26 Mar 2008

துபாயில் நடந்த சில சிரிப்பான நகைச்சுவைகள்

ஒரு மலையாளி தமிழ் நண்பரிடம் வழி கேட்க்கிறார் அண்ணா மச்சி மார்க்கெட் எவிட இண்டு? ( மீன் அங்காடி எங்கே உள்ளது? )
தமிழ் நண்பர்: மச்சி மார்க்கெட்டா? நேரா போயி... மனசிலாயா? சோத்துக்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? அங்க ஒரு ஈரானி கடை இருக்கும்... மனசிலாயா? அங்கேர்ந்து பீச்சாங்கை பக்கம் திரும்பு... மனசிலாயா? ஒரு பிரிட்ஜ் வரும்... மனசிலாயா? அந்த பிரிட்ஜ் தாண்டுணா மச்சி மார்க்கெட்தான்..! மனசிலாயா ?
மலையாளி: எல்லாம் மனசிலாயி. இந்த மனசிலாயியையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாம்.(மலையாளத்தில் மனசிலாயா என்பதற்கு தமிழில் புரிகிறதா என்பது பொருள்).

துபாயில் குறைந்த சம்பளத்தில் இருப்பவர்கள் உணவகங்களில் உணவருந்த கட்டுப்படியாவதில்லை. மற்றும் மலையாளிகளின் உணவகத்தில் உணவிலுள்ள கூடுதல் காரமும், எல்லா குழம்பிழும் நிறைய தேங்காய் போடுவதலும் நம்ம தமிழ் நாட்டு நண்பர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் தனி மெஸ்தான் ஊரிலுள்ள சாப்பாடு போலவே கிடைக்கும். அப்படி துபாயில் ஒரு ருமில் உள்ள மெஸ்ஸில் நடந்த ஒரு நகைச்சுவை.
சமைப்பவர்: (எதையோ தேடிக் கொண்டே) சட்டியில சாப்பாடு இருக்கு! அவங்கவங்க தேவையான அளவு வீணாக்கம வச்சுக்கங்கப்பா.
சாப்பிட வந்தவர்கள்: சோறு வச்சுக்குறோம். தொட்டுக்க என்ன இருக்கு?சமைப்பவர்: கோழி வருத்திருக்கு. ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்குங்கப்பா!சாப்பிட வந்தவர்கள்: அண்ணே! சாப்பாட்டுல பீடி ஒரு கட்டு கிடக்கு. ஆளுக்கு எத்தனை பீடி எடுத்துக்கனும்.
சமைப்பவர்: அட அதத்தாம்பா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாடு செய்யும்போது உள்ளே விழுந்திருச்சு போலிருக்கு! (அசடு வழிகிறார்)
Posted by சுல்தான் குலாம்

13 Mar 2008

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.

மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.
மின்னஞ்சல் கடிதங்கள் இன்று ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாத தேவையாய் மாறிவிட்டன. வெளியூரில் விருந்தினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்குச் சென்றால் உபசரிப்பதற்காக கொஞ்சம் காபி தரட்டுமா? என்று கேட்பது போல "உங்கள் இமெயில் பார்க்கணும்னா இங்கேயே எங்க கம்ப்யூட்டர்ல செக் பண்ணிக்கிறீங்களா? என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது.
அந்த அளவிற்கு அனைவருக்கும் அன்றாடம் இமெயில் பார்க்க வேண்டியது அவசியமாகிவிட்டது. கடிதங்களை பேப்பரில் எழுதி கவர் வாங்கி மூடி ஸ்டாம்ப் ஒட்டி தபால் அனுப்புவது இப்போது எவ்வளவோ குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் நாம் அனுப்பும் இமெயில் கடிதங்கள் நம்முடைய பண்பையும் காட்டுவதாக அமைய வேண்டாமா? பேப்பரில் எழுதும்போது எத்தனை ஒழுக்க முறைகளைக் கடைப்பிடிக்கிறோம். சரியாக வரவில்லை என்றால் எத்தனை பேப்பரைக் கிழித்து எறிந்து விட்டு பின் எழுதுகிறோம். அதே போல இமெயில் கடிதங்களை அமைப்பதிலும் எழுதுவதிலும் பல நல்ல வழிகளைக் கடைப்பிடித்தால் நல்லது.

அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. ஒரே இமெயில் கடிதத்தினைப் பலருக்கும் அனுப்புகையில் பெறுபவர் முகவரியில் அனைத்து முகவரிகளையும் அமைக்க வேண்டாம். தங்களுடைய இமெயில் முகவரிகளைத் தேவையின்றி அடுத்தவர்கள் அறிவதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பெறுபவருக்கான இடத்தில் (To:) உங்கள் முகவரியினையும் BCC என்ற இடத்தில் அனைத்து முகவரிகளையும் அமைத்து அனுப்பவும். BCC என்பது Blind Carbon Copy ஆகும். அதாவது நீங்கள் யார் யாருக்கெல்லாம் இந்தக் கடிதத்தினை அனுப்பி உள்ளீர்கள் என்று யாருக்கும் தெரியாது. அதனைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதனைக் கடிதத்திலேயே தெரிவித்து விடலாம். இதனால் நீங்கள் பலருக்கு அனுப்பி உள்ளது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இமெயில் முகவரி மற்றவருக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா!

2. கடிதத்தின் Subject என்ற பிரிவில் உங்கள் கடிதம் எதனைக் குறித்துள்ளது என ரத்தினச் சுருக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் குறிப்பிடவும். இது கடிதங்களின் பட்டியலை உங்கள் நண்பர் பெறுகையில் கடிதம் எது குறித்து என்று அறிந்து அதற்கேற்ற வகையில் முக்கியத்துவம் தருவார். எனவே "Hi" or "Hello" or "Help" என்ற சொற்களை Subject பிரிவில் அமைப்பதனை அறவே தவிர்க்கவும்.

3. மிகப் பெரிய பைல்களை இணைப்பாகத் தருவதனைத் தவிர்க்கவும். இவற்றை இறக்கிட அதிக நேரம் எடுக்கும் என்பதாலும் அதற்கு இன்டர்நெட் இணைப்பிற்கான பணம் கூடுதலாகச் செலவழியும் என்பதாலும் உங்கள் நண்பர் எரிச்சல் பட்டு அதனைப் படிக்காமலேயே இருந்து விடுவார். எளிதாகச் செலவின்றி இறக்கம் செய்யக் கூடிய பிராட் பேன்ட் இன்டர்நெட் இணைப்பை எல்லாரும் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்படியும் ஒரு பெரிய பைலை இணைக்க வேண்டும் என்றால் இதற்கெனவே உள்ள Yousendit போன்ற தளங்களில் உங்கள் பைல்களை அமைத்து அதற்கான தொடர்பினை உங்கள் கடிதத்தில் தந்துவிடவும்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைப்பாகத் தர எண்ணினால் அவற்றை ஸிப் செய்து அனுப்பவும். அப்போது தான் கடிதத்தினைப் பெறுபவர் அனைத்து பைல்களையும் பெறுவது உறுதிப் படுத்தப்படும். இல்லை என்றால் ஒன்று கிடைத்து ஒன்று கிடைக்காமல் போகலாம்.

5. எந்த இமெயில் கடிதத்தினையும் ஒருவர் மீது கோபத்தில் இருக்கும்போதோ எழுத வேண்டாம். அப்படியே உங்கள் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ள எழுதினாலும் உடனே அதனை அனுப்ப வேண்டாம். சிறிது காலம் கழித்து அனுப்ப அதனைத் திறந்து படித்துப் பார்க்கவும். நீங்களாகவே அந்த கடிதத்தினை மாற்றி எழுத முடிவு செய்வீர்கள்.

6. மின்னஞ்சல் கடிதத்தினைப் பெறுபவர் படித்துவிட்டார் என்ற சான்றினை நீங்கள் பெறும் வகையில் ஒரு கடிதத்தினை அனுப்பலாம். ஆனால் இது போன்ற பெற்றதற்கான அஞ்சல் ஒன்றைப் பெறும் வசதியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. பெறுபவர் இது குறித்த ஆப்ஷன் விண்டோ ஒன்றைப் பெறுவார். பின் அதற்கு நேரம் ஒதுக்கி பதில் அளிக்க வேண்டும். எனவே அவர் அதனை விரும்ப மாட்டார்.

7. உங்களுக்கென தனிப்பட்ட முறையில் வரும் கடிதங்களுக்கு உடனடியாகப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பவும். ஏனென்றால் உங்களுக்கு கடிதத்தினை அனுப்பியவர் பதிலுக்குக் காத்திருப்பார்.

8. எப்போதும் மின்னஞ்சல் கடிதங்களை சுருக்கமாகவும் நேரடியாக விஷயத்தைத் தெரிவிப்பதாகவும் அமைத்திடுங்கள். இந்தக் கடிதத்தைப் படிக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்ல சுகத்துடன் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் என்று எழுதுவதெல்லாம் பேப்பரில் எழுதுவதற்குத்தான் சரி. மின்னஞ்சல் கடிதங்களில் இருக்கக் கூடாது.

9. கடித்ததை அனுப்ப பட்டனை அழுத்தும் முன் எப்போதும் கடிதத்தில் பிழைகள், இலக்கண தவறுகள் இருக்கிறதா என ஒரு முறை சோதித்த பின்னர் அனுப்பவும். தவறுகள் இருந்தால் நீங்கள் சீரியசாக அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்று உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை அக்கடிதம் ஏற்படுத்திவிடும்.

10. நீங்கள் ஏதேனும் மெயிலிங் லிஸ்ட்டில் இருந்தால் உங்கள் முகவரி, மொபைல் போன் எண்கள் ஆகியவற்றை அனைவரும் அறியும் வண்ணம் தருவதனைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நபர்களை உங்கள் தனி மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளச் சொல்லி பின் தெரிவிக்கவும். அல்லது அவர்களின் தனி மின்னஞ்சல் முகவரியினைப் பெற்று தொடர்பு கொள்ளவும். ஏனென்றால் மெயிலிங் லிஸ்ட்டில் உள்ள எல்லாரும் நல்லவர்கள் என்றும் உங்கள் நண்பர்கள் என்றும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
நன்றி : வாஞ்ஜுர்

11 Mar 2008

கணினியில் உள்ள கோப்புகளை தெரியாமல் நீக்கி விட்டீர்களா?

கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம். நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம், ஃபைன் ரெகவரி என்ற சாஃப்ட்வேர் மூலம் நீக்கியதை மீட்டெடுக்க முடியும்.
உங்கள் கணினியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய கோப்புகளை இந்த ஃபைன் ரெகவரி மென்பொருள் திரும்பவும் உங்களுக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும். இது இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு நாம் கட்டணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஃபைன் ரெகவரி மென்பொருளுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை. நாம் கோப்புகளை நீக்கும்போதோ அல்லது அழிக்கும்போதோ, விண்டோஸ் அதனை முழுதும் ஒழித்து மூடி விடுவதில்லை. மாறாக டிரைவில் அதனை மறைத்து வைத்திருக்கும். ஃபைன் ரெகவரி மென்பொருள் உங்கள் கணினியை முழுதும் ஸ்கேன் செய்து நீங்கள் நீக்கியதாக நினைத்து அஞ்சிய கோப்புகளை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
இந்த மென்பொருள் வைரஸ் தாக்குதலால் வீணாய்ப் போன கோப்புகளையும் மீட்டுத் தரவல்லது. மேலும் மின் தடை மற்றும் ஹார்டு ட்ரைவில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக சேதமடையும் கோப்புகளையும் இந்த மென்பொருள் மீட்டுத் தரும் .
நீக்கிய கோப்புகளைத் திரும்பப் பெற முதலில் இந்த மென்பொருளைத் திறக்கவும். இந்த மென்பொருள், பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதான வழிமுறைகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருளைத் திறந்தவுடன் ஃபைல் என்பதை கிளிக் செய்து பிறகு ஸ்கேனை கிளிக் செய்க. ஃபைன் ரெகவரி உடனேயே நீக்கப்பட்ட கோப்புகளின் பட்டியலை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும். இந்தப் பட்டியலிலிருந்து உங்களுக்கு தேவையான கோப்பை ரைட் கிளிக் செய்க. அந்த பெட்டியில் இது பாப் அப் ஆகும். இப்போது ரெகவர் என்பதை கிளிக் செய்து சேமிக்கவும். இவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
அனைத்து விதமான விண்டோஸ் பயன்பாடுகளிலும் ஃபைன் ரெகவரி மென்பொருள் வேலை செய்யும். யு.எஸ்.பி. ஸ்டோரேஜ் டிவைஸிலிருந்தும் இதனை இயக்கலாம். http://www.finerecovery.com/finerecovery.exe
நன்றி : தமிழ் 2000