29 Apr 2009

மயக்கம் ஏற்படுவது எதனால் ?

சாதாரணமாக ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. மயக்கம் அல்லது கிறுகிறுப்பானது மூளையின் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது.

மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது எனலாம். வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்பை இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்தலாம்.

தீவிரமான கிறுகிறுப்பே மயக்கம் எனலாம். பொதுவாக கிறுகிறுப்பு ஏற்பட்டவுடனேயே கேட்புத் திறன் குறையும். அதுபோன்ற ஒரு நிலையில், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களும், நாமும் சுற்றுவது போன்ற பிரமை உருவாகும். பார்வை மங்கலாகி, சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படுவதுடன் தரையில் விழவும் நேரிடலாம். வேறு சிலருக்கு கண்கள் துடிக்கக்கூடும். இது சில மணிநேரம், சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரைகூட நீடிக்கக்கூடும்.

நரம்பு மண்டலத்தில் இருந்து, உட்புறக் காதில் ஏற்படக்கூடிய பாதிப்பினாலேயே மயக்கம் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. உடலின் உணவு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, காதில் கேட்கும் திறனை பாதிப்படையச் செய்வதாலேயே இந்த நிலை உருவாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. நரம்பு மண்டல பாதிப்புகளினாலேயே மயக்கம் ஏற்படக்கூடும் என்றாலும், கழுத்தில் அடிபடுதல், வலிப்பு உள்ளிட்ட காரணங்களினாலும் கிறுகிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

மூளைக் கட்டி, நியூரோமா எனப்படும் நரம்பு பாதிப்பினாலும் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்த வகையில் மயக்கம் ஏற்பட்டாலும், அதற்குரிய சிகிச்சையை உங்களின் குடும்ப மருத்துவரின் உதவியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற சரியான சிகிச்சையைப் பெறுதல் அவசியம்.

மயக்கத்தின் தன்மையைப் பொறுத்து, அதற்கேற்ற மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்தல் அவசியம் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ரேஷ்மி சுதா.

28 Apr 2009

திருச்சி to அபுதாபி புதிய விமான சேவை

ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் திருச்சி, அபுதாபி, திருச்சி சர்வீஸ்

திருச்சியிலிருந்து அபுதாபிக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் வாரம் இரு முறை விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவக்குகிறது. இது குறித்து அந்நிறுவன நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருச்சி-அபுதாபிக்கு 30ம் தேதி முதல் விமான சேவை துவக்கப்படுகிறது. வாரத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். திருச்சியில் பகல் 2.30 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55க்கு திருச்சியை வந்தடைகின்றது. திருச்சி-அபுதாபிக்கான விமானக் கட்டணம் ரூ.6,439. இந்நிறுவனம் சார்பில் திருச்சியிலிருந்து துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு தினசரி இரு விமானங்களையும், கோலாலம்பூர் மற்றும் இலங்கைக்கு சென்னை வழியாக விமானங்களையும் இயக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

நாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700 க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை. பானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100 க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர்.

கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன உண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை.

எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை. சுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ‘ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டவை’ என்று கூறப்படுவது இயற்கையான சத்துக்கள் அகற்றப்பட்டு, அவை இரசாயனங்களால் நிரப்பப்ட்டிருக்கின்றன என்று பொருளாகும்.

ஆனால் பெரும்பாலும் அகற்றப்படும் சத்துக்கள் நிரப்பப்படுவது கிடையாது. ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட வெள்ளை ரொட்டியில் (பிரட்) 290 விதமான இயற்கையான வைட்டமின், புரதம், தாதுப்பொருள்கள் அழிக்கப்படுகின்றன. 4 அல்லது 5 செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பழபானங்களில் தண்ணீரில் வண்ணம் சேர்க்கப்படுகிறது. தயாரிப்பின் போது இயற்கையான சுவை அழிந்து போய் விடுகிறது. எனவே, சுவை கூட்டுப் பொருட்களும் சுவையூட்டுகளும் உணவுத் தயாரிப்பின் போது அழிந்து போகும் சுவையை மீண்டும் கொண்டுவந்து விடுகின்றன. சாக்லெட் சேர்க்கப்பட்டுள்ள பிஸ்கட்டுகளில் அதிகமான சாக்லெட் சுவை இருப்பது அதில் சேர்க்கப்படும் சுவையூட்டுகளால் தானே தவிர கொக்கோ பழத்தால் அல்ல. இதே போலத்தான் ஜாம் வகைகளும்.

பேன்களைக் கொல்ல பயன்படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, வாழைப்பழம் முதலியவற்றில் (டப்பாக்கள்) துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதால் கெடுதல்களே அதிகம்!!

23 Apr 2009

சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா.......?

நமக்கு அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. அதனால தான் இது ஒரு சிலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது.

கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்க்கு முக்கிய காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே காரணம்.

கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களா இருப்பார்கள்.ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும், காரணம் இதை போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்து கொள்வார்கள்.

நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனபது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே அது செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துகொண்டால் நம் உடல் அதற்க்கு பழகி விடும்.

எனவே வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது, எனவே நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து விடும்.

முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போக போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது ஸ்ட்ராங்கானா மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும், அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது ஒரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான்.

இதை போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் (Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache) போன்றவை) மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்க்கு பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது.

இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால் உடலின் உஷ்ணமாக கூட இருக்கலாம், இதற்க்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும்.

இதை போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதை போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.

19 Apr 2009

சீனி நம்முடைய உடலுக்கு தேவையில்லை..!

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை.

உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன. சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும்.

ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது.

இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

14 Apr 2009

வளைகுடா வாசிகளுக்கு விடிவு எப்போது ?

வளைகுடாவாசிகளுக்கு விடிவு எப்போது?

மத்திய அரசின் கணக்குபடி ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் கோடி ரூபாயை தன் சொந்த நாட்டிற்கு அனுப்பி நாட்டின் முதுகெலும்பாய் இருக்கின்றனர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.

பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அவர்கள் கூட்டம் கூட்டமாய் நாடு திரும்புவது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாமல் தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலனுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையான 114 கோடி ரூபாய் என்ற மிகக்குறைந்த அளவைக் கூட பட்ஜெட்டில் அரசு ஒதுக்காமல் போனது மிகவும் துர்பாக்கியமாகும்.
தேர்தலை கருத்தில் கொண்டு 14 வது லோக்சபா கூடிய அன்று பல்வேறு நிதிகளின் பெயரில் 55000 கோடிக்கான திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, இந்த வருடம் மட்டும் இந்தியாவுக்கு திரும்பவர இருக்கின்ற ஐந்து லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பரிதாபகரமான நிலையை கண்டுகொள்ளாமல் விட்டதற்கான காரணம் மக்களுக்கு தெரியாமலில்லை.

100 கோடி ரூபாயை ஒதுக்கி, திரும்பி வருபவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் வீதம் பண உதவி செய்ய நலவாரியம் திட்டமிட்டிருந்தது. வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்காக 14 கோடி ரூபாய்க்கான பாதுகாப்பு நிதிதான் இதன் அடுத்த திட்டம். வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்பவர்களிடமிருந்து 800 ரூபாய் அங்கத்தினர் கட்டணமாக பெற்று, வருமானத்திற்கான ஏற்பாட்டை செய்யவும் இது திட்டமிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்காததால் அனைத்து திட்டங்களும் தண்ணீரில் எழுதப்பட்டதை போலானது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை ஏற்படுத்தப்படும் என அடிக்கடி சொல்லி ஏமாற்றி வரும் மத்திய அரசுக்கு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பு நிதி ஒதுக்கப்படாததற்கு நியாயமான காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், அதற்கும் மேலாக, வாக்களிக்கும் உரிமையில்லாத இவர்களுக்கு உதவி செய்வதாலோ இவர்கள் திருப்திப்படுவதாலோ நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற ‘ஜனாதிபத்திய சிந்தனை’ தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்.

வளைகுடாவிலிருந்து கோடி கோடியாக இந்திய வங்கிகளுக்கு வந்து குவிந்தாலும் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால்தான் அரசு இவர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தபோதும் மேற்சொன்ன காரணம் தான் மிக முக்கிய காரணமாகும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய 70000 கோடி ரூபாயை ஒதுக்கியும் அதில் பெரும்பகுதியை உடனடியாக வழங்கவும் செய்த போது ஆளுங்கட்சியினரின் கண் முன்னால் நின்ற ‘ஓட்டு வங்கி அரசியல்’, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விஷயத்தில் நிற்காததை தெரிந்து கொள்ள கடினமேதுமில்லை.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட நிதியாக பத்து கோடி ரூபாயும் கடனாக 100 கோடி ரூபாயும் இந்த பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் மலையாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிடைத்த மொத்த வருமானமான 1,62000 கோடியில் ஐந்தில் ஒரு பாகம் வளைகுடாவினால் ஏற்பட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் இப்படி ஒரு நிதி ஏற்படுத்தப் பட்டுள்ளதா என்பதை நாம் அறிந்தவரை இல்லை என்றே கூறலாம். தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட்டிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வு பற்றி அரசு மூச்சு விடவில்லை.

இதில் வளைகுடா தமிழனிடம் வசூல் வேட்டையாடி மனிதநேயத்திற்காக களமிறங்கி இன்று திமுகவின் காலடியில் கிடக்கும் சிலர், நிறைவான பட்ஜெட், மிகச்சிறந்த பட்ஜெட் என்ற வர்ணணையுடன் ஒத்து ஊதும் நிலையை பார்த்து வளைகுடா தமிழர்களின் நெஞ்சம் கனக்கின்றது.

வளைகுடாவில் பணிபுரியும் ஐம்பது லட்சம் இந்தியர்களில் அதிகமானோர் தமிழர்களே. வீட்டு டிரைவர், மருத்துவ மனைகள் சுத்தம் செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெரு கூட்டுபவர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று மிகக்குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு, சொந்த நாட்டிற்கு உதவுபவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆனால் இவர்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டின் போது நமக்காக கோரிக்கை வைக்கப்படுகிறது என்றோ அது நிராகரிக்கப் பட்டுவிட்டது என்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவின் செல்வந்தர்களும் பண முதலைகளும் ஸ்விஸ் பேங்க் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கும் போது, வரிந்து கட்டிக் கொண்டு வெயிலிலும் பனியிலும் பணிபுரிந்து பொருளீட்டும் இந்த சாதாரண தொழிலாளர்களோ இந்திய வங்கிகளில் பணத்தை போட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்றனர்.

அதன் காரணமாகத்தான் இவர்களின் திரும்புதல் தமிழகத்தை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நியாயமான வழியில் பொருள் கிடைப்பதற்கான வேலையோ தொழிலோ இல்லாத பட்சத்தில் தான் திருட்டு, வழிப்பறி, விபச்சார தொழில், பொதை பொருள் விற்பனை, கடத்தல் போன்றவை பெருகும்.


எனவே மாற்று வழிக்கான ஏற்பாட்டை உடனடியாக செய்தாக வேண்டும். உள்நாட்டில் வேலையின்மை காரணமாக வெளிநாடு சென்று அடிமையாய் வேலைபார்த்து தாய்நாட்டுக்கு உதவிய தமிழர்களை உதாசீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல.

தேர்தலை மட்டும் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுவதை விட்டு மனிதாபிமான அடிப்படையில் அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புனர் நிவாரணத்திற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அறிந்தோ அறியாமலோ நேற்று வாரிக் கொடுத்த வள்ளல்கள் இன்று வறுமையில் வாடும்போது வாரி அணைக்க வேண்டியது அரசின் கடமை. இதை மத்திய, மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் குறிப்பாக மீடியாக்களும் நினைத்தால் செய்ய முடியும்.

“அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோரை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.” - அல்குர்ஆன் 10:25

நன்றி : உணர்வு வார இதழ்

துபாய் வாழ் தமிழர்களுக்கு

துபாயில் சமீபநாட்களாக நூதனமான முறையில் திருடர்கள் உலா வருகிறார்கள்…

சிலருக்கு கைபேசியில் தொடர்புக் கொண்டு துபாய் டெலிகம்யூனிக்கேசனிலிருந்து (இட்டிசலாட்) பேசுவதாகக்கூறி நம் சிம் கார்டில் உள்ள PUK நம்பரை கூறி சோதிக்க சொல்வார்கள்…

அவர்கள் சொல்லக்கூடிய நம்பர் சரியாக இருக்கும்.

…பின்னர் நமக்கு ஒருலட்சம் திரஹம் பரிசு விழுந்திருக்கிறது இதைப் பெறுவதற்கு ஏதாவது ஒரு வங்கிப் பெயரைச் சொல்லி அங்கு வரச் சொல்லி ஒருநேரத்தை கூறுவார்கள்.

நாமும் உண்மையென நம்புவோம்..பின் துபாய் இட்டிசலாட் டெலிபோன் ரீசார்ஜ் கார்ட் 1000 திரஹகத்துக்கு வாங்க சொல்லி அதன் இரகசிய எண்ணை கேட்பார்கள்…

நாம் கொடுத்தவுடன் அவ்வளவுதான் …நம்முடைய 1000 திரஹகம் அபேஸ்…

இப்படி நூதனமுறையில் ஏமாற்றப்பட்டு பலர் ஏமாந்து வருகிறார்கள்…

ஆதலால் துபாய் வாழ் தமிழர்களே…உசாராக இருங்கள்