30 Jan 2009

500 ரூபாய் கம்ப்யூட்டர் 6 மாதத்தில் கிடைக்கும்

500 ரூபாய் கம்ப்யூட்டர் 6 மாதத்தில் கிடைக்கும் மத்திய அரசு தீவிரம்

மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.500 விலையில் கம்ப்யூட்டர் உற்பத்தி செய்து அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த கம்ப்யூட்டருக்கான தொழில்நுட்பத்தை பெங்களூரைச் சேர்ந்த ஐஐஎஸ்சி, சென்னை ஐஐடி ஆகியவை உருவாக்கியுள்ளன.

இதுபற்றி டெல்லியில் நிருபர்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர்கல்விப் பிரிவு செயலர் அகர்வால் நேற்று கூறியதாவது:

மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இருக்கப்போகும் இந்தக் கம்ப்யூட்டர்கள் லேன் நெட்வொர்க்,வைஃபை வசதிகள் கொண்டவை. அதிகரிக்கக் கூடிய மெமரி வசதியும் இருக்கும். இதற்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்ட போதிலும்,இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.எனவே, 6 மாதங்களில் இந்த கம்ப்யூட்டர் அறிமுகமாகலாம்.

ரூ.500 விலையில் கிடைக்கக்கூடிய கம்ப்யூட்டருடன் அதன் மூலம் கல்வி கற்பதற்காக அனைத்து பாடங்களிலும் சிடி, சாப்ட்வேர்கள் மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்.

தங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க விரும்பும் பெற்றோர்,இந்தக் கம்ப்யூட்டரை அளிக்கலாம்.
கல்வி நிறுவனங்களுக்கு இதை மானிய விலையில் அளிப்பது பற்றியும் அரசு பரிசீலிக்கும்.
இந்தக் கம்ப்யூட்டரைத் தயாரிப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

இக்கம்ப்யூட்டர் 2 வாட் மின்சாரத்தில் இயங்கும். தேசிய கல்வி வளர்ச்சி இயக்கத்தின் கீழ் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப (ஐசிடி) மூலம் இந்த கம்ப்யூட்டர் தயாரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.

செல்போன் உபயோகிப்பதால் புதிய நோய்கள் வரும்

செல்போன் உபயோகிப்பதால் புதிய நோய்கள் வரும்

மாணவர்கள் நடத்திய ஆய்வில் தகவல்

செல்போன் உபயோகிப்பதால் வரும் புதிய நோய்கள் குறித்து பெங்களூர் மருத்துவ மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனிதர்களின் பழக்க வழக்கங்கள் மாறுவதற்கேற்ப நோய்களும் புதிய அவதாரங்கள் எடுத்து வருகின்றன.செல்போன் உபயோகம் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் செல்போன் உபயோகிப்பாளர்களை தாக்கி வரும் நோய் குறித்து பெங்களூர் கெம்பேகவுடா மருத்துவ அறிவியல் பயிற்சி மையம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெங்களூர் கிம்ஸ் பணியாளர்களான டாக்டர்கள் யஷஸ்வினி தலைமையில் டாக்டர்கள் ஆஸ்தாகுப்தா, புஷ்பாகவுடா, ஸ்வப்னா ராமஸ்வாமி, வாணி, வினுதாரங்கப்பா ஆகிய 6 பேரும் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

பெங்களூரிலுள்ள 11 கல்லூரிகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.
அடிக்கடி உங்கள் பாக்கெட்டை சோதித்து செல்போன் இருக்கிறது என பார்த்து வருகிறீர்களா?. உங்களுக்கு வந்துள்ளது நோமோபோபியா,செல்போனை அடிக்கடி எடுத்து யாரும் அழைத்துள்ளார்களா என பார்க்கிறீர்களா உங்களை பீடித்துள்ள நோயின் பெயர் ரிங்சைடி.

செல்போன் உபயோகிப்பாளர்களிடம் அதிவேகமாக பரவிவரும் நோய் நோமோபோபியா. அதாவது, மொபைல்போன் பத்திரமாக உள்ளதா இல்லையா என்ற பயம்.இதனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் செல்போன் இருக்கிறதா என சோதித்துக் கொண்டேயிருப்பார்.

அடுத்து பரவிவரும் நோய் ரிங்சைடி அதாவது,தனக்கு அழைப்பு ஏதேனும் வந்துவிட்டதோ என்ற கவலையில் அடிக்கடி செல்போனை கையில் எடுத்து கால்கள்,எஸ்எம்எஸ் வரவை பரிசோதிப்பது.

இந்நோய்கள் தவிர நீண்டநேரம் செல்போன் உபயோகிப்பவர்களின் தூக்கம் குறைந்து வருவதாகவும்,காதுவலி,தலைவலி,கழுத்துவலி,கட்டைவிரல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

செல்போன்களை நடந்துபோகும் போது பேசிக்கொண்டே செல்லும் வழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் 44சதவீதம் பேர் விபத்துக்களில் சிக்கி மயிரிழையில் உயிர்பிழைத்துள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

22 Jan 2009

புற்று நோயைத் தடுக்கும் கேரட்

கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம்.

தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.

மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை நீங்களும் அடிக்கடி வாங்கி சமைத்துப் பாருங்களேன்.

21 Jan 2009

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!

விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும், சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும், சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால், அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியானது 2 மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்?

அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுவோர் பலர் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட அது அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினமும் ஒரு முட்டை உண்பது சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வைப் பின்பற்றி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் டைப் 2 டயபடிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பும், இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை பராமரிப்பதிலும் முட்டையின் பங்கு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 விழுக்காடு அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பெண்கள் தினமும் ஒரு முட்டை அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான அளவு முட்டைகளைச் சாப்பிட்டால், சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 விழுக்காடு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் பெரிய அளவில் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் 57 ஆயிரம் பேரிடம் முட்டை சாப்பிடும் பழக்கம் குறித்து சுமார் 20 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

20 Jan 2009

உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் டென்ஷன்-மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

மனிதர்களுக்கு ஏற்படும் டென்ஷன், மன அழுத்தத்தால் ஏற்படும் அபாயம் குறித்து கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.அதில் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.


மனிதர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது, மன அழுத்தம் தான் சர்க்கரை வியாதி, இருதய பாதிப்பு உள்பட பல நோய்களுக்கு முக்கிய காரணம்.


எனவே டென்ஷன், மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் இருப்பது நல்லது. சிறிய விஷயம் கூட ஒருவரை பாதித்து மன அழுத்தம் ஏற்படலாம்.


குறிப்பாக ஒரு பிரச்சினையில் என்ன முடிவு ஏற்படுமோ? என்ற எதிர்பார்ப்பு தான் மன அழுத்தத்துக்கு அறிகுறி. ஒரு விவகாரத்தில் சாதகமாகவோ, பாதகமாகவோ முடிவு ஏற்பட்டால் பெரிய அளவில் மன அழுத்தம் ஏற்படாது. ஆனால் எதிர்பார்ப்புக்கும், ஏமாற்றத்துக்கும் இடையே உள்ள வாழ்க்கையில் தான் அதிக மன அழுத்தம் ஏற்படும்.


அந்த பிரச்சினையின் முடிவு நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது மூளையில் அது தொடர்பான பாதிவுகள் அதிகமாகி மன அழுத்தம், டென்ஷன் கூடிவிடும். பிரச்சினையின் முடிவில் சாதகமான சூழ்நிலை அமைந்தால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.


மாறாக பாதகமாக அமைந்தால் அதிகமான மன அழுத்தம் உருவாகி தீமை ஏற்படுகிறது. எனவே எந்த பிரச்சினை குறித்தும், அதிக எதிர்பார்ப்பு, பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.


எதிர்பார்ப்பு வீணாகி விட்டதே என்று நினைப்பவர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

கருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்!

கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றுக்கு இரண்டு சிறிய கோப்பை அளவுக்கு மேல் காபி அருந்த வேண்டாம் என்றும் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் கேள்வித்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்து ஆய்வு மேற்கொண்டனர். அதாவது குறிப்பாக இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் விவரங்கள் "பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில்" வெளியிடப்படவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்ப்ட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் தீய விளைவுகளை வெளியிட்டிருந்தது.

கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

15 Jan 2009

மூன்றாம் நிலை புகைப்பிடித்தலும் உடலுக்கு ஆபத்தானது

புகைப்பிடித்தலால் வரும் பாதிப்புக்களின் நிலைகளை அடிப்படையில் இரண்டாக வகுக்கின்றனர்.

1. நேரடியாக புகைப்பிடிப்பவருக்கு வரும் பாதிப்புக்கள்.

2. புகைப்பிடிப்பவர் வெளியிடும் புகையை சுவாசிப்பவர்கள் சந்திக்கும் பாதிப்புக்கள்.

தற்போது மூன்றாம் நிலை புகைப்பிடித்தலால் உருவாகும் பாதிப்புக்கள் குறித்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக சிகரெட் புகையில் இருக்கும் கூறுகள்..

தலைமுடி, உடைகள், சுற்றுச்சூழலில் உள்ள பொருட்களில் மற்றும் உபகரணங்களில் படிந்திருந்து அவை உடலினுள் உள்ளெடுக்கப்படுவதாலும் பாதிப்புக்கள் உருவாவதாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள், சிகரட் புகையில் இருக்கும் நச்சுக்கூறுகள் படிந்த பொருட்களை அதிகம் கையாள்வதால் அவர்களில் இப்பாதிப்பு அதிகமான இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

சிகரெட் குடிக்கும் அல்லது இன்னொருவர் விடும் புகையை உள்ளெடுக்கும் தாய்ப்பால் ஊட்டும் தாயின் தாய்ப்பால் மூலமும் குழந்தைகளுக்கு சிகரட்டில் உள்ள நச்சுக்கூறுகள் கடத்தப்பட்ட வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே புகைப்பிடிப்பவர்கள் குழந்தைகள் அல்லது சுகதேகிகள் உள்ள இடங்களில் புகைப்பிடிப்பதை குறிப்பாக வீடுகளில், வாகனங்களில் மற்றும் புகைப்பிடிக்க தடுக்கப்படாத பொது இடங்களிலும் புகைப்படிப்பதைத் தவிர்ப்பது நன்று.

மொத்தத்தில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பதே பிடிப்பவருக்கும் நல்லது ஏனையவர்களுக்கும் நன்மை ஆகும்..!

மேலதிக தகவல் இங்கு.

-விஞ்ஞானக்குருவி

சென்னை கோயம்பேட்டில் (CMBT) பல்லிளிக்கும் நமது ஜனநாயகம்...

கடந்த ஒரு மாசமா இது பத்தி எழுதனும்னு நெனச்சுட்டுருந்தேன். அதுக்குள்ள சரி பண்ணிடுவாங்கன்னு ஒரு நப்பாசை!


ஆனா, அவ்வளவு சீக்கிரம் சரி பண்ணிடுவோமான்னு இன்னும் 'அது' அப்பிடியேதான் இருக்கு. சரி, ரொம்ப 'பொடி' யெல்லாம் வேணாம். விஷயம் இதுதான்.

'இது' பத்தி நிறைய பத்திரிகைகள்ல வந்திருக்கலாம். இருந்தாலும், 'இதனால்' தினமும் ஒரு வகையில் பாதிக்கப்படுபவன் என்கிற வகையில், என்னோட புலம்பல்!

ஆசியாவின் பிரம்மாண்ட பேருந்து நிலையத்தின் முகப்பில் இருக்கும் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களின் 'விளம்பரங்கள்' அந்த சாலையைப் பயன்படுத்துவோரின் கண்களில் இருந்து தப்பித்தால், அவர்கள் கண்டிப்பாக கண் மருத்துவரிடம் சென்று தயவு செய்து கண்களை பரிசோதித்துக் கொள்ளவும்.

இது அம்மாவோட விளம்பரம்:



இது அய்யாவோட விளம்பரம்:

இந்த ரெண்டு விளம்பரங்களுக்கும் கொஞ்சம் எதிரே (ஒரு 50 - 100 அடிகள் இருக்கும்) ஒரு போக்குவரத்து சந்திப்பு இருக்கு. இது ஒரு முக்கியமான சந்திப்பு. கோயம்பேடு நிலையத்துக்கு வரும் பேருந்துகள் இது வழியாகத்தான் புயலெனப் பாயும்.

வட பழனியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த இடத்துக்கு வந்தவுடன், ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகிடுவாங்க! ஏன்னா, அவங்களுக்கு சிக்னல் குடுக்க கம்பம் இருக்கு ஆனா விளக்குதான் இல்ல! அந்தக் கம்பம் பரிதாபமா இப்பிடித்தான் நிக்குது

ஒவ்வொரு நாளும் உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில், இங்கு நடக்கும் போக்குவரத்துக் கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சிக்னல் இருக்கா இல்லையான்னு தெரியாம, பேருந்து வராத நேரத்துல, சடாருன்னு போறாங்க. திடீர்ன்னு பேருந்துகள் உள்ளே போகும், வெளியே வரும். அன்னைகளுக்கு வார்த்தை அபிஷேகம்தான்.

லட்சக்கணக்குல கொட்டி சுய விளம்பரம் செய்து கொள்ளும் அரசர்களுக்கும், அரசிகளுக்கும் அந்த செலவில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாத மூன்று விளக்குகள் போட நேரமில்லை அல்லது அக்கறையில்லை.

ஆள்பவர்களுக்கு விளம்பரம் கொடுத்து காவடி தூக்கும் அதிகாரிகளுக்கும் இதப் பத்திக் கவலையுமில்லை. ஆக, நமது ஜனநாயகம் பல்லிளிக்கும் பல இடங்களில் இதுவும் ஒன்று.

-தஞ்சாவூரான்