30 Sept 2007

சவூதி அரேபியா உள்ள ரியாத்தில் பெரும் தீ விபத்து


சவூதி அரேபியா உள்ள ரியாத் நகரின் வர்தக மையப்பகுதியான பத்தாஹ்வில் இன்று ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் குறிப்பாக கேரளா மார்க்கெட் பகுதியில் மாலை 5 30 மணியளவில் ஆரம்பித்த தீ விபத்து இந்த ஆக்கம் எழுதும் இரவு 12 50 வரை கடுமையான தீயின் கோரப்பிடியில் கேரளா மார்கெட் சிக்கி சிதைந்து கொண்டுள்ளன....
இந்தப் பகுதி அனைத்தும் ஜவுளிக்கடைகள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஹூஸைன்கனி

27 Sept 2007

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ கட்டணம் ரத்து

பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்புகள் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், உதவி பெறாத பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 10ம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக ரூ. 115ம், பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ.175ம் வசூலிக்கப்பட்டு வந்தது.செய்முறை தேர்வுடன் கூடிய பாடங்கள் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களிடம் ரூ.205 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண ரத்து மூலம் சுமார் 6 லட்சம் எஸ்எஸ்எல்சி மாணவர்களும், 5.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களும் பலனடையவுள்ளனர்.இந்த கட்டண ரத்தால் அரசுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் இந்தச் சலுகை மூலம் மேலும் பல மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியை நாடுவார்கள் என்பதால் இத் திட்டம் அமலாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

துபாயில் கூடும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் வருடாந்திர சந்திப்பு நாளை (28ம் தேதி) துபாயில் நடைபெறவுள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது,முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ''துபாய் பிளாக்' எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
நன்றி : thatstamil.com

26 Sept 2007

சூரியன் எஃப்-எம் இப்போது ஆன் லைனில்!!!

ஊரு விட்டு ஊரு வந்து (நாடு விட்டு நாடு வந்து), ஊரை தொலைச்சிட்டோம்னு வருத்தப்படும் மக்களே... இதோ நமக்காக இப்போ சூரியன் எஃப்.எம் (இன்னும் நிறைய இருக்கு) வின்ஆம்போட (Winamp) இணைந்து வருது...
பழைய Win Amp வெர்ஷனில் வருதானு எனக்கு தெரியல...
புது வெர்ஷன் 5.32ல வருது...
நீங்க செய்ய வேண்டியது இதுதான்...
Winamp download செய்ய கிழே இருக்கும் லிங்க்கை கிளிக்கவும்


காசு வெச்சிட்டு செலவு பண்றது எப்படினு தெரியாதவங்க காசு கொடுத்து டவுண்லோட் செய்து கொள்ளவும்... நம்மல மாதிரி ஓசில கிடைச்சா போதும்னு நினைக்கறவங்க அப்படியே Free வெர்ஷன் டவுன்லோட் செய்து கொள்ளவும்...
இன்ஸ்டால் செய்த பிறகு, படத்தில் உள்ளது போல்
இடது பக்கம் உள்ள மெனுவில் ஆன்லைன் சர்வீஸசில் shoutcast radioவை செலக்ட் செய்யவும். பிறகு Genre "T" தேர்ந்துடுத்து அதில் Tamilஐ கிளிக் செய்யவும்... உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்துடுத்து பாட்டு கேட்டு ரசிக்கலாம்...

25 Sept 2007

வருகிறது துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல்

மிகப் பிரபலமான துபாய் விற்பனைத் திருவிழா அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் மிகப் பிரமாண்டமான துபாய் விற்பனைத் திருவிழா எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி முதல் பிப்ரவரி 24ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.மேற்கண்ட தகவலை ஷேக் அஹமது பின் சயீது அறிவித்தார். துபாய் விற்பனைத் திருவிழா 13 ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழா 32 நாட்கள் நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது பொழுது போக்கு அம்சங்களுடன் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாய் அமைந்து வருவதில் துபாய் விற்பனைத் திருவிழா ஒரு தனியிடம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.2006-07 விற்பனைத் திருவிழாவின் போது 3.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர்.இத் திருவிழாவையட்டி குளோபல் கிராமம் ( Global Village ) ஏற்படுத்தப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை உலக மக்கள் கண்டு களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

20 Sept 2007

பாதுகாப்பற்ற வாகனப்பயணம்

நன்றி : தினமலர்

18 Sept 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 2)

விடிகாலைத் தொழுகை நேரத்திற்கு வெகு முன்பாகவே கண்விழித்து விடுகிறார்கள் இவர்கள்.
ஒரு நாளைக்கு 14 மணி நேரங்கள் என்ற கணக்கில் வாரத்திற்கு ஆறு நாட்கள், வெள்ளிக்கிழமையன்றும் ஓவர்டைம் கிடைக்கும் எனில் நோகும் உடலைக் கிடைக்கவிருக்கும் காசின் ஆசைகாட்டி ஒத்துழைக்க வைத்து கிளம்பிவிடுவதும், உச்சி வெயிலும் தணல் காற்றும் உள்ளும் புறமும் சுட்டெரிக்க தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் ஆபத்துக்கள் சூழ்ந்த புழுதி பறக்கும் சிறைச்சாலை போன்ற தொழிற்சாலைகள், கட்டிடப் பணியிடங்கள், உடலும் உள்ளமும் துவண்டு போய் காய்ந்த வியர்வையே போர்வையாக மாறியிருக்கும் மாலை நேரத்தில் துவண்டு நடக்காமல் ஓடிப்போய் அடித்துப் பிடித்து ஏறினால் தான் அழைத்து போக வரும் பேருந்தில் இடம் கிடைக்கும்.
நான்கு பேர் மட்டுமே தங்கப் போதுமான இடம் என்று சர்வதேசச் சட்டம் ஏட்டில் எழுதி வைத்துள்ள ஒரு அறையில் பதினான்கு பேருடன், ஒரு காலத்தில் சுத்த பத்தமாய் நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்ததை நினைவுகளில் நிறுத்தி, வீட்டு நினைவுகள் அதிர்ஷ்டவசமாக அழுத்தவில்லை என்றால் படுக்கையில் படுத்தவுடன் பத்து எண்ணுவதற்குள் கண்ணைச் சுழற்றும் கணங்களுடன், காலையில் அணிந்து செல்ல அதே அழுக்கு வியர்வைக் கரைசல் மணத்துடன் சுவற்றில் மாட்டியிருக்கும் யூனிஃபார்மும் அதற்குச் சற்றும் சளைக்காத விதத்தில் கல்லில் மாட்டிய ஈரத்துணியாய் ரணமான மனதுடன் தூங்கிப்போகின்றனர்.வளைகுடா நாடுகள் 1950களின் இறுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பின் மூலம் ஏற்பட்ட பெரும் தொழிற்புரட்சியில் உண்டான மாற்றங்களின் விளைவாகப் பெரும் மனித வளம் இங்கே தேவைப்பட்டது. வளைகுடா நாடுகளில் 90% அளவிற்கு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். வளைகுடாவின் பரந்து விரிந்த தொழிலாளர் பிரச்னைகளை நாடுவாரியாக எடுத்துச் சொன்னால் கட்டுரை நீண்டுவிடும் என்று அஞ்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சாராரை மட்டும் கையில் எடுத்துள்ளோம்.
BMW சொகுசு கார்களில் உலாவரும், கோல்ஃப் விளையாடிவிட்டு ஒரு வாய் டீயை ஒரு மணிநேரம் எடுத்துக் குடிக்க ஏழு நட்சத்திர ஹோட்டல்களைத் தேடி அலையும், வளைகுடாவின் "சூடான" மாதங்களில் அடிக்கடி மேற்கத்திய நாடுகளில் "சன்"பாத் எடுக்கச் செல்லும் நபர்கள் இந்த ஆக்கத்தின் பட்டியலில் சேர்த்தியில்லை. பொறுப்பான உயர்பதவிகளில், தலைசிறந்த நிர்வாகத்தினை நடத்தி வரும் தமிழ் அன்பர்களும் இதிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்.
வறுமைக்கோடு என்பது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கும் உண்டு என்ற புதிய இலக்கணம் படைத்து, சொல்லவொண்ணா துன்பமும் துயரமும் அடைந்து கொண்டிருக்கும் இந்திய - குறிப்பாக - தமிழக முஸ்லிம்கள் நிலை பற்றி இங்குப் பார்ப்போம். காரணம், கழுத்து வலிக்கும் உயரத்தில் கண்ணாடிக் கட்டிடங்களும், மார்பிள் பளபளக்கும் 'மால்'களுக்கும் இங்கே பஞ்சமில்லை. ஆனால் வெளியுலகில் பிரதானப் படுத்தப்படும் தரமான, ஆடம்பரமான பார்வைகளின் பின்னணியில் நசிந்து போயிருக்கும் பல நிகழ்வுகள் நம் பார்வைக்கே வருவதில்லை. அவற்றுள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வியர்வைத்துளி 1 - முபாரக்!

தலைக்கு மேல் கொளுத்தும் 49 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் கைகளுக்கு அணிந்திருக்கும் உறைகளை மீறிய சூட்டில் கட்டிடத்தின் நூறாவது மாடியின் மேல் தளத்திற்காக கம்பிகள் மேல் அமர்ந்து கான்க்ரீட் கொட்டும் இந்திய முஸ்லிம்களைப் பார்த்தால் கண்ணீர் வராத உள்ளம் கல்லேயன்றி வேறில்லை.நான்கு வருடங்களுக்கு முன்னால் வளைகுடா மண்ணை மிதித்த முபாரக், ஊரில் வளைகுடாவைப் பற்றி கனவு காணும் டிப்பிக்கல் இளைஞர்களில் ஒருவராக தன் இரு வருடச் சம்பாத்தியத்தை முன்பணமாக மும்பை ஏஜண்டிற்கு தாரை வார்த்துவிட்டு வந்தவர். வளைகுடா தொழிலாளர் சட்டம் இது போன்ற ஏஜண்ட் இலஞ்சமாக வாங்கும் பணத்தை சட்ட விரோதமாக கருதினாலும் கூட கண்ணீரையும் வியர்வைத் துளியையும் உணவாக உட்கொண்டு செழிப்பாக இவ்வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. (வாசிக்க: Saudi Arabian Basic Labor Legal Information for Indians.) வளைகுடாவில் தான் சிந்திய முதல் வியர்வைத் துளியிலேயே அதன் பயங்கரமும் தலைக்கு மேல் குறிவைக்கப்பட்ட ஆபத்தும் முபாரக்கிற்கு புரிந்து விட்டது. அஸ்திவாரம் தோண்டும் முன்பே கட்டிடத்தின் வாடகைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடுவதால் அவசர அவசரமாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கிடையே தரக்கட்டுப்பாட்டினையும், தொழிலாளர்களின் பாதுகாப்பும் பற்றி பேச நிறைய முதலாளிகளுக்கு நேரமிருப்பதில்லை.விளைவு, போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படாததால், தன் கண் முன்னே கான்க்ரீட் கலவைக்குள் சரிந்து புதைந்து போன தனது நண்பர்களை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் முபாரக். கம்பெனியில் கடந்த ஆறு மாதமாக சம்பளம் சரிவர வராத சூழலில் ஒவ்வொரு நாளும் இரவில் தத்தம் குடும்பத்தினைக் காப்பாற்றவும், நலிவுற்றிருக்கும் தன் சமுதாயத்தின் நிலை பற்றியும் பேசிப் பாதியிலேயே பிரிந்துவிட்ட தனது நண்பர்கள் நினைவு வர துக்கம் தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்திக் கொள்கிறார்.
12x7 சதுர அடி அளவிலுள்ள நான்குபேர் மட்டுமே தங்கக்கூடிய இவரது அறையில் பன்னிரண்டு பேருடன் தங்கியுள்ளார். மேல்மாடி டாய்லெட்டிலிருந்து கான்க்ரீட் கூரை வழியே சொட்டுச் சொட்டாய் கசியும் கழிவுநீருடன் தான் வாசம். ஒருவர் படுக்கையின் மீது அடுக்கடுக்காய் அமைந்துள்ள இன்னொருவர் படுக்கை. மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஒருபக்கம் என்றால், போல்ட் நட்டு சரியில்லாத இரும்புக் கட்டிலில் ஒருவர் திரும்பிப் படுத்தால் அவர் "அப்பார்ட்மெண்ட்"டில் உள்ள அனைவருக்கும் தூக்கம் கலையும். கம்பெனி கொடுக்கும் ஐநூறு திர்ஹத்தைக் கொண்டு இவரும் சாப்பிட்டு(?) உடுத்தி விட்டு எஞ்சியுள்ளதை வைத்து ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வித்தையை இங்கே தான் பார்க்க முடியும். ஓட்டல்களில் சாப்பிட்டு ராஜ போக (!) வாழ்க்கை வாழ சம்பளம் இடம் கொடுக்காததால் கிடைத்த சந்தில் அடுப்பை வைத்து கிடைக்கும் நேர இடைவெளிகளில் சமைத்துக்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை.
லேபர் டிபார்ட்மெண்ட் இதுபோன்ற கம்பெனிகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இவர் போன்றவர்கள் பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை. இரண்டு வருடத்துக்குள்ளாவது ஏஜண்ட் இடம் கொடுத்த கடனை வட்டியோடு அடைத்து விட்டு ஊர் திரும்பினால் கூட போதும் என்ற நிலையிலேயே பலர் தன்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்."பர்தாவுடன் மினி ஸ்கர்ட்டுகளையும், பள்ளிவாசல்களோடு சர்ச்சுகளையும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் கையாளும் வளைகுடா நாட்டு அரசாங்கங்களின் மனம் என் போன்றவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவில்லையே?" என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் இவர்.

அல்ஜஸீராவின் டாக்குமெண்டரி!

இந்த கண்ணீர்க்கதைகளை வெட்டிக்கதை பேசிக்கொண்டிராமல் கேமராவை இருட்டான லேபர் கேம்ப்களுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்து உலக அரங்கில் வெளிச்சமிடத் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதற்கு அல்ஜஸீராவிற்கு நன்றிகூற வேண்டும்.

"இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் - வளைகுடா தொழிலாளர்களின் வேதனைகள்!" என்ற பெயரில் டாக்குமெண்டரி அல்ஜஸீரா படம் பிடித்து உலகிற்குக் காட்டியுள்ளது. அல்ஜஸீரா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே உள்ள வீடியோவில் அதைக் காணலாம்.

முதல் பாகம்



இரண்டாம் பாகம்


வியர்வைத்துளி 2 - இப்ராஹிம்!
"மூன்று வருடங்கள் பதினோரு மாதங்கள்!" ஊர் போய் எத்தனை நாளாகிறது என்று 37 வயதான இப்ராஹிமைப் பார்த்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்தது இதுதான். பத்து வயது மகளுடனும் பன்னிரண்டு வயது மகனுடனும் இரு வாரங்களுக்கொருமுறை இண்டெர்நெட் போனில் உறவைப் புதுப்பிக்கும் இப்ராஹிம் "எங்களப் பாக்க எப்போ வர்றீங்க வாப்பா?" என்ற கேள்வியைப் பிள்ளைகள் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் வெளியேறியதில்லை."அல்லா காப்பாத்தணும்...இந்தியாவுக்கும் கல்ஃபுக்கும் இடையில ஏதாச்சிம் பெருசா தகராறு வந்து, எல்லா இந்தியர்களுக்கும் நாங்களே வேலை போட்டுத் தர்றோம். எல்லாத்தையும் திருப்பி அனுப்புன்னு இந்தியாவே கேக்கணும். எங்க நாட்டின் ஏர்போர்ட்டுகள் மூடப்படணும் அப்படியாச்சிம் எங்க குடும்பம் குட்டிகளோட சேர்ந்து நாங்க வாழ முடியுதான்னு பாக்கணும்!" என்றவரின் பேச்சில் தெறித்த இயலாமை முற்றிய வன்மம், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஊரில் சம்பாதிப்பதை விட நான்கு மடங்கு இங்கே கிடைக்கிறது என்பவர்களை விட "இதே நாய்ப்பொழைப்பை கேவலம் பார்க்காம ஊர்ல இருந்துகிட்டு உழைச்சேன்னா இதை விட எட்டு மடங்கு சம்பா திக்க முடியும்" என்ற முணுமுணுப்புகள் கேட்பது இங்கே சகஜம். சரி! பின்னே அதைச் செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் மெளனம்தான் பதிலாகக் கிடைக்கிறது!
சிவந்த கண்களுடன் பேசியவரை பார்த்து துக்கம் தொண்டையில் பந்துபோல் சுழல, பாதித் தூக்கத்தில் இருந்த அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டேன். அடுத்த நாள் கருக்கலில் எழுந்து தெம்புடன் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் விழுந்தால் தான் முடியும். பல பேருக்கு கனவுலக தாம்பத்யமும், பிள்ளைகளுடன் கற்பனைகளில் கொஞ்சிப்பேசவும் முடிவது அந்த சில மணித்துளிகளில் தான்.

பெரும்பாலானோரின் சம்பாத்தியங்கள் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை நனவாக்குவதிலேயே செலவாகின்றன ஒழிய, தாங்கள் சம்பாதிக்கும் பருவத்திலேயே அதனை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பொருளீட்ட எண்ணுவதில்லை.

ஆர்ப்பாட்டங்கள்/எதிர்க்கும் குரல்கள்எவ்வளவு தான் பிரச்னைகள் என்றாலும் ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் அசாதாரணம் என்றிருக்கும் துபாயில் கூட கடந்த வருடம் மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ததும், கண்ணில் பட்ட வாகனங்களை துவம்சம் செய்ததும் வளைகுடாத் தொழிலாளர்களின் பிரச்னைகளின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தியது எனலாம்.உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புர்ஜ்-துபை கட்டிடத்தின் தினசரி பணிகள் தொழிலாளர்களின் புரட்சியில் சென்ற வருடம் ஸ்தம்பித்துப்போனது.

"இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்னைகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதைத் தீர்க்க முயன்று வருகிறோம்" என்று சொல்கிறார், துபையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அலீ பின் அப்துல்லாஹ் அல் காஅபி."இவர்களை நாங்கள் கட்டாயப்படுத்திக் கூப்பிடவில்லை" என்கிறார் அலீ அல் காஅபி. "இவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே நான் பார்க்கிறேன்" என்கிறார்.ஆனால் மனித உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் மத்திய கிழக்கு பிரிவின் இயக்குனரான சாரா லீ விட்ஸன் அலீயின் இக்கூற்றை அடியோடு மறுக்கிறார் - "தனது சுயநலத்திற்காக அடுத்தவர்களின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்வது என்றால் அது இதுதான்!" என்று சாடுகிறார். "மெர்ஸிடிஸ் கார்கள் மூலமாகவோ, விண்ணை முட்டும் கட்டிடங்களாலேயோ மட்டும் வளைகுடா நாடுகளை உலக அரங்கில் மிளிர வைத்துவிட முடியாது. அத்தகைய வெற்றியும் வளர்ச்சியும், வளைகுடாத் தொழிலாளர்களின் நலனை முன்னுறுத்திக் கொண்டு சென்றால் தான் கிட்டும்" என்கிறார்.

வியர்வைத்துளி 3 - சாதிக் பாஷா!
இங்கே சம்பாதிப்பதைப் போன்று என்னால் ஊரில் மீன் பிடித்தே காலம் தள்ள முடியும் என்று அலட்சியமாக் கூறும் சாதிக் பாஷா தமிழகக் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். கடந்த நிமிடத்தில் அப்படிப் பேசியவர், பதினெட்டு வருடங்கள் கடந்தும் தன் எதிர்காலத்தைப் பற்றி தான் எவ்விதப் பிடிப்புமின்றி இருப்பதாகவும் எதிர்மறையாகப் பேசுகிறார். இத்தனை வருட காலங்களில் என்ன சம்பாதித்தீர்கள் என்றால் ஏற்கனவே இருந்த வாப்பாவின் நிலத்தில் தான் சிறிதாக ஒரு வீட்டை கட்டியதாகவும், ஒன்றே கால் லட்ச ரூபாயில் தனது தங்கைக்கு வரதட்சணை கொடுத்து "பெரிய" இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுத்ததாகவும் நாற்பதை நெருங்கும்போது தானும் கல்யாணம் செய்து கொண்டு இரண்டே மாதத்தில் இங்கே வந்து விட்டதாகவும் வேதனையுடன் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கூறும் சகோதரனைப் பாத்து எம்மால் விம்மாமல் இருக்க முடியவில்லை.
பொருளியல் குறிப்புகள்:
இந்தியாவின் வெறும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வளைகுடாவிலிருந்து வந்து சேரும் அந்நியச்செலாவணி ரூ. 126.40 மில்லியன் (ரூ. 12 ஆயிரம் கோடி) என்று அதிர வைக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்திக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தியோரு இலட்சம் இந்தியர்கள் வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் ஒரு அறிக்கையில் 36% பேர் 500 திர்ஹம் (US$ 120) சேமிப்பதாகவும், 37%பேர் 500 முதல் 1000 திர்ஹம் வரை (US$ 120-140)சேமிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரப் நியூஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி கடந்த வருடத்திற்கும் இவ்வருடத்திற்கும் இடையே ஏற்பட்ட பணவீக்கத்தினாலும் அமெரிக்க டாலரின் கிடுகிடு வீழ்ச்சியாலும் 30% சம்பளம் குறைந்திருக்கிறது. (கடந்த வருடம் திர்ஹம் மதிப்பு 12.70 ஆக இருந்தது இன்றைய நிலவரத்தில் 11.00 ஐ விட குறைந்து போயுள்ளது. சவூதியில் இன்னும் மோசம், அது 10.70 ஐயும் விட மோசமாக குறைந்தவண்ணம் உள்ளது.)
ஒருபக்கம் பணவீக்கம் காரணமாக வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் கிடுகிடுவென ஏறும் விலைவாசிகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. வீட்டு வாடகை எட்ட முடியாத உயரத்தில் பன்மடங்கு எகிறுவது ரியாத், ஜெத்தா, அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் என்றால் துபாய் மற்றும் கத்தரில் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சவூதியின் சில பகுதிகளைத் தவிர வளைகுடாவெங்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு தயாரிப்புக்குப் பெயர் போன வளைகுடாவில் 50% விலை உயர்ந்துள்ளது. மருத்துவம், இன்னபிற செலவுகள் பற்றி கேட்கவே வேண்டாம். விமான சேவைகளில் இருப்பவற்றிலேயே மிகமட்டரக சேவைகளுக்குப் பெயர் போன இந்திய வளைகுடா மார்க்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் சந்தடி சாக்கில் ஏற்றிய கொள்ளை லாப விலை உயர்வினாலும் பாதிக்கப்படுவது அடிமட்டத் தொழிலாளர்களே!
Pravasi Bandhu Welfare Trust (PBWT) அமைப்பின் சேர்மன் கே.வி. ஷம்சுத்தீன், இதுபற்றிக் கூறுகையில் இந்தியர்கள் வளைகுடாவில் சம்பாதிப்பதால் பயனொன்றும் இல்லை என்பதை இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த வருடங்களை விட இந்தியர்கள் வளைகுடாவில் சேமிப்பது 40% குறைந்துள்ளது என்பதான் உண்மை. இதில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளக்காரர்களே" என்கிறார்.
தற்போது வேலை செய்து வரும் வளைகுடா தொழிலாளர்கள் 1. செயல்திறனற்றவர் (Unskilled), 2. ஓரளவு கை தேர்ந்தவர் (Semi-skilled) மற்றும் 3. தேர்ச்சி பெற்றவர்(Skilled) என்ற மூன்று நிலைகளில் கட்டுமான, தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுகின்றனர். 500 திர்ஹமுக்குக் கீழே உள்ள சம்பளங்களில் வேலை செய்யும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கின்றனர். டெக்னிஷியன்கள், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், எலக்ட்ரீஷியன்கள், புரஃபஷனல் ரீதியில் பார்த்தால் டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், அக்கவுண்ட்டண்ட்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவெனில் படிப்புத் தகுதி அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புக்களும், வழங்கப்படும் வசதிகளும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமில்லை.
இந்தியாவில் ஒளிரும் வேலை வாய்ப்புக்கள்:
இந்தியாவில் மிளிரும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் இளம் தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் இளம் தலைமுறையினர் இப்போது குறைந்த சம்பளத்தில் நுழைவதில்லை. "கை நிறைய" காசு சம்பாதிக்கனும்னா கல்ஃப்க்கு போவனும்" என்கிற பழைய சித்தாந்தமெல்லாம் மாறியிருக்கிறது. ஆனால் வளைகுடாவில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் வருவதற்கு முன் தான் கண்ட இந்தியாவே இன்னும் கண்ணில் நின்று கொண்டிருப்பதை ஒரு வித துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் 2006-ஆம் வருடத்திற்குப் பிறகு வளைகுடாவில் வசந்தம் வீசும் என்று எல்லாம் எதிர்பார்த்து வேலை தேடி வருபவர்கள் கையில் வெண்ணையை வைத்து நெய்க்கு அலையும் "பாவப்பட்டவர்கள்" என்கிறது இன்னொரு அறிக்கை.
இப்போது இந்தியாவில் IT கம்ப்யூட்டர் இஞ்சினியர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஆச்சரியப் படத்தக்க வகையில் சிவில் இஞ்சினியர்களுத்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வளைகுடா நாடுகளுக்குத் தேவைப்படும் சிவில் இஞ்சினியர்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்து வர மறுத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவுகளும் அதிக சம்பளமும் தயாராக இருக்கிறது.
"உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதை விட அல்லது அதே அளவிற்கு சம்பளம் இந்தியாவிலேயே கிடைப்பதால் கஃல்ப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவில் வந்து பணியைத் தொடர்கிறார்கள்" என்கிறார் கட்டிடக்கலை தொடர்பான பெங்களூரிலிருந்து இயங்கும் Civil Aid Technoclinic Pvt. Limited நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சுனில் சன்னாட்.
வளைகுடாவைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்
வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேண்டி விரும்பிக் கேட்கும் உழைப்பிற்குப் பெயர் போன இந்திய தொழிலாளர்கள், இன்றைய தேதிக்குப் போதுமான அளவிற்கு வளைகுடா செல்லத் தயாரில்லை என்பதே யதார்த்த உண்மை. வளைகுடா நிறுவனங்கள் இந்திய விசா இல்லை என்று கையை விரித்த காலம் போய் விசாக்களை வைத்துக்கொண்டு, இந்திய மேன்-பவர் ஏஜண்ட்டுகளிடம் மல்லுக் கட்டுகின்றன.
Pravasi Bandhu Welfare Trust, ஷம்சுத்தீன் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்த மாத வருமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தன் குடும்பத்தினருக்கு மாத செலவுகளுக்கு உரிய பணம் அனுப்புவதற்காக தன்னுடைய அத்தியாவசியச் செலவையும் சேமிக்கும் கொடுமையைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
படிப்பு, வருமானம், குடும்பத்தை வளைகுடாவில் குடியமர்த்தும் பதவிநிலை, அவர்களை நம்பியிருப்போர், நாட்டிற்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள், சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் வழிமுறைகள், ஓய்வு பெறும் சூழல்கள், முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான வளைகுடா பணியாளர்கள் பத்தாயிரத்து நூறு பேர் பங்குபெற்ற இந்த சர்வேயில் 98 சதவீதம் பதிவான சர்வே விபரங்கள் கீழே:
சம்பாத்தியமும், சேமிப்பும்
5% - நிரந்தமாக ஓய்வு பெற்று நாட்டிற்குத் திரும்பிச்சென்றால் ஓரளவு நிம்மதியாக வாழும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளது.
2% - பணத்தை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர்
10% - குடும்பத்துடன் வளைகுடாவில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சேமிப்பில்லை.
15% - நான்காயிரம் திர்ஹமுக்கு மேல் சம்பாதிப்போர். சேமிப்பில்லை.
26% - விபரங்களைக் கொடுக்க மறுத்துள்ளனர்

இந்தியாவிற்கு பணம் அனுப்புவோர் விபரம்
31% ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார்கள்
24% இரு மாதங்களுக்கு ஒருமுறை
11% மூன்று மாதங்களுக்கு
34% பணம் அனுப்பியதில்லை. காரணம் சேமிப்பில்லை
23% சம்பாதிப்பதில் ஓரளவு சேமிப்பு இருக்கிறது
"வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது" என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், "சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்கிறார். "தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்" என்கிறார்.
இவ்வாக்கத்தை நாம் எழுதத் துவங்கியதன் பின்னணி யாதெனில், படிப்பறிவில்லாத தமிழ் இஸ்லாமியச் சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்டுமந்தையைப் போன்று செயல்பட்டு வரும் பழைய சித்தாந்தங்களைச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். பதினைந்து வருடங்கள் வளைகுடாவில் குப்பை கொட்டி பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்ட ஒரு தந்தையே எப்படியும் பாஸ்போர்ட் எடுத்து தன் மகனை வளைகுடாவிற்கு அனுப்பிவிடவே எத்தனிக்கிறார். இது, வளைகுடா தொழிலாளர்கள் படும் அல்லல்களின் பின்ணனியை முற்றிலும் அறியாததாலா? இல்லை குறுகிய காலத்தில் கைநிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்ற அரதப்பழசான சிந்தனை தரும் உந்துதலா?எது எப்படியோ, தமிழ் இஸ்லாமியச் சமுதாயம் இத்தகைய குறுகிய சிந்தனையிலிருந்து வெளியேறி தீர்க்கமான ஒரு புதுயுகத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆதங்கமும் அவாவும். தெளிவான சிந்தனையிலிருந்து புறப்படும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பொருளீட்ட வளைகுடா நாடி வரும் சமுதாயம், இப்போது சந்திக்கும் இழிநிலையில் இருந்து வெளியேறி புதியதொரு சரித்திரம் படைக்கும்.
கல்வியின் மகத்துவத்தையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் இதன் மூலம் உணரும். இதனை நம்மிலிருந்து துவங்குவோம். இறைவன் நாடட்டும்.
நன்றி!
ஆக்கம்: அபூ ஸாலிஹா
நன்றி : சத்தியமார்க்கம்.காம்

16 Sept 2007

யு.ஏ.இ விசிட் விசாவிற்கு ஆப்பு!!

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007
அபுதாபி:
சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்தால் அவர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளையும் அது வகுத்துள்ளது.இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இணைச் செயலாளர் ஓபைத் ரஷீத் அல் சஹாமி கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்து வேலையில் சேருபவர்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள். அவர்கள் எமிரேட்ஸுக்கு மறுபடியும் வரவே முடியாது.மேலும், இவர்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும். அவர்களை வேலையில் சேர்த்து விடுவோருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.இன்னும் சில வாரங்களில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றார் சஹாமி.

13 Sept 2007

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5% இட ஒதுக்கீடு - கருணாநிதி அறிவிப்பு

தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மற்றும் 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.இதனை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக இதுகுறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு பரிந்துரைக்குமாறு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான தமிழக அரசின் பிற்பட்டோர் நல ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.இதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்.கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வருகிற 15ம் தேதி முதல் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

12 Sept 2007

அஸ்ஸலாமு அலைக்கும்....

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்

11 Sept 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.
ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!

"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.

அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.

அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.

"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."

"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.

சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.

உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.

அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.

ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.

அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.

முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?

வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.

கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.

சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?

ஆக்கம்: அபூ ஸாலிஹா

நன்றி :சத்தியமார்க்கம்.காம்

9 Sept 2007

துபாயில் கணினி கண்காட்சி

துபாயில் ஜிடெக்ஸ் எனப்படும் கணினி கண்காட்சி தொடங்கியுள்ளது. வருகிற 12ம் தேதி வரை இது நடக்கிறது.வளைகுடா நாடுகளின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் ஜிடெக்ஸ் ( GITEX ) எனப்படும் கணினி கண்காட்சி துபாயில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. வருகிற 12ம் தேதி வரை நடைபெறுகிறது.இவ்வாண்டு நடைபெற்று வரும் கண்காட்சியில் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.இக் கண்காட்சி பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள பெரிதும் உதவிகரமாய் இருந்து வருகிறது.கண்காட்சியில் பங்கேற்க வசதியாக துபாய் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இலவச போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் லேப்டாப், கணினி, மொபைல் போன், கேமரா உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களும் கிடைக்கின்றன.இக்கண்காட்சி 17 வது ஆண்டாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சி குறித்த மேலும் விவரங்களை www.shopper.gitex.com எனும் இணையதளத்தில் காணலாம்।

thatstamil.oneindia.in

4 Sept 2007

வேலைத்தேடி வளைகுடா நாடுகளுக்கு வருகின்றவர்களின் கவனத்திற்க்கு..

இன்றைய தலைமுறை பரவாயில்லை. பெருமளவில் கல்வி கற்கின்றார்கள்.என்கிற சந்தோசத்தில் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை எண்ணி நாம் சற்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.இருந்தாலும் இன்று நமது மாணவ சமுதாயம் அடைந்திருக்கின்ற முன்னேற்றம் இன்றைய நவீன யுகத்தின் வேகத்திற்கு இன்னும் ஈடு கொடுக்கவில்லை. அவ்விதம் ஈடு கொடுக்க வேண்டும் என்கிற ஆசை நம் ஒவ்வொருவர் உள்ளங்களிலிலும் நிறைந்திருக்கிறது।வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பைத் தேடி வரும் இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்।1.கல்வியும் கற்காமல், எந்தவித கைத்தொழிலும் தெரியாமல் எந்த வேலைக்கும் தயார் என்று வேலைத் தேடுபவர்கள்.2.இன்றைய தேவைக்குகந்ததை கல்லாத பட்டதாரியாக, பணி அனுபவமில்லாமல் சரியான ஆங்கில உரையாடல் தெரியாமல் திணறிக் கொண்டு முடிந்தவரை படிப்புக்கு தகுந்த வேலையைத் தேடி கிடைக்காமல் அலுத்துப் போய் எந்த வேலைக்கும் தயார் என்கிற நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்பவர்கள்.இரண்டாவது வகையை சார்ந்தவர்களைப் பார்த்து ஆதங்கப் பட்டுக் கொண்டிருக்கின்ற கல்லாத உள்ளங்கள் கற்ற இளம் சகோதரர்களின் நிலை உயர்ந்தாக வேண்டும், தற்போது கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றவர்களின் எதிர் காலம் உன்னதமானதாக விளங்க அவர்கள் சரியாக தயாராக வேண்டும் என்கிற ஆவலுடன் அதற்கான தீர்வுகளையும், வழிக்காட்டுதல்களையும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் வழங்க வேண்டும் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இளம் பட்டதாரிகளில் பெரும்பாலோர் இன்றைய நவீன உலகிற்கு மிகவும் தேவையானவற்றைக் கற்பதில்லை. பொதுவாகவே ஆங்கில உரையாடலில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றார்கள் என்பதுதான் எல்லோராலும் அக்கறையுடன் சுட்டிக்காட்டப் படுகின்ற உண்மை நிலை.இன்றைய அதிவேக உலகம் கற்பனைக்குதிரையின் வேக ஓட்டத்திற்கேற்ப கடலைத் தூர்த்து கனவு நகரங்களைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறது.முன்னேறும் நாடுகள் பலவற்றிலும் கட்டுமானப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.ஒரு ஊரின் மக்கள் தொகையையை ஓரிரு கட்டிடங்களில் நிரப்புகின்ற வகையில் அழகியக் கலைநுட்பத்துடன் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன புதுப்புதுக் கட்டிடங்கள்.பல்லாயிரக் கணக்கான வல்லுநர்கள் குழுவாக சாதனைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனாலும் கட்டிடக்கலை நிபுணர்களுக்கு இன்னமும் வேலைவாய்ப்பு சந்தையில் வாய்ப்புகள் ஏராளம். சம்பளம் மற்றும் சகல வசதிகளும் தாராளம்.ஆம். இன்றைய இளம் மாணவர்கள் எதைப் படிக்கலாம் என்று கேட்டால் ‘கட்டிடக்கலைப் பொறியியல்’ என்றுதான் எங்கும் விடை கிடைக்கின்றது.இந்தியா உள்பட எல்லா நாடுகளிலுமே இந்த கல்விக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.இன்னும் ஆங்கில உரையாடல் குறைப்பாட்டை எப்படி நீக்குவது?இன்றைக்கு ஆங்கில உரையாடல் பயிற்சிக்கு அநேக வழிமுறைகள்அறிமுகப் படுத்தப் பட்டாலும் பெரும்பாலும் ஆங்கில மொழியின் இயல்பான நடையிலிருந்து மாறி நமது மொழியின் இயல்பு நடையை அப்படியே மொழிப் பெயர்த்து பேசுவதாகத்தான் அவை அமைகின்றன.இந்த குறைபாடுதான் நாம் ஆங்கிலத்தில் பின்தங்கிய நிலையிலிருப்பதற்கான அடிப்படைக் காரணம்.சிறந்த வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளை அறிந்து பயிற்சி பெற ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாவலாசிரியர்களின் நாவல்களை படிக்கத் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் கற்றறிந்தவர்களிடம் கேட்டு அர்த்தங்களைப் புரிந்துக் கொண்டு பயிற்சி பெற்று பேசத் துவங்கும் போது நமது இளம் மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் சுற்றியுள்ளவர்களை, ஏன் அவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்காலத்தை வீணாக்காமல் அதற்கான முயற்சியை இன்றே, இப்போதே துவக்க வேண்டும்.சமுதாயம் என்னும் ஆலமரத்தைத் தாங்கும் விழுதுகளாய் மாணவர்கள் உறுதியுடன் வாழ்க்கையின் வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.நன்றி.

நீடூர்-நெய்வாசல்

3 Sept 2007

சகோதரர்/நண்பர்களுடன் பழக வேண்டிய முறை

இஸ்மாயிலும் இப்ராஹிமும் நெருங்கிய நண்பர்கள்.
ஒருநாள் பாலைவனப்பகுதி ஒன்றை சுற்றிப் பார்க்க வந்த அவர்கள், திரும்பிச் செல்ல வழி தெரியாமல் தவித்தனர். சூரிய வெப்பத்தின் தாக்கம் ஒரு பக்கமும், அனலை வாரி இறைக்கும் சுடுமணல் மறுபக்கமும் அவர்கள் கொண்டு வந்திருந்த நீரை விரைவில் காலியாக்கி விட்டிருந்தது.
வழி தெரியாத விரக்தியுடன் பசியும், தாகக்கொடுமையும் ஒன்று சேர்ந்துவிட, வழி தவறியதன் காரணத்தை ஆராய்ந்த அவர்களின் பேச்சு, ஒரு சமயத்தில் கடும் விவாதமாக மாறி விட்டது. பேச்சின் இடையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற இஸ்மாயில் தன்னிலை மறந்து இப்ராஹிமின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். மனம் புண்பட்ட இப்ராஹிம், மேற்கொண்டு எதுவும் பேசாமல் மவுனமாக சுடுமணலில் அமர்ந்து இவ்வாறு எழுதினான்:
"என்னுயிர் சகோதரன், என் கன்னத்தில் அறைந்த நாள் - இன்று"அதன் பின்னர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கடுமையான நீர் தாகத்துடனே வெகு நேரம் நடந்த அவர்கள், இருவரும் தொலைவில் ஒரு பாலைவனச் சோலை தெரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மகிழ்ச்சியுடன் அங்குள்ள குளத்தின் நீரை அள்ளிப்பருகிய இருவரில் இப்ராஹிம், பாலைவன சூட்டில் ஆர்வம் தாளாமல் குளிப்பதற்காக குளத்தில் குதித்தான். சிறிது நேரம் சென்றது.
குளத்தின் கரையோரம் மரங்களின் நிழல் தந்த சுகத்தில் லேசாகக் கண்ணயர்ந்திருந்த இஸ்மாயில், திடீரென கேட்ட இப்ராஹிமின் கூக்குரல் கேட்டு அதிர்ச்சியடைந்து குளத்தின் பக்கம் ஓடினான். அங்கே மரத்தின் வேர்களுக்குள் சிக்கி நீந்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த இப்ராஹிமைக் கண்டு உடனடியாக தாமதிக்காமல் தானும் குளத்தில் குதித்தான். கடும் சிரமங்களுக்குப் பின்னர் இப்ராஹிமை கரையோரமாக இழுத்து வந்தான் இஸ்மாயில்.
அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட இப்ராஹிம் சிறிது நேரம் கழித்து உணர்வு பெற்றான். நன்றியுடன் தன் நண்பனை பார்த்துக்கொண்டே சுற்றும் முற்றும் நோக்கி சற்று தள்ளி இருந்த பெரும் பாறை ஒன்றில் இவ்வாறு செதுக்க ஆரம்பித்தான்:
"என்னுயிர் சகோதரன், உண்மையிலேயே என்னுயிரைக் காத்த நாள் - இன்று "
இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்மாயில், "முன்பு நான் உன் கன்னத்தில் அறைந்தபோது பாலைவனத்தின் மணலில் எழுதிய நீ, இப்போது தேடிப்பிடித்து கல்லில் இதனை செதுக்குகிறாயே! ஏன்?" என்று சந்தேகத்துடன் நண்பனிடம் கேட்டான்.
லேசாக புன்னகைத்த இப்ராஹிம், "நம் சகோதரன் ஒருவன் உடலாலோ, உள்ளத்தினாலோ நமக்குத் தீங்கிழைத்து விட்டால் அத்தகைய செயல்களை, எதையும் நிமிடங்களுக்குள் மூடி மறைத்து விடும் பாலைவன மண்ணைப் போன்று மிக விரைவில் மறந்து மன்னித்து விடுமாறும், அதே சமயம் அச்சகோதரன் நன்மையான காரியங்களைச் செய்துவிட்டால் அதனைக் கல்லில் செதுக்கி வைக்கும் எழுத்துக்கள் நீண்டகாலம் நிலைத்திருப்பது போன்று என்றென்றும் மறவாமல் நிலையாக மனதில் நன்றியுடன் பதிய வைத்து நன்றி பாராட்டுமாறும் இஸ்லாம் நமக்குப் போதித்துள்ளது. இதனை ஏற்கனவே நீ அறிந்திருந்தாலும் அதனை உனக்கு வேறு வகையில் மனம் புண்படா வண்ணம் மென்மையாக உணர்த்த எண்ணியே இவ்வாறு செய்தேன்" என்று கூறினான் இப்ராஹிம். இதைக் கேட்டு வெட்கம் அடைந்து தலை குனிந்திருந்த இஸ்மாயிலின் கண்களிலிருந்து வடிந்த நீர் துளிகள், தன் உயிர் நண்பனை காயப்படுத்தியதற்கு அவன் மனதார மன்னிப்பு கோரியதையும், சகோதரர்/நண்பர்களுடன் பழக வேண்டிய முறை பற்றி தெளிவான முழு அறிவை அவன் பெற்றுக் கொண்டதையும் ஒருங்கே உணர்த்தின.
7:199 எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக! மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
7:200 ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

(மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலச் சிறுகதை)

தமிழாக்கம்: அபூ ஸாலிஹா
நன்றி : www.satyamargam.com

2 Sept 2007

நீங்களும் புகுந்து விளையாடலாம் இந்த சட்டம் மூலம்

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
ரயில்வேயை அலற வைத்த 'பொது ஜனம்'

சாத்தான்குளம்: லஞ்சம் தராததால் தன்னை பாதி வழியில் இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகரையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தென்னக ரயில்வேயையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அலற வைத்துள்ளார் ஒரு திருவாளர் பொதுஜனம்। சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஹென்ஸ் குமார் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி திருச்சூர் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸில் ரயிலில் முன் பதிவு செய்தார்। அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கிடைத்தது। பயண தினத்தன்று ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டைக் காட்டி விபரம் கேட்டார். அதற்கு அவர் நாகர்கோவிலில் உங்களுக்கு பெர்த் கிடைக்கும் என்று கூறியதால் ஹென்ஸ் குமார் ரயிலில் ஏறினார். நாகர்கோவில் வந்ததும் டிக்கெட் பரிசோதகர், உங்களுக்கு பெர்த் உறுதியாகிவிட்டது. ஆனால், ரூ. 100 (லஞ்சம்) தந்தால்தான் பெர்த் தரப்படும் என்றார். என்னிடம் பணம் இல்லை என்று ஹென்ஸ் குமார் கூறியதையடுத்து அவரை டிக்கெட் பரிசோதகர் வலுக்கட்டாயமாக அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிட்டார். இது குறித்து ஹென்ஸ்குமார் சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து தனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to information act) மூலம் அறிந்து கொள்ள விரும்புவதாகக் தென்னக ரெயில்வேக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து சிக்கலில் மாட்டிய தென்னக ரயில்வே அதிகாரிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஹென்ஸ் குமாரை நேரில் சந்தித்த அந்த டிக்கெட் பரிசோதகர், மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு புகாரை வாபஸ் பெறுமாறும் கெஞ்சியுள்ளார். அந்த டிக்கெட் பரிசோதகரின் வேலை காலியாகும் நிலை ஏற்பட்டதால் ஹென்ஸ் குமாரும் மனமிறங்கி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது மிகப் பெரிய ஆயுதம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் தவறு செய்யும் அரசுத்துறையினரை அலற வைக்க முடியும். www.thatstamil. com