித்து உங்கள் தினசரி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறது அர்த்த சாஸ்திரம்.

இது தவிர 4 முக்கிய குறிக்கோள்களையும் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

1) உங்களது இலக்கு, லட்சியம், கொள்கையை சரியாக குறி வைத்து முடிவு செய்யுங்கள்.

2) ஒரு செயலை ஏன் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

3) ஒரு காரியத்தை எப்படி செய்வது என்ற திட்டமிடுதல் மிகவும் அவசியம். இதில் பலருடைய ஆலோசனைகள் அறிவுரைகள் தேவைப்படலாம்.

இவற்றை வரைபடம்போல மனதில் வைத்து செயல்படவேண்டும். இதற்கு தகுதியான ஆலோசனைகளை கேட்டு அறிவது அவசியம்.

4) பயணத்தை தொடங்கியதும் வெற்றி, தோல்வி வரலாம். எனவே விடாமுயற்சி முக்கியம். லட்சியத்தை பார்த்து வேகமாக செயல்படவேண்டும்.
இதில் பலர் தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம். எனவே பாதையை சரியானதாக தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

அர்த்த சாஸ்திரத்தின் இந்த கருத்துகளை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறுவது சுலபம்.

16 Sept 2008

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.

அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது.

மேலும் புளூ டூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்.

ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒரு வேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்த விலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அனைத்துவசதி கொண்ட கம்பெனி போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.

-கூடுதுறை

10 Sept 2008

நட்பு - நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்

நட்பு - நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

-வா‌ணிஸ்ரீ ‌சிவ‌க்குமா‌ர்

7 Sept 2008

காய்கறிகளில் என்ன பலன் இருக்கிறது ?

வாழைக்காய்

பித்தம் குறைக்கும், தலைச்சுற்று நீக்கும், பித்த வாந்தியைக் குறைக்கும், உடற்சூடு தணிக்கும், சூட்டு இருமல் தணிக்கும், உமிழ்நீர் சுரக்கும்.

முருங்கைக்காய்

சளியைப் போக்கும், ஆண்மை மிகுவிக்கும், ஊளைச்சதை நீக்கும், எலும்பு வலுவாகும், பல் ஆட்டத்தை நிறுத்தும், காயங்களைக் குணமாக்கும், சோகை தீர்க்கும், ஈறுகளுக்கு உறுதி அளிக்கும்.

காலி ஃபிளவர்

சூட்டைத் தணிக்கும், சளி குறைக்கும், உடல் வறட்சியைப் போக்கும், இருமல் குறைக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், இளைப்பு நீங்கும், மேனியை மினுமினுப்பாக்கும்.

தக்காளிப் பழம்

மேனியை மினுமினுப்பாக்கும், வறட்சியைப் போக்கும், தாகம் தணிக்கும், உமிழ்நீரைச் சுரக்க வைக்கும்.

முட்டைக்கோஸ்

உடல் வளரச் செய்யும், கண் பார்வை மிகும், தோல் அழகாகும், பற்கள் உறுதியாகும், நரம்புகள் பலமாகும், தொற்று நோய்களைத் தடுக்கும், கருவுற்ற பெண்களுக்கு நல்லது, எலும்புக்கு உறுதி ஏற்படுத்தும், முடி கொட்டாது.

வெங்காயம்

வாய் துர்நாற்றம் போக்கும், மலப்பிரச்னைகள் தீரும், உடம்பில் மினுமினுப்பு உண்டாக்கும், வறட்சி நீக்கும், வாதம், பித்தம், கபம் இவைகளைச் சமப்படுத்தும்.

பீட்ரூட்

இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும்.

பச்சைப் பட்டாணி

பசியைப் போக்கும், உடம்புக்கு சக்தி கொடுக்கும், குடல்புண்களை ஆற்றும், மூளைக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கும். றீ

உங்கள் கண்களை பாதுகக்கா....

கண்ணுக்குக் கண்ணாக என்று சொன்னாலும் நடைமுறையில் நமது கண்களைப் பாதுகாப்பதில் நாம் போதிய அக்கறை கொள்வதில்லை. பார்வைக் குறைபாடு வந்த பிறகே கண்களைக் கவனிக்கிறோம். ஆனால் கண்களைப் பாதுகாக்க பல எளிமையான வழிகள் இருக்கின்றன.

அவற்றில் சில மீன் உணவு கண்களுக்கு மிகவும் நல்லது. அதில் உள்ள ஓமேகா3 கொழுப்புத் தன்மை கொண்ட அமிலங்கள் வறண்ட கண் குறைபாட்டை போக்க வல்லது. மீன் சாப்பிடாதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடலாம்.

நீச்சல் அடிக்கச் சென்றால் அதற்கான கண்ணாடி அணிந்து செல்லுங்கள். குளோரின் கண்களைப் பாதிக்காமல் தடுப்பதோடு மண் கரிசல்கள் பாதிப்பு ஏற்படுத்தாமலும் பாதுகாக்கும்.

காரில் ஏசி இருந்தாலும், அதிலிருந்து முகத்திற்கு நேராக குளிர் காற்று வரச் செய்வதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக கால் பகுதியை நோக்கி காற்று வரட்டும். காரணம், குளிர் சாதன காற்று பஞ்சு போல. கண்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். வறண்ட கண்களிலும் பல வித பாதிப்பு உண்டாகலாம்.

சிவப்பு வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துங்கள். அதில் உள்ள குயர்சிடின் (quercetin) காட்ராக்டை வராமல் தடுக்க வல்லது.

எப்போது வெளியே சென்றாலும் குளிர் கண்ணாடி அணியலாம். இது பந்தாவிற்காக அல்ல. பாதுகாப்பிற்காக. குளிர் கண்ணாடி சூரிய வெப்பத்தில் இருந்து காப்பதோடு காற்றில் உள்ள வறண்ட தன்மையில் இருந்தும் காக்கிறது.

வள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள். அதில் உள்ள வைட்டமின் `ஏ' இரவு நேர பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

மேக் அப் செய்து கொள்ளும் பெண்கள் இரவு படுக்கச் செல்லும் முன் மேக் அப்பை கலைத்து விட்டு முகத்தைக் கழுவி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

டவல்கள் மற்றும் கைக்குட்டை மூலம் கிருமிகள் தாக்கலாம் என்பதால் இயன்றவரை முகம் துடைக்க புதிய (அ) துவைத்த டவலை மட்டுமே பயன்படுத்தவும்.

கண்ணாடி அணிந்தால் மட்டும் போதாது. தொப்பியும் அணிவது சிறந்தது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்ணுக்குள் ஊடுருவாமல் தொப்பிகாக்கிறது.

படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ அரை மணிக்கு ஒரு முறை அதனை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் தொலைவில் உள்ள பொருளை 30 விநாடி பார்க்க வேண்டும்.

அடிக்கடி ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் பார்வையைப் பாதிக்கலாம்.

மல்லிகை மலர் வாசனைத் திரவியம் (அ) வென்னிலா மனத்தை முகர்ந்து பாருங்கள். இவை மூளையில் பீட்டா கதிர்களை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் கவனிப்புத்திறன் கூடும். விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

வாரத்தில் நான்கு முறையேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். குளுகோமா நோயாளிகள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் பாதிப்பு குறைவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

கீரைகள் அதிகம் சாப்பிடுங்கள்.அதே போல் உப்புத்தன்மை கொண்ட பண்டங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

3 Sept 2008

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். 40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன.

இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

-சுதன்