26 May 2008

விலையை குறைத்தால் மட்டும் போதுமா ?

தமிழக உணவகங்களிலே, உணவுகளுக்கு விலைகுறைப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

உணவக அதிபர்களும் விலை குறைப்பு செய்வதாக ஒப்புக்கொண்டனர் என்று செய்தி வெளியானது.

கடந்த 3 ஆண்டுகளில் உணவுப் பொருட்கள் மீதான விலை அசுரத்தனமாக எகிறியுள்ளது என்றுதான் கூறவேண்டும். 2 ரூபாய் இருந்த டீ 2.50 ஆகி இப்போது 3 ரூபாயாக உயர்ந்து விட்டது. வடையும் 3 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தரமான உணவகங்களிலே மதிய வேளை சைவ சாப்பாடு, சுமாராக 30 ரூபாயாக உயர்ந்து விட்டது. அதுவே அசைவ உணவுக்கு 50 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. இது எல்லாம் அளவு சாப்பாட்டுக்குத்தான்.

அளவு சாப்பாடு என்பது வயிற்றுக்குப் போதிய அளவு சாப்பாட்டை குறிக்காது. அது கொடுக்கும் நோய்க்குள் அடங்கும். கூடுதல் உணவை மேலும் ஒரு தட்டு வாங்கி சாப்பிடத் தூண்டும் அளவுக்கு அளவு சாப்பாடு அளந்து தரப்படுகிறது. சில உணவகங்களில் உணவை நிறுத்துத் தருகிறார்கள். சரியாக 400 கிராம், 500 கிராம் இருக்கும் என்கிறார்கள்.

சென்னையில் சாதாரணமாக மூன்று வேளை சாப்பாட்டுககு நாள் ஒன்றுக்கு ரூ75 செலவிடவேண்டும். சராசரியாக ஒரு மாதத்திற்கு சாப்பாட்டுக்கு மட்டும் 3000 ரூபாய் செலவிட வேண்டி வரும். குறைந்தது மாதம் ஒன்றுக்கு 4000 முதல் 5000 வரை சம்பாதிப்பவர்கள், சாப்பாட்டுக்கும், போக்குவரத்திற்கும் போக எண்ணிப் பார்த்தால் மீதமாக இரண்டு கைகளிலும் பத்து விரல்கள் தான் மிஞ்சும்.

புதிய புதிய வேலைவாய்ப்புகளுக்காக நகரங்களுக்கு நகர்ந்து செல்லும் இளை ஞர்கள் லாட்ஜ்களிலும், மேன்சன்களிலும் வாடகைக்கு அறை எடுத்து தங்குகின்றனர். இவர்களின் உணவு தேவைகளால் நகரங்களில் உணவகங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நல்ல தரமான ஊதியம் பெறுபவர்கள் விலையை கேட்காமல் சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்கின்றனர்.

சிலர் வாடிக்கையாளர்களாகி மாதந்தோறும் மொத்தமாக காசு கொடுத்து விடுகின்றனர். அதே விலை உள்ளூர்வாசிகளுக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களது ஊதியம் போதியதாக இல்லாத போது, உணவுக்கான செலவுக் காசை ரசத்தில் கரைத்து விடுகிறது. இதனால், விலை குறைப்பு அறிவிப்பு அரசின் அக்கறை பாராட்டத்தக்கது.

அதே நேரம் விலை குறைக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் ஏதாவது இருக்கிறதா? தரம் என்று வருகிறபோது, அதை நினைத்துப் பார்ப்பவர்களால் உணவை ஜீரணிக்க முடியாது. சந்தைகளிலே, அழுகிப்போன கழிவுகளை உணவகங்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. குறைந்த விலைக்கு வாங்கிப் போய் சமைத்து கொடுக்கின்றனர்.

சொத்தை கத்தரிக்காய், அழுகிய தக்காளி, புழு உள்ள வெண்டைக்காய், முற்றிய முருங்கைக்காய், வறண்டு போன அவரைக்காய் என எல்லாம் ஓட்டல் சமயலறையில்.

இதை எல்லாம் நினைத்துப்பார்த்தால் சாப்பிடும் இடத்தில் வாந்தியே வரும். அவசர கதியில் இயங்குபவர்களுக்கு இந்த கவனம் இருப்பதில்லை. அசைவ உணவகங்களிலே கோழி குருமா தருகிறார்கள். குருமாவுக்காக அவர்கள் கோழி வாங்குவதில்லை. கோழியில் இருந்து கழித்துப் போடும் தோல், இரைப்பை, ஈரல், தலை, கால்கள் எல்லாம் ஆக குறைந்த விலைக்கே வாங்கி நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

உணவகங்களில் மாட்டுக்கு போடும் முள்ளங்கியை தவிர கத்தரிக்காய், வெள்ளரிக்காய், முருங்கை காய்கறிகளை காணமுடிவதில்லை.
இவற்றில் நல்லவிதமாக சமைக்கப்பட்ட உணவுகள் உள்ள இடங்கள் உயர்தர உணவகம் என்று குறிப்பிடப்படுகிறது. குறைந்தது 60 முதல் 80 ரூபாய் வரை உணவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

அடுத்ததாக கேரள மக்கள் வந்து உணவகம் நடத்தும் இடங்களில் உள்ள அவலம் தரத்திற்கு எந்த சான்றிதழ்களும் இல்லை. மேலும், பரோட்டோ தருவார்கள், அதற்கு குருமா தரமாட்டார்கள். குருமா தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டும்.

3 பரோட்டா 10 ரூபாய் என்றால் அதற்கான குருமா 30 ரூபாயாக உள்ளது. தமிழர்களை இழிச்சவாயன் என்று நினைக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். 3 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் விற்று வருகிறார்கள். இவற்றை தடுப் பதற்கு ஒரு அரசாணையே தேவைப் படுகிறது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள வர்த்தக கடைகளில் அனைத்துப் பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக விற்கப்படுகின்றன. ஒரு வடை 5 ரூபாய் ஒரு இட்லி 4 ரூபாய். ஒரு தோசை 14 ரூபாய். ஒரு தண்ணீர் உறை 1.50 அல்லது 2 ரூபாயாக உள்ளது. காரணம் கேட்டால் லட்சக்கணக்கில் ஏலத்திற்கு எடுத்திருக்கிறோம். அதனால் இதுதான் விலை என்கின்றனர். ஏலத்தில் கடை எடுப்பவன் நிர்ணயித்த காலத்திற்கும் சம்பாதிக்க முடியாத அளவு ஏல விலையை நிர்ணயிப்பதும் பின்னர் எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விற்று கொள்ளலாம் என அனுமதிப்பதும் அரசாகவே இருப்பதால் யாரை குறை கூறுவது?

பயணிகளின் அவசரத்தையே தங்கள் கொள்ளை லாபத்திற்கு தோதாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பேருந்து, ரயில் நிலையங்களில் விலை குறைப்புக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

உணவகங்களில் தரமான, சுத்தமான, அழுகாத காய்கறிகள் உபயோகிக்கப்படுகிறதா என்பதை அதிரடி ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை அமைக்க வேண்டும். துரித உணவகங்களில் கோழி உள்ளிட்ட பிராணிகள் உணவுக்காக கொல்லப்பட்டு குளிரூட்டும் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துகின்றனர். அவற்றை உண்பதால் உணவு செரிமான கோளாறு, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்ற வியாதிகள் உண்டாகின்றன. இதுதான் காரணம் என்பதை புரியாமல் தொடர்ந்து அத்தகைய உணவுகளை வாங்கி உண்கின்றனர்.

அசைவங்களால் செய்யப்பட்ட ரோஸ்டர் உணவுகள் தயாரிக்கப்பட்டு பல நாட்கள் 'வெப்ப கட்டுப்பாடு வைப்புகளில்' வைத்து விற்பனை செய்கின்றனர். இத்தகைய உணவுகள் குறித்து மருத்துவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மக்களும் விழிப்படையவில்லை. உணவக உரிமையாளர்களுக்கு மனிதாபி மானமும் இருப்பதில்லை. ஆட்சியாளர்களும் அக்கறை காட்டுவதில்லை. எண்ணெயில் பொரித்த உணவுகளால் இருதய நோய் அடைப்பு கொழுப்பு சார்ந்த நோய்கள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எண்ணெயில் பொரித்த உணவு விற்பனை செய்வதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். உணவு தடை உரிமை சட்டம் மத்திய அரசிடம் இருப்பதனால், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாததால், பான் பராக் போன்ற அநீதிகள் நீதிமன்றங்களாலேயே விற்பனைக்கு மறு அனுமதி வழங்கப்படுகின்றன.

உணவு சார்ந்த அவலங்கள் ஒழிய மத்திய அரசே ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அளவுக்கு உணவு சார்ந்த பிரச்சனைகள் பிசாசு பிடித்து கிடக்கிறது.

-ஜி.அத்தேஷ்

தகவல் : http://www.tmmkonline.org/

25 May 2008

அதிர வைக்கும் பால் கலப்படம்



குளிர் பானங்களில் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன' என்ற பிரச்னை நாட்டையே உலுக்கி எடுத்தது. இது ஏதோ மேல்தட்டு மக்களின் பிரச்னை என்று நடுத்தர வர்க்கத்தினரும் சாமானியர்களும் இருந்துவிட்டார்கள்.
ஆனால் இன்று, எல்லா தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் ஜீவாதாரமாய், உயிர் மூச்சாய் விளங்கும் பாலில் பெரிய அளவில் கலப்படம் நடந்து வருவதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசுவின் பாலைப் பருகிதான் லட்சக்கணக்கான குழந்தைகள் வளர்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியம் என்று நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாலை அருந்தி வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிர் நாடியான பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் நாடு முழுவதும் ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
இதுவரை பாலில் தண்ணீரைக் கலந்து காசு பார்த்த கும்பல், இப்போது ஒரு வித பவுடரைக் கலந்து அதிகளவு காசு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஒரு வித மாவுப் பொருள்தான் அந்தக் கலப்படப பொருள். யாரும் எளிதில் கண்டு பிடித்துவிட முடியாத அளவிற்கு படு சீக்ரெட்டாக அந்த பவுடரை விற்கிறார்கள். கிலோ 800 ரூபாய். ( அந்த பவுடர் பெயரையோ, அதை எதில் தயாரிக்கிறார்கள் என்ற ரகசியத்தையோ அது எங்கிருந்து விற்பனைக்கு வருகிறது என்பதையோ சொல்ல மறுக்கிறார்கள். )
இப்படி வாங்கிய பவுடரை எப்படி பாலாக மாற்றி பால் கலப்படம் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, பால் பண்ணை வைத்திருக்கும் ஒரு நபரோடு தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் நாம் விசிட் அடித்தோம்.
``ஒரு டீஸ்பூன் அளவு பவுடருடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதை மிக்ஸ்சியில் போட்டு பத்து நிமிடம் அரைக்கிறார்கள். அப்போது அது தயிர் போன்ற நுரை கலந்த வெள்ளை கலரில் வருகிறது. அதை அப்படியே 25 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் 200 கிராம் சீனியை போட்டு நன்கு ஆற்றுகிறார்கள். தண்ணீரோடு கலந்து பிசுபிசுப்புத் தன்மையோடு பாலாக மாறியது பவுடர் மிக்ஸிங். அந்த 25 லிட்டர் கலவைப் பாலில் 25 லிட்டர் ஒரிஜினல் கறவைப் பாலை கொண்டு வந்து ஊற்றுகிறார்கள். தற்போது கலவை பாதி, கறவை பாதி என 50 லிட்டர் பால் சில்லறை விற்பனைக்கும், பண்ணைக்கும் கேன்களில் நிரப்பப்பட்டது. இந்தக் கலப்படப் பால்தான் ஊர் ஊராக சைக்கிளில் வைத்து விற்பவர்களுக்கும், டீக்கடைகளுக்கும், பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும் கூட விற்பனை செய்யப்படுகிறது.

கலவைப் பாலையும், ஒரிஜினல் பாலையும் தனித்தனியே வைத்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என பால்மானியை வைத்துப் பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கூடவே எஸ்.எம்.எஃப் ( கொழுப்புச் சத்து, இதர சத்து ) அளவு எவ்வளவு என பார்த்ததில் ஒரிஜினல் பாலை விட கலவைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக காட்டியது.

தனியார் மற்றும் ஆவின் போன்ற குளிரூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யும் பால் கம்பெனிகளில் பாலின் தரத்தையும் விலையையும் நிர்ணயிப்பது இந்த அளவை வைத்துதான். அதனால் கலப்படப் பாலைக் கண்டுபிடிப்பது கடினம். இந்த கலப்படப் பாலில் புளியோ, வியர்வையோ பட்டால் கூட பால் கெட்டுப்போகாது என்கிறார்கள்.
இந்த கலப்படம் பற்றி ஓய்வு பெற்ற ஆவின் அலுவலர்களிடம் கேட்டோம். ``பாலில் கலப்படம் நடப்பது உண்மைதான். ஆங்காங்கே மனசாட்சிக்கு விரோதமா பணத்திற்கு ஆசைப்பட்டு இது போன்ற கலப்படப் பாலை விற்கிறார்கள். பெரும் பண்ணைகளில் கொழுப்புச் சத்து, இதரசத்து அளவுதான் பார்ப்பார்கள். பாலில் தண்ணீர் கலந்தால் கொழுப்புச் சத்து அளவு குறையும். அதனால் காசு கொள் முதல் அளவும் குறையும். ஆனால் கலப்படப் பாலில் கலக்கும் பவுடரில் என்ன கெமிக்கல் கலந்த மோசமான கொழுப்புச் சத்தைக் கலக்கிறார்களோ தெரியலை. கொழுப்புச் சத்து அளவு கூடுதலாக காட்டும். அதோடு இதர சத்துக்களை காட்ட அந்த அளவிற்கு சீனியை கலந்துவிடுகிறார்கள்.
இது பணத்திற்காக பாலில் விஷத்தைக் கலப்பது போன்றதுதான். தீவன பற்றாக்குறை மற்றும் மாடு வளர்ப்பு குறைந்த போதும் இன்றையத் தேவைக்கு ஏற்ற அளவு பால் கிடைக்கிறது என்றால் பெருகிவிட்ட இதுபோன்ற பால் கலப்படங்களால் தான்'' என கொட்டித் தீர்த்தனர்.
அன்றாடம் பால், டீ, காபி என விற்பனைக்கும், உபயோகத்திற்கும், பயன்பட்டுத் தீர்ந்து விடுவதால் அது கலப்படக்காரர்களுக்கு சாதகமாகி விடுகிறது.
தாய்ப்பால் இல்லாததால் புட்டிப்பால் அருந்தும் குழந்தைக்கும், அன்றாடம் பால், டீ, காபி என குடித்து பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் இது போன்ற கலப்படப் பாலைக் குடித்தால் `ஸ்லோ பாய்ஸ்சனாக' உடல் நலம் பாதிக்கும் என்ற அச்சத்தால் மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
பால் விலை உயர்ந்த போதும் தங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஜீவாதாரமான பாலை அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் மக்களை இது போன்ற கலப்படப் பால்களால் ஏமாற்றுவது நியாயமா? தண்ணீரில் பவுடரைக் கலந்து பாலை நஞ்சாக்கி பணம் சம்பாதிக்கும் கொடூர மனம் கொண்டவர்களுக்கு என்னதான் தண்டனை?
நன்றி : குமுதம்

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு
(B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION )
கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்
நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்.
தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.
விதிமுறைகள் : ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும். படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும். படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.
அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008
( முதலாம் ஆண்டு தொழில் நுட்ப படிப்புகள் ) ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ) ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )
B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ரோடு,
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
E mail : admin@bsazakaat.org,
தகவல் உதவி : விடியல் வெள்ளி - மே 2008

21 May 2008

பிளஸ்-1 வகுப்பில் சேர அரசு நிதி உதவி

அரசுப் பள்ளிகளில் 10-வது படித்தவர்கள்
சிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேர அரசு நிதி உதவி
சிறந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


சென்னை, மே 21-

அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள், சிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயில அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.56 ஆயிரம் நிதி உதவி

ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பை சார்ந்த திறன்மிக்க மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயில அரசு நிதியுதவி வழங்கும் திட்டம், 2007-2008-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 2 மாணவர்கள் 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து பிளஸ் 1 பயில ஆண்டொன்றுக்கு ரூபாய் 28,000-த்துக்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு மொத்தம் ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம்

இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தலைசிறந்த பள்ளிகளில் சேர்ந்து பயில்வதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் இடம் பெற்றும்ள கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகம் விரைவில் வெளியிடப்படவிருப்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று பயன் பெறலாம்.

19 May 2008

ஹைவே ஹோட்டல்கள் .ஹை டெக் தில்லு முல்லுகள்.

உலகிலேயே மிக அசுத்தமான இடத்தில் காஸ்ட்லியான வியாபாரச் சந்தை எதுவென்றால், அது தமிழகமெங்கும் விரவியிருக்கும் மோட்டல்கள்தான்.

ஆம்! மோட்டல் எனப்படும் பேருந்து பயணத்தில் சாலையோர உணவகங்களில்தான் மேலே சொன்ன மகா கொடுமைகள்.

‘‘கீரையில உப்பு அதிகம். உருளைக்கிழங்கு வேகவே இல்லை. ரசம்ங்கிற பேர்ல கோமியம். அரை வேக்காட்டில் புழுத்துப்போன சாப்பாட்டுக்கு அம்பது ரூபா புடுங்கறீங்களே’’ என்று பயணி ஒருவர் சென்னை செல்லும் வழியிலுள்ள மோட்டலுக்குள் எகிற, அவரை அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்டு விட்டனர்.

கேள்வி கேட்டவர் இன்று மாதச் சம்பளத்தை இழந்து கைகால் ஊனமுற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கிறார்.

‘‘ஒரு காப்பியைக் கொடுத்துட்டு பத்து ரூபாய் என்கிறீங்க. காப்பியில பால் சுத்தமாவே இல்ல. என்னய்யா காப்பி விக்கிறீங்க?’’ என்று கொதித்துப்போன வழக்கறிஞர் காபியைக் காட்டிலும் சூடாகியிருக்கிறார். கடைசியில் இருதரப்பிலுமே கைகலப்பில் முடிந்திருக்கிறது.

தாறுமாறான விலை. தரங்கெட்ட மினிமம் கியாரண்டி. அவர்கள் வைத்ததே சட்டம் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சில சாம்பிள்களே!

‘‘மோட்டல்கள் இருக்கும் நட்ட நடு காட்டுப்பகுதியில் அவர்களை மீறி யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அந்தளவிற்கு மோட்டலில் வேலை பார்க்கும் ஆட்கள், அடியாட்கள் ரேஞ்சிற்கு அதட்டி மிரட்டி வியாபாரம் செய்வதுதான் அவர்களின் பெரிய பலம்’’ என்கிறார் சமூகநல ஆர்வலர் ஒருவர்.

காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான உயரதிகாரி ஒருவர்,

‘‘அடிக்கடி சென்னை போய்ட்டு வரக்கூடிய ஆளுங்க நான். நானே பல இடங்களில் அவங்களோட செயல்பாட்டை கண்டு கோபப்பட்டிருக்கேன். ஒருமுறை விக்ரவாண்டி மோட்டல்ல சாப்பிட நேர்ந்தது. ரெண்டு தோசையை வச்சாங்க. என்ன கறின்னு தெரியலை? கிண்ணத்துல கறியைக் கொண்டு வந்து வச்சாங்க. நான் கேட்டது தோசை மட்டுந்தான். ஆனா, அவங்களா கறின்னு கொண்டு வந்து வச்சுட்டு சட்டை பண்ணாம போய்ட்டாங்க. நான் எதிர்த்துக் கேட்டப்போ, இதுதான் இருக்கு. சாப்பிடறதா இருந்தா சாப்பிடுங்க. இல்லைன்னா அறுபது ரூபா பணத்தைக் கொடு’ங்கன்னு பில்லை வச்சுட்டான். நாம பேச சாய்ஸே தரமாட்டாங்க. நான் பிரச்னை பண்ணிட்டேன். உடனே அங்கிருந்த கேஷியர் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி ‘அண்ணந்தான் இன்சார்ஜ். அங்க பேசுங்கன்’னு காலரைத் தூக்கி விடுறான்!?’’ என்கிறார்.

‘‘பிஸ்கெட், வாட்டர் பாட்டில் எல்லாமே ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும். சில இடங்களில் பொம்பளைங்க பாத்ரூம் போறதுக்கு மட்டும் அஞ்சு ரூபாய்க்கு அதிகமா வாங்கிறாங்க. ஏன்னா அவங்களால மோட்டலை சுத்தி வேற எங்கேயும் போகமுடியாது. ஆம்பளைக போனா உருட்டுக்கட்டையால அடிச்சு ஆளைகாலி பண்ற மாதிரி அடாவடி வேலைகளாம் பண்ணி பெட்டுல படுக்க வைச்சுருவானுக. இதெல்லாம் பாக்கிறப்ப வயித்தெரிச்சலாத்தான் இருக்கு’’ என்று குமுறுகிறார் இன்னொரு பயணி.

சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் தனியார் வங்கி ஊழியரோ,

இங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரிய பாவப்பட்டவர்கள். ஏனெனில், தன் வாழ்நாளில் யாரிடமும் வாங்காத பேச்சுக்களையும் திட்டுகளையும் இங்கே சிறுநீர் கழிக்கும் இருபது முப்பது நொடிகளுக்குள் வாங்கிவிடுவார்கள். இன்னும் ஒரு சிலரோ, ரத்தம் சொட்ட உருட்டுக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.

‘‘அரை கப் பால் பதினைஞ்சு ரூபா. காஞ்சு போன இள நீர் இருபது ரூபா. ஒரு கப் புளிச்ச மாவுல ஊத்துற ஊத்தப்பம் பதினெட்டு ரூபா. ஒரு இட்லி ஆறு ரூபா. அஞ்சு ரூபாய்க்கு பொறாத கூல்டிரிங்ஸ் பதினைந்து ரூபா. இதெல்லாம் எந்த நாட்டுலங்க? அநியாயத்தை யாருமே தட்டிக் கேட்கிறதில்லை. மீறி கேட்டா, ‘ஒருமையில பேசி அந்தப் பகுதியில இருக்கிற ஆளுங்கட்சி மினிஸ்டரைப் போய் பாரு’ங்கன்னு சொல்றானுக.

மாமண்டூர், விக்ரவாண்டி, தொழுதூர், கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, வையம்பட்டின்னு திருச்சியை சுத்தியே எத்தனையோ மோட்டல் கொள்ளைகள் பகிரங்கமா நடந்துட்டு இருக்கு.

இன்னைக்கு இந்த ‘ஹைடெக் தொழில் கொள்ளை’ தமிழகமெங்கும் மக்களை மிதிச்சு கோரமாக தடம் பதிச்சிருக்கு’’ என்றார் முகம் சிவக்க. இதுபற்றி திருச்சி டெக்கான் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில செயலாளர் பாரதராஜாவிடம் விளக்கம் கேட்டோம்.

‘‘மோட்டல் கொள்ளையை விட மோசமாக மக்களுக்கு தீங்கிழைக்கிற விஷயம் இன்னைக்கு வேறெதுவும் இல்லீங்க. எந்தவொரு மோட்டல்லயும் விலைப் பட்டியலே வச்சிருக்கமாட்டாங்க. கிராமத்துல திருவிழாவுல போட்டிருக்கும் கடை மாதிரி வாய்க்கு வந்த விலையைச் சொல்லுவாங்க.லட்சக்கணக்கான மக்களின் (பேருந்து) வழிப்பறியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு மோட்டல்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தவே கூடாது என அரசாங்கமே அரசாணை இடுவதைத் தவிர வேறு வழியில்லை ’’ என்கிறார் பாரதராஜா நெத்தியில் அடிச்ச மாதிரி. கவனிக்குமா நம் அரசு?.
இரா.கார்த்திகேயன் KUMUDAM.

14 May 2008

தலை சுத்துதே...!

இது உண்மையாக இருக்குமா இல்லை கிராபிக்ஸ் விளையாட்டா?

இது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மரமாம். பெயர் 'நரிபால்' (Nareepol).

தலை சுத்துதே...!








தகவல் : அப்பாவி இந்தியன்

13 May 2008

பிளஸ் 2 தேர்வில் தே‌ர்‌ச்‌சி அடையாத மாணவ-மாணவியர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு.

பிளஸ் 2 தேர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கு அவர்கள் இந்த ஆ‌ண்டு கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் வரு‌ம் 16ஆ‌‌ம் தே‌தி முத‌ல் 21ஆ‌ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.

பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம். பிறகு பூர்த்தி செய்து அந்த பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும்.

கடந்த மார்ச் 2008ல் தேர்வு எழுதாமல் முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அங்கேயே 15ஆ‌ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு துணைத்தேர்வு ஜூ‌ன் 23ஆ‌ம் தேதி முதல் ஜூலை 3ஆ‌ம் தேதி வரை நடக்கிறது.

தேர்வு அட்டவணை விவரம் :

23ஆம் தேதி காலை தமிழ் முதல் தாள்.

24ஆ‌ம் தேதி காலை தமிழ் 2-வது தாள்.

25ஆ‌ம் தேதி காலை ஆங்கிலம் முதல் தாள்.

26‌ஆ‌ம் தேதி காலை ஆங்கிலம் 2-வது தாள்.

27ஆ‌ம் தேதி காலை இயற்பியல், வணிகவியல். மாலை உளவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் சுருக்கெழுத்து.

28ஆ‌ம் தேதி காலை வேதியியல், பொருளாதாரம்.

30ஆ‌ம் தேதி காலை கணிதம், அக்கவுண்டன்சி, விலங்கியல். மாலை அடிப்படை அறிவியல், புவியியல்.

ஜூலை 1ஆ‌ம் தேதி காலை உயிரியியல், வரலாறு, தாவரவியல். மாலை தொழில் பாடங்கள்.

2ஆ‌ம் தேதி காலை உயிரி வேதியியல், கம்ப்ïட்டர் அறிவியல், அரசியல் அறிவியல். மாலை மைக்ரோ பயாலஜி, சிறப்பு தமிழ்

3ஆ‌ம் தேதி காலை வர்த்தக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), நிïட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ். மாலை கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ், மனை அறிவியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்).

ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்!!

ஜாக்கிரதை!! சாலையோர உணவகங்கள்.
பாரம்பர்ய உணவா? அப்படின்னா இன்னாதுப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவிற்கு அந்நிய உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆதிக்கப்பிடியில் சிக்கித் தவிப்பது ஸ்டார் ஹோட்டல்கள் + ஹைக்ளாஸ் ஃபேமிலிகள் மட்டுமல்ல. சாலையோர நடைபாதை உணவகங்களும் அதை நம்பிச் சாப்பிடும் கஸ்டமர்களும் தான். இப்போதெல்லாம் உணவுகள் வேகவைக்கப்படுவதைப் பார்ப்பதற்கே அரிதாக இருக்கிறது. உணவுகளை வாணலியில் போட்டு வறுத்து பாதியை கீழே கொட்டி மீதியை ப்ளேட்டில் கொட்டி ஃபாஸ்ட்டாக கொடுக்கப்படும் உணவுகளுக்கு ஏக போக வரவேற்பு.

ஆகவே சாதாரண மக்கள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட வேண்டுமெனில் தங்கள் சொத்தையே எழுதி வைத்துவிட்டுத்தான் வரவேண்டும். எனவேதான் விலை குறைந்த சாலையோர உணவுகளை பலர் விரும்பியும், விரும்பாமலும் சாப்பிடுவதன் காரணம்.

வெளியூரிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பேச்சுலர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் கேஸ் சிலிண்டர் கிடைக்கப் பெறாமல் நடைபாதைக் கடைகளை நோக்கி நடை போடுவதும் இன்னொரு காரணம்.

சரி, எது எப்படியோ சாலையோர உணவகங்கள் ஏழைகளின் அக்க்ஷய பாத்திரமாகவும், பேச்சுலர்களின் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலாகவும் மாறிப் போனாலும் இதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம்.

ஏனெனில் சுகாதாரமற்ற குடிநீர், தரம் குறைந்த உணவு வகைகள், சுத்தமில்லாத பாதுகாப்பு, சுவை கூட்ட உடலுக்குத் தீங்கைக் கொண்டு வரும் எசன்ஸ் கலப்பது என தரமற்ற உணவுகளால் பலவிதமான நோய்களும் பிரச்சினைகளும் நம்மை தாக்கி மரணப்படுகுழியில் தள்ள பல் இளித்து நிற்கின்றன சாலையோரங்களில்.

சாலையோர உணவக ஓனர்களின் வயிற்றில் அடிக்கும் விஷயமாக இருந்தாலும், பல்லாயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் ஓர் விழிப்புணர்வு விஷயமாகும். எனவேதான் தரமற்ற உணவுகளால் என்னமாதிரியான பிரச்சினைகளும் நோய்களும் ஏற்படும்? இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? என பல கேள்விகள் மூளையைச் சீண்ட ஆரம்பித்திருக்கின்றன.

‘‘சாலையோரக் கடைகளில் சுத்தமான தண்ணீர் கிடையாது. சமையல் அறை அவுங்களுக்குத் தனியா இல்லை. இதனால் ஏற்படுகிற ஆரோக்கியக் கேடுகள் அவங்களுக்குத் தெரியாமலேயே இருக்கு. இதை அறியாமைன்னு கூடச் சொல்லலாம். 99 சதவீதம் கையை சுத்தமா கழுவுறதுமில்ல, கையுறை (க்ளவுஸ்) அணியறதுமில்ல. இதனால அவங்க உடம்புல இருக்குற ‘கொக்கிப்புழு’ சாப்பிடுறவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கு. சமைக்கிறவங்க சுத்தமா இருந்தாலும் சமையல் முறைகளிலும் சுத்தம் தேவை. சமைச்ச உணவுகள் சரியா மூடி வைக்காம வாகனங்களின் மாசு நிறைந்த காற்று பட்டு நச்சுக்கிருமிகள் உள்ளே புக வாய்ப்பு இருக்கு.

அதுவும் பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ்னு எல்லாத்திலேயுமே கலர் பவுடர், எசன்ஸ் எல்லாம் கலக்குறாங்க. இதனால நிச்சயமா உடம்புல பாதிப்பு ஏற்படும். தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு போனப்போ, சாலையோர உணவுகளை அவ்வளவு சுத்தமாக கையுறை அணிந்து உணவு பரிமாறுவதைப் பார்த்து அதிசயித்துப் போனேன். ஆனா நம்ம ஊர்ல அப்படியில்லைன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கு.

இதுக்கு அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான் சரியான பயிற்சிகளைக் கொடுத்து சாலையோர உணவகங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முன் வரணும். நுகர்வோர்களை(வாங்கிச் சாப்பிடும்)யும் பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்கணும்.

சமீபத்துல சாலையோர கடைகளில் மாமிசம் டேஸ்ட்டா இருக்கவும், நல்லா வேகணும்ங்கிறதுக்காகவும் பேராசிட்டமல் மாத்திரையை கலக்கிறாங்கங்கிறது தெரிய வந்திருப்பது அதிர்ச்சிக்குரிய விஷயம். இப்படி ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளில் கலப்படமோ, தரம் குன்றியதாக சுகாதாரம் அற்றதாக இருந்தால் உங்களின் நகராட்சி, அல்லது மாநகராட்சி, சுகாதார அலுவலரிடம் புகார் கொடுக்கலாம். அதுவே கிராமப்புறமாக இருந்தால், சுகாதார நோய்த்தடுப்பு மற்றும் உணவு ஆய்வாளர் அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவரிடம் புகார் கொடுத்தால் ‘1954 உணவு கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும் வந்துடுச்சு.

தொடர்ந்து உணவுக் கலப்படம், தரமற்ற உணவுகளைத் தயாரித்து விற்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றுக் கோளாறோ அல்லது உடல் ரீதியான பாதிப்புகளோ ஏற்பட்டால் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்களில் புகார் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதோடு நஷ்டஈடும் வழங்கப்படும். அதேபோல சம்பந்தப்பட்ட உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் பதிவு பெற்ற உணவகங்களில் சாப்பிடுவது நுகர்வோருக்குப் பாதுகாப்பானது. பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக புகார் செய்யத் தயங்க வேண்டாம்’’ என்கிறார் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் க.ராஜாராமன், ஐ.ஏ.எஸ்.

இதனால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் நோய்கள் குறித்து குடல் இரைப்பை மற்றும் லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. சதீஷிடம் கேட்டோம் ‘‘இதில் சிந்தித்துச் செயல்பட வேண்டியது மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அதாவது உணவு சுகாதாரம், என்ன இருக்கிறது? எந்த மாதிரியான சமையல் முறை? என்பதை கவனிக்க வேண்டும். உணவை சூடாகச் சாப்பிட்டால் நுண்ணுயிர்க் கிருமிகள் உணவில் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் எதில் வைத்து சாப்பிடுகிறோமோ அதிலும் பாதிப்பு இருக்கக்கூடும். சுத்தமில்லாத பாத்திரமாக இருந்தால் பாக்டீரியா, வைரஸ், அமீபா போன்ற கிருமிகள் உணவு வழியாக நமக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். ஆக, உணவு, பாத்திரம், தண்ணீர், மூன்றும் முக்கியம்.

உணவு சுகாதாரம், இல்லை என்றால் பாக்டீரியா மூலம் டைஃபாய்டு போன்ற வியாதிகள் வந்து இம்சிக்கக்கூடும். வைரஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைட்டிஸ் ஏ,இ) வர வாய்ப்பிருக்கிறது. அதுவே அமீபா என்றால் வயிற்றுப் பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதெல்லாம் சுகாதாரமின்மையால் ஏற்படும் பிரச்சினைகள்.

இதுவே உணவில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தால் தரமான அரிசியா? தேவையான அளவு காரமா? உப்பு, எண்ணெய், தரமானதுதானா? அளவு சரியா என்று பார்க்க வேண்டும். இல்லையெனில் நெஞ்செரிச்சல், அல்சர், கேஸ் ப்ராப்ளம் எல்லாம் ஏற்படும்.

அடுத்து சமையல் முறை. உணவு நன்கு வேக வைக்கப்பட்டதாக இருந்தால் பிரச்சினை இல்லை. சரியாக வேகாமல் பாதி அளவு வெந்திருக்கும் ஃப்ரைடு ரைஸ், பிரியாணிகளால் அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், எல்லாம் ஏற்படக்கூடும். அதே போல் எண்ணெயை திரும்பத் திரும்ப (ரீ யூஸ்) பயன்படுத்துவதால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி, கேஸ் ப்ராப்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற குறிப்பிட்ட பல பிரச்சினைகள் சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்வதால் அல்சர் போன்ற பிரச்சினைகள் வருவதோடு இரைப்பை மற்றும் சிறுகுடலில் இரத்தக்கசிவு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. எனவே, ஏற்கெனவே அசிடிட்டி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதுபோன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் குடல் அடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துதான் காப்பாற்றும் சூழல் ஏற்படும்’’ என்று எச்சரிக்கிறார்.

‘‘சாலையோர உணவகங்கள் என்பது சுய வேலைவாய்ப்பு. வேலைக்கு ஆள் சேர்க்கத் தேவையில்லை. ஏழை எளியவர்கள் அனைவரும் (பணக்காரர்கள் விரும்பினால்) சாப்பிட முடியும். ஏனென்றால் உடனுக்குடன் கேட்டதும் சூடாக அதே நேரத்தில் விலை கம்மியாகவும் கிடைக்கும். எனவே பலர் சாலையோர கடைகளை விரும்பிச் செல்கிறார்கள். இதுக்கு சட்டம் போட்டு இவர்களை ஒடுக்குவதை விட ட்ராஃபிக் பாதிக்காதவாறு, சுத்தமாக, சுகாதாரமாக உணவுகளைத் தயாரித்து விற்க அரசாங்கத்தின் மூலம் திட்டம்தான் போட வேண்டும்.அதற்கான சரியான பயிற்சி கொடுக்க வேண்டும். அந்தந்த ஏரியாவுக்கு இத்தனை கடைகள் என்று பிரித்து சரியான இடத்தைக் கொடுத்து அருகில் சுத்தமான குடிநீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.

விலைக்கு ஏற்ப அங்கு சாப்பிடும் உணவுகள் கலப்படம் நிறைந்தவையாகவும், எண்ணெய், காய்கறிகள், சிக்கன், மட்டன்களில் தரம் குறைந்ததாகவும் இருக்கும். இவற்றையெல்லாம் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். வெயில் காலம் வேறு ஆரம்பித்துவிட்டதால் உணவு கெட்டுப் போயிருந்தால் கூட தெரியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்கிறார் சிட்டிஸன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் துணை இயக்குனர் ஷோபா ஐயர்.கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இண்டியாவின் இயக்குனர் சந்தானராஜ் கூறும்போது,

‘‘சாலையோரக் கடைகளில் சரியான தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. வாகனப் புகைகள் உணவில் புகும். உணவின் குவாலிட்டியும் குறைவு.போண்டா, பஜ்ஜிகளை பேப்பரில் வைத்துக் கொடுப்பார்கள். அந்த பேப்பரில் உள்ள எழுத்து அச்சு நம் உடலுக்குள் சென்றால் இரத்த சோகை வியாதி ஏற்படும்.

சிலர் உணவில் சுவை கூட்டவும், மணமூட்டவும் அஜினமோட்டோ கலக்குறாங்க. இதனால் எந்த நன்மையுமில்லை. கேன்சர் மாதிரியான பிரச்சினைகள் வரும். ப்ளாஸ்டிக் கவரில் வைத்துச் சாப்பிடுவதாலும் கேன்சர் போன்ற பிரச்சினைகள் வரும்.

எல்லாப் பொருட்களாலுமே கலப்படம் வந்துவிட்டது. பார்த்துப் பார்த்து வாங்கி சமைக்கும் உணவுகளிலேயே பாதிப்புகள் இருக்கின்றன. சம்பாதிக்கும் நோக்கத்தோடு ‘‘யாரோ சாப்பிட்டு என்ன ஆனால் நமக்கென்ன என்ன?’’ என்று அலட்சியத்தோடு வாங்கி சமைக்கும் போது எந்த மாதிரி பிரச்சினைகள் வருகிறது என்பதை சொல்லித் தானா தெரிய வேண்டும்’’.டாக்டர். ஜெயந்தி (டயட்டீஷியன்) இதுபற்றி கூறும் போது, ‘‘சுவைகூட்டவும், மணமூட்டவும் பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. வீட்டில் இயற்கையான பூண்டு, இஞ்சி, மசாலா செய்து சாப்பிடுவதற்கும் வெளியில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எண்ணெயை 1000சி சூடேற்றிய பிறகு திரும்பவும் அளவுக்கு மீறி சூடேற்றுவதால் அதன் உண்மைத்தன்மை மாறி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மசாலா + கலர் பவுடர்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் குடலை அரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தரமற்ற பிரியாணிகளாலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பிரியாணிக்கு வெங்காயப் பச்சடியை தயிரோடு கலந்து சாப்பிடுவதால் ஜீரண சக்தி கிடைக்கிறது. கத்திரிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் பிரியாணியிலுள்ள கொழுப்பை உடலில் சேர்க்காமல் இருக்கும். வேளா வேளைக்கு வரிந்து கட்டிக்கொண்டு உள்ளே தள்ளக்கூடாது.

ஒரு சராசரி மனிதன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம். அதுக்குக் கூட சரியான உடற்பயிற்சி தேவை. முன்பெல்லாம் நாற்பது வயதுக்கு மேல் தான் கண் பிரச்சினை, இடுப்பு வலி, மூட்டு வலியெல்லாம் வரும். இப்போது உணவில் கெமிக்கல் இருப்பதால் 20 வயசிலேயே எல்லாப் பிரச்சினையும் வர ஆரம்பித்துவிட்டது.

எண்ணெய், மசாலாக்கள் அதிகரிப்பால் கேன்சர், உணவுக் குழாய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எல்லா கேட்டரிங் சென்டர்களிலும் உணவு தயாரிக்கும் முறைகளை (HACCP) கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு தேவை’’ என்கிறார். இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர். எஸ்.கிருஷ்ணாவிடம் பேசினோம்.‘‘222 ஆஃப் தி முன்சிபல் ஆக்ட்’ படி சாலையோரங்களில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. ஆனால், சாலையோரங்களில் பலர் கடைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது ஏழை, எளிய மக்களிடம் வரவேற்பும் பெற்றுள்ளது. அதற்காக சாப்பிடுபவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது. முக்கியமாக சுத்தமில்லாத தண்ணீரால் ஈக்கோலை, டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். 500 எம்.எல். தண்ணீரில் ஆயிரக்கணக்கான கிருமிகள் அடங்கியிருக்கிறது.

சில உணவுகளை ஃபிரிஜ்ஜில் வைத்து வெளியே வைக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் எண்ணிக்கை பல ஆயிரமாக அதிகரித்துவிடும். இதற்கு ‘Aflotosin’ விஷத்தன்மை என்பார்கள். சிலர் உணவுகளில் மாத்திரைகள் கலப்பது அதிகரித்து விட்டது. இதனால் தலைவலி, உடம்பு வலி என பல பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தடுக்க ரெயில்வே ஸ்டேஷன் உணவகங்களுக்கு லைசன்ஸ் கொடுப்பது போல் சாலையோர உணவகங்களுக்கும் லைசன்ஸ் கொடுத்து முறைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவகங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
’’ம்... சொல்லவேண்டியதை சொல்லியாச்சு!
ம.மனோ, --KUMUDAM

4 May 2008

செல்போனின் தரத்தை அறிவது எப்படி ?

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம்.

அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும்.

அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் தரம் குறைந்த பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான செல்போன்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் : லியாக்கத் அலி