26 May 2009

யாஹூ மெசெஞ்சர் (Yahoo Messenger) ஒரே நேரத்தில் பல கணக்குகளில் சாட் செய்ய...

நம்மில் பலர் யாஹூவின் சேவையான யாஹூ மெசஞ்சரை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம்.

அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் மெசஞ்சரில் இல் லாக் இன் (Sign In) செய்ய முடியாது. கீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.
முதலில் Yahoo messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

1. முதலில் Start மெனுவுக்கு சென்று "Run" என்பதனை கிளிக் செய்யவும். அதில் regedit என்று டைப் செய்து OK செய்யவும்.

2. உங்கள் கணித்திரையில் Registry Editor விண்டோ தோன்றியிருக்கும். அதில் HKEY CURRENT USER க்கு பக்கத்தில் உள்ள "+" குறியை அழுத்துங்கள். அதன் வழியே Software->Yahoo->Pager->Test க்கு செல்லவும்.
3. இனி Registry Editor இல் உள்ள வலது பக்க பெட்டியில் வெளியே வைத்து Right Click செய்யவும். நீங்கள் கிளிக் செய்தவுடனேயே "New" என்ற Option தோன்றும். அதில் DWORD Value என்பதனை கிளிக் செய்யுங்கள்.4. நீங்கள் உருவாக்கிய "New Value #1" என்பதனை "Plural" என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளுங்கள். (கீழே படத்தை பார்க்கவும்)
5. நீங்கள் அதனை பெயர் மாற்றம் செய்த பின்பு அதனை "Double Click" செய்யுங்கள. Value Data என்ற Column இல் "0" ஆக இருப்பதை "1" ஆக மாற்றிக் கொள்ளுங்கள். இனி OK செய்து வெளியேறுங்கள்.
இனி வேலை செய்கிறதா என்று பாருங்கள், இல்லாவிட்டால் ஒருமுறை உங்கள் கணணியை ரீ-ஸ்டார்ட் செய்து பயன்படுத்துங்கள்.
நன்றி : தேன்தமிழ்

19 May 2009

ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?

“ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?” என்கிற கேள்வி எழும்போதே “எந்தப் படிப்பு ‘மோஸ்ட் வான்டட்’?” என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.

உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி இங்கே விளக்கமாக சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.

பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது.

தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.

எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

காரணம்.. படித்து முடிக்கும்போதே பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு வெளிநாட்டு வேலை வாய்ப்பு என இத்துறையில் பெருகிக்கொண்டே இருக்கும் தேவைகள்தான்!

பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத்துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத்துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது.

பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்பாக வழங்கி ஊக்குவிக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும்.

அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.

இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.

விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.

இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.

பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படுகிறது.

புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தப்பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.

வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.

இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.

இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு.

நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வினை நடத்துகின்றன.

இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.

அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப்படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி : அவள் விகடன்

இதயம் சில உண்மைகள்!

அறிவோமா அறிவியல்:

இதயம் சில உண்மைகள்!

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.

12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13. ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால் அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.

11 May 2009

பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?

பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது. வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும்.

முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள். 1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

நோய் அறிகுறிகள்

* இடைவிடாத காய்ச்சல்
* மூக்கில் நீர்வடிதல்
* தொண்டையில் வலி
* வயிற்று போக்கு* மயக்கம்
* பசியின்மை
* சளி தொல்லை
* சாப்பாடு மீது வெறுப்பு
* வாந்தி எடுத்தல்

5 May 2009

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது !

துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது.

கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஆடம்பர வீடுகளை தாங்கவிருந்த செயற்கை தீவுகள் பல கடலுக்குள் கிடக்கும் கட்டுமானக் குப்பைகளாகிப் போயின. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றைத் தான், இதுவரை துபாய்வாசிகள் கண்டுவந்தனர். இப்போது மாயை அகன்று வருகின்றது.

பாலைவன முகாம்களுக்குள் வாழும் தொழிலாளர்கள், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள், இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்தேர்ச்சி பெற்ற அதிக சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை வளமானதாகவே இருந்தது. இவர்களில் பலர் துபாயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆடம்பர வீடுகளை வங்கியில் கடன் எடுத்தாவது வாங்கிட முண்டியடித்தனர். துபாயில் வீடு வாங்குபவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்று அரசு ஆசை காட்டியது. இந்தக் காரணத்திற்காகவே வீடு வாங்கியவர்கள் நிறையப்பேர்.

அயல்நாடான ஈரானைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகப் பட்டது. சர்வதேச பொருளாதார தடைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஈரானை விட, துபாயில் இருந்து கொண்டு வணிகம் செய்வது பாதுகாப்பானது எனக் கருதினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வீட்டு மனைக்கான கேள்வி அதிகரிக்கவே, கட்டுமானக் கம்பெனிகளும் "பேரீச்சை மர வடிவில்", "உலக வரைபட வடிவில்" என்று செயற்கைத் தீவுகளை நிர்மாணித்து, அதிலே ஆடம்பர வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டங்களை அறிவித்தனர்.

இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னரே, வீடுகளை விற்கும் திட்டம் ஆரம்பமாகி விட்டது. முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், ஆனால் குடியேறுவதற்கு வருடக் கணக்கேனும் காத்திருக்க வேண்டி வரலாம். "துபாய் முதலாளித்துவத்திற்கு ஆயுசு நூறு" என்று நம்பிய பலர், (Real Estate) புத்தகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கற்பனை வீடுகளை வாங்கிக் கொண்டிருந்தனர்.

கையில் பணமில்லாதவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கிக் கட்டினர். "வீட்டின் விலை எப்போதும் கூடிக் கொண்டு தான் இருக்கும், ஒருபோதும் குறையாது" என்று பங்குச்சந்தை சித்தர் சொன்ன அருள்வாக்கு பொதுக்கருத்தாக இருந்த காலமது. அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டை சில நாட்களின் பின்னர் விற்று லாபம் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். வாங்கி ஒரு மணித்தியாலங் கழித்துக் கூட, சந்தையில் வீட்டின் விலை அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நிதிநெருக்கடி கட்டுமான கம்பெனிகளையும் விட்டுவைக்கவில்லை. பல நூறு அடுக்குமாடிக் கட்டடங்கள், செயற்கைத்தீவுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இவையெல்லாம் தொடர்ந்து கட்டப்படுமா? எப்போது முடியும்? என்ற கேள்விகளுக்கு எவரிடமும் பதில் இல்லை. வீடுகள் கட்டப்படவில்லை என்பதற்காக, கடன் கொடுத்த வங்கிகள் சும்மா விடவில்லை. லட்சக்கணக்கான டாலர் கடனை மாதாந்த தவணையில் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று நச்சரிக்கின்றன.

இதனால் இப்போது பலர் இல்லாத ஒரு வீட்டிற்காக பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுக்கடனை அடைத்து வரலாம். திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்?

துபாய் அரசாங்கம் தினசரி 1500 தொழில் விசாக்களை இரத்து செய்வதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை மறுக்கவில்லை, அதேநேரம் ஆமோதிக்கவுமில்லை. அந்த தொகை பத்திரிகை தெரிவித்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதைவிட கம்பெனிகள் இதுவரை எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளன என்ற சரியான விபரம் இல்லை.

எப்படியும் ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. இவர்களில் பலர் பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

இனிமேல் அது சாத்தியமா? துபாய் சட்டப்படி, வேலை இழந்தவர்களின் தொழில் விசா இரத்து செய்யப்படும். அதற்குப்பின் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கலாம். அதற்குள் இன்னொரு வேலை தேடிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் இதுவரை அதிக சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த, எஞ்சினியர்களின் சம்பளத்தைக் கூட அரைவாசியாக குறைக்கும் அளவிற்கு வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலை இழந்ததால், வீட்டுக்கடனை கட்டமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபகரமானது. துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியே சிறைத்தண்டனை கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்து கடனை கட்டி முடிக்க வேண்டி வரும்.

இதனால் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகும் போது கிரெடிட் கார்ட்டில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, தமது விலை உயர்ந்த கார்களை (எவருக்கும் விற்கமுடியாததால்) அங்கேயே போட்டு விட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வண்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது. மொத்தத்தில் துபாய் மாநகரின் சில பகுதிகள் யாருமே வசிக்காத இடங்களாக உருமாறுகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அரசாங்கம் புதிய ஊடக சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன் படி துபாயில் பொருளாதார பிரச்சினை இருப்பதாக, எந்த ஒரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்க முடியாது. அது குறித்த செய்திகளை பிரசுரிப்பவர்கள் அதிக பட்சம் ஒரு மில்லியன் டிர்ஹம் ($ 272000) குற்றப்பணம் கட்டவேண்டும்.

இதனால் ஊடகங்களும், செய்தியாளர்களும் "தேசப் பொருளாதாரம் என்றும் போல சிறப்பாக இருப்பதாக" பாசாங்கு செய்கின்றனர். இந்த சட்டம் காரணமாக பல வதந்திகள் பரவுகின்றன. இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கின்றது.

துபாய், "ஐக்கிய அரபு அமீரகம்" என்ற சமஷ்டிக் கூட்டமைப்பிற்குள் உள்ள மாநிலம். அதன் அயலில் உள்ள அபுதாபி மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும் பணக்கார எமிரேட். அதன் அளவுக்கதிகமான எண்ணை வளம் காரணமாக பெருமளவு தொகை பணத்தை கையிருப்பில் வைத்துள்ளது. எனினும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய்க்கு உதவ மறுத்து வருகின்றது.

இது ஏன் என்ற கேள்வி பலருக்கு புரியாத புதிராக உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக துபாய் திவாலாவதை அபுதாபி எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப்போல சுதந்திர கலாச்சாரம் கொண்ட துபாயில், கடும்போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கொண்டு வரும் நோக்கம் இருக்கலாம்.

அதே நேரம் அமீரகம் முழுவதையும் ஒரே நாடாக, அபுதாபியின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கே வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.

tamil friends networks

3 May 2009

அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி ?

நாளை தொடங்கி 24 நாட்களுக்கு சுட்டெரிக்கும்
அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி? டாக்டர்கள் டிப்ஸ்

கோடையின் உச்சகட்டமான அக்னி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டு 28ம் தேதி வரை நீடிக்கும் காலகட்டத்தில் கடுமையாக வெப்பம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் அக்னிக்கு முன்பே வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இப்போதே 110 டிகிரியை நெருங்கி வெயில் கொளுத்துகிறது. கடந்த ஆண்டு அக்னியின்போது கோடை மழை பெய்ததால் அதிக அளவில் பாதிப்பில்லாமல் மக்கள் தப்பினர். ஆனால் இந்த ஆண்டு வெயில் கொடுமை அதிகமாக இருக்கும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிப்பதற்கு டாக்டர்கள் சில டிப்ஸ்களை அளித்துள்ளனர்.

அவை வருமாறு:

சாதாரணமாக உடல் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும். கோடை காலங்களில் 113 பாரன்ஹீட் வரை எட்டும். இந்த வெப்பத்தை வியர்வை மூலமாக உடல் சமன் செய்கிறது.

கோடை காலத்தில் சிலருக்கு 3 வகையான வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. முதல் வகை ஹீட் கிரம்ப்ஸ். இதற்கு நீரில் உப்பு சேர்த்து அருந்தினால் சரியாகிவிடும்.

இரண்டாவது வெப்ப வெளியீடு. அதிக சூடு, உடல் நீர்த்தன்மை குறைவதால் இந்த நோய் வருகிறது. இதனால் அதிக களைப்பு, வாந்தி, தலை சுற்றல், தலைபாரம் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இப்படிப்பட்ட நோயாளிகள் உடனடியாக குளிர்ந்த, நிழலான இடத்துக்கு செல்ல வேண்டும்.2 முதல் 2.5 லிட்டர் திரவ ஆகாரங்கள் உட்கொள்ள வேண்டும். ஐஸ் கட்டிகளை உடலின் பல்வேறு பாகங்களில் வைக்க வேண்டும். மோருடன் சிறிது உப்பு சேர்த்து பருகலாம். இப்படி செய்வதின் மூலம் நோயாளிகள் ஓரிரு தினங்களில் குணமாவர்.

மூன்றாவது அசாதாரணமான வெப்ப தாக்கம். நீண்டநேரம் கடுமையான வெயிலில் நிற்பதாலும், அதனால் உடல் வெப்பத்தை தணிக்க வியர்க்காததாலும் இந்த நோய் வருகிறது. உடனடி சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் நிரந்தர ஆரோக்கியமின்மையும், இறப்பையும் உண்டாக்கும். மூளை, கிட்னி, கல்லீரல், தோல் உள்பட பலவற்றை பாதிக்கும். இந்த நோயாளியை உடனடியாக அறைக்கு உள்ளே அழைத்து வர வேண்டும். குளிர்ந்த நீரை சருமத்தில் விட்டு, வியர்வை உண்டாக்க மின் விசிறி அல்லது காற்று படுமாறு செய்யவேண்டும். ஐஸ் கட்டிகளை தொடை இடுக்கு மற்றும் அக்கிள்களில் வைக்கலாம்.

பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலை செல்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் தினமும் 6 முதல் 8 லிட்டர் நீர் பருக வேண்டும். டீ, காபி, ஆல்கஹால் பருகுவதை நிறுத்த வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்தான் வெப்ப காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு வெப்ப தாக்கம் வந்தால் காப்பாற்றுவது கடினமானது. ஏனெனில் பிறந்த சில நாட்களேயான குழந்தைகளுக்கு உடல் வியர்க்காது. அந்த குழந்தைகளால் எதுவும் சொல்ல முடியாது. அதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால், நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லவோ அல்லது விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளுக்கு அடிக்கடி அதிகமாக தண்ணீர் கொடுக்கவும், இளநீர், எலுமிச்சை சாறு, மோர், தர்பூசணி சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.

லேசான மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம். மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்தலாம். வெளியே செல்லும்போது தொப்பி அணிவதன் மூலம் வெப்பத்தை தவிர்க்கலாம். 2 அல்லது 3 முறை குளிக்க வைக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.