24 Sept 2009

நீண்ட நாள் வாழ 15 வழிகள்!!

நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!


என்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம்.


சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேம்!

1. நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணி நேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.

2. நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.

3. உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!

4. நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா? பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.

5. உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களை விட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.

6. மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!

7. முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!

8. 100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!

9. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!

10. நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.

11. தாய் தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!

12. உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!

13. பச்சைத் தேயிலை டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!

14. ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!

15. நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!

நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!

22 Sept 2009

திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் .......

திருமணத்திற்கு முன் ...... திருமணத்தின் பின் .......

திருமணத்திற்கு முன்

அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது ?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?
அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…
அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….
அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?
அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…
அவள் : என்னை அடிப்பீர்களா?
அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!
அவள் : நான் உங்களை நம்பலாமா?
அவன் : ம்ம்ம்.
அவள் : அன்பே…!

திருமணத்தின் பின்….

அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்

19 Sept 2009

துபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க!

பாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே..! வலிக்கலியே...! என்று கத்துவார், அதுபோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு.

அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும். ஆனால் தெரிந்தவர்களிடமோ அல்லது உறவினர்களிடம் பேசும் பொழுதோ அதே “வலிக்கவில்லை” கதைதான்.

ஷாப்பிங் ஃபெஸ்டிவல் என்பது துபாயில் ஜனவரி மாதம் 15ல் ஆரம்பித்து பிப்ரவரி 15வரை நடக்கும், வெளிநாட்டில் இருந்து பலர் இதற்காக வருவார்கள் அந்த சமயங்களில் ஷாப்பிங் மால்களில் கூட்டம் நிரம்பி வழியும் அதோடு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது துபாய் முழுவது அலங்கார வளைவுகள், வாணவேடிக்கைகள், வெளிநாட்டு கலாச்சார கலைநிகழ்சிகள், என்று அமளிதுமளி படும்

ஆனால் இந்த முறை நடந்து முடிந்தது பலருக்கும் தெரியாது, பாலஸ்தீன் பிரச்சினைக்காக ஷாப்பிங் பெஸ்டிவலின் பொழுது கேளிக்கைகள் கிடையாது வாணவேடிக்கை கிடையாது என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே நிஜம் அன்று பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்ப்பட்ட தேக்கம்தான் காரணம்.

என்னது துபாயிலேயே பணப் புழக்கம் இல்லையா என்று அதிர்ச்சி அடைகிறீர்களா? ஆம் அதுதான் உண்மை நிலை, பல திட்டங்கள் பாதியோடு நிற்கின்றன பணம் இல்லாமல்,துபாயின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களான, டமாக், எம்மார், அராப்டெக், போன்றவை அடியோடு சரிந்து கிடக்கின்றன.

கொத்து கொத்தாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அதுக்கு முக்கிய காரணம், வீடுகளை வாங்க ஆள் இல்லை கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளை முடிக்க பணம் கொடுக்க பேங்க் தயாராக இல்லை அல்லது பணம் இல்லை.

வெளிநாட்டு முதலீட்டார்களை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட துபாய் பால்ம், தேரா பால்ம் என்ற கடல் உள்ளே கட்டப்பட்ட வீடுகள் பாதியோடு நிற்கின்றன.

சொகுசு கட்டிடங்கள் என்றால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத படி சொகுசு கட்டிடங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைநம்பி ஆரம்பிக்கப்படவை, அவை அனைத்தும் பாதியோடு நிற்க்கின்றன, கட்டிடங்கள் மட்டும் அல்ல சம்பளத்தை நம்பி வாங்கிய லோன்களும் பாதியோடு நிற்கின்றன.

இந்த பிரச்சினை ஆறுமாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தது கட்டிமுடிக்கப்பட்ட பல கட்டிடங்களில் குடியேற ஆள் இல்லாததால் வில்லா என்று அழைக்கப்படும் பெரும் பங்களாவில் ஷேரிங்கில் தங்கக் கூடாது என்று பிறப்பிக்கபட்ட உத்தரவு பல குடும்பங்கள் ஊருக்கு அனுப்பிவைக்க காரணமாக இருந்தது.

அதோடு பல குழந்தைகள் படிப்பும் பாதியோடு நின்றது, அப்படி இருந்தும் யாரும் அந்த கட்டிடங்களில் குடியேறவில்லை, வந்து கொண்டு இருந்த வில்லா வருமாணமும் அரபிக்களுக்கு குறைந்தது.

பொறுத்து பொறுத்து பார்த்த நகராட்சி இப்பொழுது சொல்கிறது வில்லாவில் ஷேரிங் செஞ்சுக்கலாம், ஆனால் ரொம்ப கூட்டமாகதான் இருக்கக்கூடாது என்று சொன்னோம் ஆனால் அது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நம் அரசியல் வாதிகளுக்கு மேல் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார்கள்.

தினம் Gulf news பேப்பரில் வரும் வேலை வாய்ப்பு செய்திகள் பற்றிய இணைப்பு பேப்பர்கள் கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையாக பதினாறு பக்கங்கள் வந்த பேப்பர் இன்று இரண்டு பக்கம் வந்து நிற்கிறது, அதிலும் ஒண்ணே முக்கால் பக்கத்துக்கு மைக்கிரேட் டூ ஆஸ்திரேலியா, கனடா விளம்பரங்கள். வேலை வாய்ப்பு பற்றி ஒண்ணும் இல்லை.

கொஞ்ச நாட்களாக FM ரேடியோவில் வரும் விளம்பரம் “உங்களுக்கு வேலை போய்விட்டதா? அல்லது வேலை போய்விடும் என்ற பயமா, கவலையை விடுங்க 15 நாட்களில் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேருங்கள்” என்று டிரைனிங் செண்டருக்கு விளம்பரம் வருகிறது.

வாங்கிய லோன் கட்டமுடியாமலும், கிரெடிட் கார்ட் இண்ட்ரெஸ்ட் கட்ட முடியாமலும் பலர் தவிக்கிறார்கள். இதுவரை எத்தனை மணிக்கு வேண்டும் என்றாலும் எவ்வளோ பணத்தோடும் தனியாக ஒரு பெண்ணோ ஆணோ வெளியில் போய் வரலாம் என்று இருந்த நிலைகொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு ATM மெசினில் பணம் வைக்க வந்த வண்டியில் இருந்த செக்யூரிட்டியையும் சுட்டு விட்டு பல கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, இரு தினங்களுக்கு முன்பு ஜுமைரா பீச்சில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை அடிக்கப்பட்டது என்று அங்கு இங்குமாக கொள்ளைகள் அடிப்பது செய்திகள் ஆகின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் பல பணக்காரர்களை உருவாக்கிய துபாய்தான் பல கடன்காரர்களையும் உருவாக்கப்போகிறது. இதுதான் இன்றய துபாயின் நிலை.

டிஸ்கி: ஒரே ஒரு அட்வைஸ் இந்த காலகட்டத்தில் துபாயில் வேலை வாங்கி தருகிறேன் என்று யாரும் சொல்லி அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் விசிட் விசாவிலும் பிளைட் ஏறி வேலை கிடைத்துவிடும் என்று வந்துவிடாதீர்கள்!!!

-குசும்பன்

17 Sept 2009

செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே!

ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலை முறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன.

பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னா பின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!

நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன?

சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:

"சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.

இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.

மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர். பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர்.

எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்".

மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.

1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.

2. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.
குழந்தைகளின் குணம் என்பது, தம் பெற்றோர்களின் பழக்க, வழக்கங்களை ஒத்து வளர்வதாகும்.

பெற்றோர் சிறந்த ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் பட்சத்தில் பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளும் நல்ல பழக்க, வழக்கம் உடையவர்களாகவே இருப்பர். அவசர, அவசியம் கருதி செல்போன் வைத்திருக்கும் குழந்தைகளிடம் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அனாவசிய மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

இவற்றின் மூலம் பெரும்பாலான ஆபத்துகளிலிருந்து தம் குழந்தைகளைப் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள இயலும். குழந்தைகளை வளர்ப்பது என்பதும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பித்தல் என்பதும் இஸ்லாத்தில் மிக முக்கிய செயலாக ஊக்கிவிக்கப்பட்டவைகளாகும்.

உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)

எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி)

மேலே குறிப்பிட்ட இரு ஹதீஸ்களும் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறுகிறது.

1. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, விடுதியில் போன் வசதி இல்லாமல் போனால்,

2. வெளியூருக்குச் செல்லும் ஆண் குழந்தைகளுக்கு அவசரத்துக்கு உதவ இதைப் போன்ற தருணங்களில் அவசியம் நிமித்தமாக மொபைல் போனை பிள்ளைகளுக்குத் தரலாம். அதுவும் வயது வந்த குழந்தைகளுக்கு மட்டுமே தர வேண்டும்.

எந்த ஒரு தருணத்திலும் நாம் தான் மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டோமே என்று தம்முடைய வேலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டு விடலாகாது.

அவர்களின் மொபைலில் என்ன எஸ். எம். எஸ் வருகிறது?, பதிவாகியுள்ள தொலைபேசி எண்கள் யாருடையவை? போன்றவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். சம்பந்தம் இல்லாத பெயர்களில் அவர்களின் மொபைலில் அழைப்புகள் பதியப் பட்டிருந்தால், தயங்காமல் தம் பிள்ளைகளிடம் அது யார் என்று கேட்டு விடவேண்டும்.

செல்போனினால் வரும் பிரச்சனைகளை வெளிப்படையாக தயங்காமல் தம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எடுத்து கூறி அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் ஒதுக்கி, அவர்களின் விஷயங்களில் பெற்றொருக்கு இருக்கும் ஆர்வத்தையும் கவனத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு செய்தால் அவர்கள் தனியாக இருக்கும் வாய்ப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தீய எண்ணங்களின் பக்கம் செல்லாமலும் தடுக்க முடியும்.

சில பெற்றோர்கள் தம் வீடுகளில் குழந்தைகளுக்குத் தனியாக அறை ஒதுக்கி அவர்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர். இதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துக் கொடுத்து விட்டு, இனி எல்லாம் அவர்கள் கையில் என, மேற்கொண்டு அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் விட்டு விடுவது மிகப் பெரிய தவறாகும்.

இவ்வாறு அதிகப்படியான வசதிகளைத் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செய்து கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களின் நடவடிக்கைகளைச் சீராக கண்காணித்து வர வேண்டியது கடமை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

சில வீடுகளில் தொலைகாட்சி சீரியல்கள் பெரியோர்களை மட்டுமன்றிக் குழந்தைகளையும் சீரழிக்கின்றது. இவர்கள் தாங்கள் கண் விழிப்பதோடு குழந்தைகளையும் கண் விழிக்க செய்கிறார்கள். இதில், சீரியல் முடிந்தவுடன் அதைப் பற்றி டிஸ்கசன் வேறு சில வீடுகளில் நடக்கிறது.

அவன் அப்படி செய்திருக்கலாம், இவள் ஏன் இப்படி செய்தா, அவன் அந்த வேலையில் சேர்ந்திருக்க கூடாது என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த சீரியல்களை பார்த்து தான் பெண் குழந்தைகள் அதிகம் பேர் கெட்டுப் போகிறார்கள்.

புது சினிமா வந்து விட்டால் அதை உடனே வாங்கி வீட்டில் ஆண், மற்றும் பெண் குழந்தைகளோடு பார்க்கிறார்கள். அதில் முகத்தைச் சுழிக்கக் கூடிய வசனம் வந்தாலும், அன்னிய ஆணும் பெண்ணும் கட்டிப் புரண்டு கூத்தடிக்கும் பாடல் காட்சிகள் வந்தாலும் அவற்றைக் குறித்து எவ்வித வெட்க உணர்வும்

இன்றி, தாய், தந்தை, குழந்தைகள் என குடும்ப சகிதமாக நாணம் கெட்டுப் போய் பார்த்து ரசிக்கின்றனர். "வெட்கம் ஈமானில் பாதியாகும்" என்று திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் அங்கு காற்றில் பறப்பதைக் குறித்து இவர்களுக்கு எவ்வித உணர்வும் இல்லை.

பெற்றோர்கள் இவ்விதம் செயல்பட்டால், குழந்தைகள் பெற்றோரின் வழியிலேயே வெட்க உணர்வின்றி வளர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இந்த சீரியல்களும், சினிமாக்களும் அதில் செய்யும் புது புது உத்திகளும் பிள்ளைகளின் மனதை எளிதில் கவர்ந்து கெடுத்து விடுகிறது. அதில் செல்போன்களை வைத்து என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று எல்லா தீய செயல்களையும் காண்பித்து விடுகின்றனர்.

இவற்றைக் காணும் குழந்தைகள், அதனைப் போன்றே செய்வதற்குத் தலைபடுகின்றனர். சினிமாவில் வரும் நடிகர்கள் போன்று தன்னுடைய உடைகளை மாற்றி கொள்வது, அவர்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்வது மற்றும் அவர்களைப் போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்வது என்று இன்றைய ஆண், பெண் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இத்தகைய சீரழிவுகளிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பதற்கு, முதலில் பெற்றோர் தம்மை மாற்றிக் கொள்ள தயாராவதே ஒரே வழி!மற்றொரு முக்கியமான விஷயம், பிள்ளைகளின் நண்பர்களை பற்றிப் பெற்றோர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பதாகும்.

ஆண் பிள்ளைகள் வெளியே சென்று இரவு நீண்ட நேரம் சுற்றி விட்டு வந்தால், அது எவ்வளவு தலைபோகும் விஷயமாக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இரவு வெகு நேரம் வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் விஷயங்களில் முன்னரே தங்களை அழைத்து விவரம் தெரிவிக்கும் பழக்கத்தை அவர்களைக் கண்டிப்பதன் மூலமாக வளர்த்து விடவேண்டும்.

சினிமா போன்ற வீண், ஆபாச சீரழிவு காரியங்களுக்கு வெளியே செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மார்க்க விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தொழுகை விஷயத்தில் கண்டிப்பு அவசியம். குழந்தைகளுக்கு உலக கல்வியை வளர்ப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கும் விஷயத்திலும் பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றை அவர்கள் முதலில் தம்மிடம் சரியாக வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமானது.

தான் சரியாக இல்லாமல், தங்கள் குழந்தைகள் மட்டும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று கண்டிக்கும் பெற்றோர்கள் மிகப் பெரிய தவறைச் செய்கின்றனர்.

தொழுகயை அந்த நேரத்தில் தொழுதல், செல்போன்களில் அதிக நேரம் செலவிடாதிருத்தல், கேமரா மற்றும் லேட்டஸ்ட் மாடல் போன்கள் (மெமரி கார்டு) உபயோகிப்பதை தடுத்தல், சினிமா மற்றும் சீரியல்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல், ஆகியவற்றைத் தாம் முதலில் கடைபிடிப்பதோடு அவற்றின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னாலே அவர்கள் அதனைப் புரிந்து செயல்படுத்த முன்வருவர்.

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக வளர வேண்டும் என்றே நினைக்கின்றனர்.

அதற்கான முதல் படியாக அனைத்து நல்லொழுக்கங்களையும் தம்மிடமிருந்து செயல்படுத்திக் காண்பிப்பதோடு, அதற்காக செய்யும் முயற்சியில் செல்போன்களுக்கு முதலிடம் கொடுப்போம்.

வரவேற்கத்தகுந்த தேசிய அடையாள திட்டம்

நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்காக பொது பட்ஜெட்டில் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது தாமதமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றாலும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த அடையாள அட்டை நிலவில் உள்ளதால் இந்திய மக்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தியாவிலுள்ள 117 கோடி மக்களுக்கும் இந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை ‘இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம்’ எனும் ஆணையத்தை அரசு அமைத்ததோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்த நந்தன் நீல்கனியை தலைவராகவும் நியமித்துள்ளது. 12 முதல் 18 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

117 கோடி மக்களுக்கும் இந்த அடையாள அட்டையை வழங்குவது சாத்தியமா என்று அரசு கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்தலுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் ரேசன் கார்டும் வழங்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் சாத்தியமாகும் போது ஒருங்கிணைந்த அடையாள அட்டை என்பதும் சாத்தியமே.

இந்த அடையாள அட்டை புழக்கத்தில் வந்துவிட்டால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பயனை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இந்திய குடிமகன் தான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை தற்போது பயன்படுத்தி வருகின்றான்.

இதன்றி டிரைவிங் லைசென்ஸம் பயன்படுகின்றன. இதில் மேலே கூறிய பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை ஒருவர் எப்பொழுதும் தன் கையில் வைத்திருக்கமாட்டார். தேவைப்படும் பொழுது மட்டுமே எடுத்து செல்வார்.

டிரைவிங் லைசென்ஸ் ஒருவரிடம் எப்பொழுதும் இருக்கும் என்றாலும் அதை வாகனம் வைத்திருப்பவர் மட்டுமே வைத்திருப்பார். எனவே எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கக்கூடிய அடையாள அட்டை என்பது காலத்தின் கட்டாயம்.

இந்த அடையாள அட்டை என்பது இந்திய மக்கள் தொகையை துல்லியமாக தெரிவிப்பதோடு ஆண் பெண் குழந்தைகள் என தனித்தனியாக கணக்கெடுக்க முடியும். மிக முக்கியமாக அந்நிய நாட்டினர் ஊடுருவுவதை தடுக்கும். தமிழக மேற்கு வங்க அரசியல் வாதிகளை போன்றவர்களுக்கு இது வயிற்றில் புளியை கரைக்கும். ஏனெனில் இலங்கை தமிழர்களையும் வங்க தேசத்து மக்களையும் இந்தியாவில் குடியமர்த்தி அரசியல் லாபம் பெறுவது முடியாமல் போகும். எனவே அவர்களை போன்றவர்கள் இதை எதிர்க்கவும் வாய்ப்புண்டு.

இந்த திட்டம் பயனுள்ள ஒரு திட்டமாக இருந்தாலும் இது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் அதை தயாரிக்கும் போதே பிற நாடுகளில் இருப்பதை போன்று ஒவ்வொருவரின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவின் எப்பகுதியில் ஒருவர் திருட்டு கொலை போன்ற குற்றங்கள் செய்தாலும் அவர்களின் கைரேகைகள் மூலமாக குற்றவாளி இவர் தான் என்று 10 நிமிடத்தில் சொல்லிவிட முடியும்.

குற்றம் புரிபவர்கள் தாம் எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோம் எனும் நிலை வரும்போது நாட்டில் குற்றங்கள் குறையும். குண்டுவெடிப்பு நேரங்களில் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலாத போது ஏதாவதொரு முஸ்லிமை பிடித்து இவன்தான் குற்றவாளி என்று கூறி ஃபைலை குளோஸ் பண்ணும் நிலை போலீஸாருக்கு ஏற்படாது.

வளைகுடா நாடுகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு கைரேகையும் எடுக்கப்படுகின்றன. அந்த அடையாள அட்டையின் எண்ணை கம்பியூட்டரில் தேடினால் அவரது முகவரி தொலைபேசி எண் அவர் எங்கு பணி புரிந்தார் எந்த நாட்டை சார்ந்தவர் எந்த தேதியில் வந்தார் எத்தனை வருடமாயிற்று போன்ற ஆதி முதல் அந்தம் வரை உள்ள அவரது அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.

இது போன்று நாம் தயாரிக்கும் அடையாள அட்டை இருக்குமானால் பயனுள்ளதாக இருக்கும். விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபடும் போது தாங்கள் கணவன் மனைவி என்று கூறி பெரும்பாலானவர்கள் தப்பித்து விடுகின்றனர். அடையாள அட்டை புழக்கத்துக்கு வந்து விட்டால் இது போன்ற தவறுகளும் தடுக்கப்படும். விபத்துக்கள் ஏற்படும் சமயங்களில் அடையாளம் தெரியாத ஒருவர் மரணமடைந்தார் அல்லது காயமடைந்தார் எனும் பத்திரிகை செய்திகள் குறையும்.

ஒருவர் தன் கைவசம் எப்பொழுதும் அதை வைத்திருப்பதால் அவரை அடையாளம் கண்டு அவரது உறவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாக்க முடியும். அடையாள அட்டையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட எண்ணில் வருமானம் முதற்கொண்டு அனைத்து விபரங்களும் அடங்கிவிடுமாதலால் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தவறானவர்களுக்கு செல்லாமல் உரியவர்களுக்கு மிக சுலபமாக போய் சேரும்.

மொத்தத்தில் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. முதற்கட்ட பணியில் இது சிரமமாக தெரிந்தாலும் நாளடைவில் அது மிக மிக எளிதானதே. ஒரு குழந்தை பிறந்த உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கும்போதே அடையாள அட்டையையும் வழங்கிவிடலாம்.

இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டையானது குற்றம் புரிபவர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் இனிப்பான செய்தி என்றால் அது மிகையல்ல.

நன்றி: உணர்வு வார இதழ்