26 Jun 2008

தமிழ்நாடு பள்ளிப்பாட நூல்கள்

தமிழ்நாடு பள்ளிப்பாட நூல்கள்
இந்த இணைப்பில், தமிழ்நாடு state board பாடநூல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
வசதி குறைந்த மாணவ/மாணவியருக்கு, நீங்கள் இதை பதிவிறக்கி, அச்சடித்தும் பரிசளிக்கலாம்.
இந்த தகவலை நீங்கள் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள், எங்காவது ஒரு மூலையில் , யாருக்கேனும் உபயோகப்படும்.
-ரஸீம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு - பதிவு புதுப்பித்தல்

நீங்கள் தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பீர்களாயின்
இந்த இணைப்பில் நீங்கள் உங்கள் பதிவைப் புதுப்பித்துக்கொள்ளலாம். புதிதாக பதிவு செய்ய விரும்புவோரும்,
விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, தபால் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
-M.ரஸீம்

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை.

ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்..

ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது.

நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது.

நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.

இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.

-டாக்டர் ரவி ராமலிங்கம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்,
சென்னை
தகவல்- M.RISHAN SHAREEF
நன்றி : மருத்துவம்

22 Jun 2008

உங்கள் வாகனத்திற்க்கு பெட்ரோல் போட போறிங்களா ?

ஜீரோவைப் பாருங்க சார்!'' - டூ வீலருக்கு பெட்ரோல் போடச் சென்றால், பங்க்கில் இப்படி சின்சியராகத்தான் மீட்டர் பார்க்கச் சொல்கிறார்கள்.

ஜீரோவை முறைத்து முறைத்துப் பார்த்தாலும், நம் மனசில் ஏதோ உறுத்தல். கடைசியில், நாம் சந்தேகப்பட்டது சரிதான்.

வழக்கமாக ஒரு லிட்டருக்கு அறுபது கிலோ மீட்டர் போகும் பைக் இந்த முறை ஐம்பதிலேயே `ஸாரி தலைவா, இதுக்கு மேல முடியலை!'' என்று முட்டுகிறது.

சின்சியர் சிகாமணிகள் பெட்ரோலை குறைத்து ஊற்றிவிட்டார்கள்.
சர்வீசுக்கு விட்ட பைக்கை எடுத்து வரச் சென்றால், அங்கே மறுபடியும் ஒரு மனஉளைச்சல்.

``ஏதாவது நல்ல பங்க்ல பெட்ரோல் போடுங்க. இன்ஜின்ல மண்ணெண்ணெய் நாத்தம் அடிக்குது'' என கேஷுவலாகச் சொல்கிறார் மெக்கானிக்.

``வருஷத்துக்கு ஒருமுறை சட்டமுறை எடை அளவுத்துறை மூலமாக பெட்ரோல் பங்க்குகளில் இருக்குற மீட்டர் சோதனை செய்யப்படுது. மீட்டரில் சரியான அளவு மாறாதபடி, அதிகாரிகள் ஈயமுத்திரை போட்டு லாக் செஞ்சிடுவாங்க. இந்த லாக் இருந்தா,மீட்டர் காட்டுற அளவுப்படிதான் பெட்ரோல் போடமுடியும்.ஆனா பெரும்பாலான பங்க்குகளில் சாமர்த்தியமா இந்த லாக்கை ரிலீஸ் செஞ்சு, இஷ்டத்துக்கு மீட்டரை செட் பண்ணிடுறாங்க. இதன்மூலமாக, மீட்டர் அதிகமா அளவு காட்டுனாலும், பெட்ரோல் குறைவாதான் வரும்'' என்று சொல்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் நிறுவனர் தேசிகன்.

``சரி, ஒரு கேனை எடுத்துட்டுப் போய் பெட்ரோல் வாங்குனா?' என்று நம் கன்ஸ்யூமர் மனசு யோசிக்கலாம். ஆனால் சட்டமே நமக்குத் தடையாக நிற்கிறது. வெடிமருந்துப் பொருட்கள் சட்டத்தின்படி, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை கேனில் எடுத்துச் செல்ல முடியாதாம். நாம் கொடுத்த பணத்துக்குக் குறைவான பெட்ரோல் ஊற்றினால், தீர்வுக்கு என்னதான் வழி?
அருகிலுள்ள சட்டமுறை எடை அளவுத்துறை அலுவலகத்தில் புகார் பண்ணலாம்.

``எங்களிடம் உள்ள 5 லிட்டர் அளவோடு பங்க்குக்குப் போய், சந்தேகத்துக்குரிய பம்ப்லயிருந்து பெட்ரோல் போடச் சொல்வோம். பெட்ரோல் சுலபமா ஆவியாகுற பொருள்ங்கிறதால, 15 மில்லி லிட்டர் வரைக்கும் குறைஞ்சா தப்பு இல்லை. அதுக்கும் மேலே அளவு வித்தியாசப்பட்டா, பெட்ரோல் குறைவா ஊத்தியிருக்கிறதை உறுதியா சொல்லிடலாம்!'' என நம்பிக்கையூட்டுகிறார் இந்தத் துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன்.
பெட்ரோலில் மண்ணெண்ணெய், நாப்தா, பென்சீன் உள்ளிட்ட பொருட்களைக் கலப்படம் செய்வதும் ஜோராக நடக்கிறது.

பெட்ரோலில் 15 சதவீதம் நாப்தா கலந்தால், ஒரு பங்க் தினமும் 32 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாய் லாபம் பார்க்க முடியும் என்கிறது ஒரு சுற்றுச்சூழல் பத்திரிகை. இந்த வேதிப் பொருளை 20 சதவீதம் கலந்தால்கூட, இந்தியத் தர நிர்ணய அமைப்பின் சோதனைகளால் கண்டுபிடிக்க முடியாதாம்.

உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலன் துறையில் புகார் செய்து, பெட்ரோல் கலப்படப் பிரச்னைக்கு வாடிக்கையாளர்கள் தீர்வு காண முடியும். பங்க்கில் பில்டர் பேப்பர் கேட்டு, அதில் பெட்ரோலை ஊற்றியும் கலப்பட பெட்ரோலைக் கண்டுபிடிக்கலாம்.

சாதாரண பெட்ரோலில் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, ஸ்பெஷல் பெட்ரோல் மட்டும் தரமாகவா இருக்கும்?

``ஸ்பெஷல் பெட்ரோலில் சில பூஸ்டர்களை சேர்க்குறாங்க. எத்தனால், மெத்தனால் உட்பட எல்லா ரசாயனப் பொருட்களும் இதுல சரியான விகிதத்தில் இருக்கும்.தூசுப் பொருட்களும் கணிசமாக குறைக்கப்பட்டுருது. இதனால் இன்ஜின் சீராக இயங்குறதோட, 10 சதவீதம் கூடுதலா மைலேஜ் கிடைக்கும்'', விளம்பரத்தில் வருவது போலவே சொல்கிறார் ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர்.

``ஸ்பெஷல் பெட்ரோல் போட்டா, கூடுதலா சில கிலோ மீட்டர் போக முடியலாம். ஆனால் இதைத் தயாரிப்பதில் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை நம் நாட்டுல பின்பற்றுறாங்களாங்கிறது சந்தேகம்தான்.

பெட்ரோல் எடுத்துவர்ற டேங்கர் லாரிகள் உள்சுவரில் வருஷத்துக்கு ஒருமுறை `கோட்டிங்' கொடுக்கணும். பத்து வருஷத்துக்கு ஒரு முறை பங்க்குகளின் டேங்குகளைப் புதுப்பிக்கணும். இதுமாதிரியான அடிப்படை விதிமுறைகளையே பல பங்க்குகள் மதிக்குறது இல்லை. அதனால் அங்கே பெரிய உத்தரவாதத்தோடு தரப்படுற ஸ்பெஷல் பெட்ரோலை எந்தளவுக்கு நம்ப முடியும்?'' என்று கேட்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வருடத்தில் எந்த நாளிலும் எண்ணெய் நிறுவனங்களின் ஏஜென்சிகள் பங்க்குகளைச் சோதனையிட முடியும் என டீலர்கள் சொல்கிறார்கள். பெட்ரோல் அளவு குறைந்தாலும் கலப்படம் செய்தாலும் அரசின் இரு வேறு துறைகள் நடவடிக்கை எடுக்கின்றன.

இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பங்க்குகளில் ஏமாறுவது தொடர்கிறது. நம்மூரில் கஷ்டமும் குழப்பமும் ஆன விஷயம் வாடிக்கையாளராக இருப்பதுதான்..

எப்படி ஏமாத்துறாங்க?

வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் பெட்ரோலைக் குறைத்து ஊற்றுகிற மோசடி எப்படி நடக்கிறது? தேசிய சட்டமுறை எடை அளவுத் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

``பெட்ரோல் ஊத்துற மெஷினில் கியரை மாத்துனா, மீட்டரில் தெரிகிற அளவு அதிகமா இருக்கும். பெட்ரோல் கம்மியா வரும். சில சமயங்கள்ல பம்ப்புல காற்று அடைச்சிருந்தா, அதுக்கும் சேர்த்து மீட்டரில் அளவு கூடும். வாடிக்கையாளர்கள் கவனமா இருந்தா, இந்த மோசடியைத் தவிர்க்க முடியும். மீட்டர் ஜீரோ காட்டும்போது மட்டும்தான் பெட்ரோல் போட நாம அனுமதிக்கணும்.

வாடிக்கையாளர்கள் வராம, குறைந்த பட்சம் அரைமணி நேரம் சும்மா இருக்குற பம்ப்புல முதல் ஆளா போய் பெட்ரோல் போட்டாலும் அளவு குறையும். அதனால கூட்டம் இல்லாத பங்க்ல பெட்ரோல் போடறதைத் தவிர்க்குறது நல்லது.

பம்ப்பின் சரியான வேகம் ஒரு நிமிஷத்துக்கு 10 லிட்டர். இதுக்குக் குறைவான வேகத்துல பெட்ரோல் ஊத்தினா, அளவு குறையுதுங்கிறதை கண்டுபிடிச்சிடலாம். இரண்டு பம்ப் இருந்தா, பெரும்பாலும் அதுல ஒண்ணு மட்டும்தான் தப்பா செட் பண்ணப்பட்டிருக்கும். இன்னொரு பம்ப் ஒழுங்கா செயல்படும். ரெய்டு நேரத்துல தப்பிக்குறதுக்காக இந்த ஏற்பாடு.

பங்க்ல இருக்குறவங்க தவறான பம்ப் மூலமா நமக்கு பெட்ரோல் போடுறதுக்கு ஆர்வம் காட்டுவாங்க. அப்போ நாம் உஷார் ஆகி, அடுத்த பம்ப்புக்குப் போயிடணும். இதையெல்லாம் மீறி பெட்ரோலின் அளவில் சந்தேகம் இருந்தா, அந்தப் பகுதியில் இருக்குற எடை அளவு கட்டுப்பாட்டு அதிகாரிகிட்டே புகார் பண்ணலாம்'' என்று வழிகாட்டுகிறார்.

-ஆனந்த் செல்லையா
தகவல் : குமுதம்

17 Jun 2008

திருமணமானபின் இறந்த மகளின் சொத்தில் பெற்றோருக்கு பங்கு

புதுடெல்லி, ஜூன் 16:

திருமணமானபின் மகள் இறந்தால் அவரது சொத்தில் பெற்றோருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று சட்டக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
மத்திய சட்ட அமைச்சகர் பரத்வாஜிடம் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையிலான சட்டக்கமிஷன் அளித்துள்ள 207வது அறிக்கையில் இது பற்றி கூறியிருப்பதாவது:

இப்போது, பெண்கள் நன்கு படித்து உயர் பதவியில் அமருகின்றனர். நன்கு சம்பாதித்து சுயமாக வாழ அவர்களால் முடிகிறது. இந்து வாரிசு சட்டம் வடிவமைக்கப்பட்ட காலத்தில் ஆண்களை நம்பிதான் பெண்கள் வாழும் நிலை இருந்தது.

ஆனால், இன்று அப்படியில்லை. ஆண்களை விட பெண்கள் பலர் அதிகம் சம்பாதிக்கின்றனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அவர்கள் நல்ல சம்பளத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்து வாரிசு சட்டப்படி, திருமணமான பெண் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால், அவரது சொத்து முழுவதையும் கணவனோ அல்லது அவரது மாமியார், மாமனாரோதான் அனுபவிக்க உரிமை உள்ளது. அவர்களும் உயிருடன் இல்லை என்றால், கணவனின் உடன் பிறந்தவர்களுக்குதான் சொத்து முழுவதும் சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் பெற்றோருக்கோ, உடன் பிறந்தவர்களுக்கோ சொத்தில் எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

பெற்றோர் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டு என்று சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளபோது, மகளின் சொத்தில் பெற்றோருக்கு உரிமை உள்ளது என்று சட்ட திருத்தம் கொண்டு வருவதுதான் நியாயம்.

திருமணத்துக்கு பின், குழந்தை இல்லாமல் மகள் இறந்தால் அவரது சுயசம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் எல்லாவற்றிலும் பெண்ணின் பெற்றோருக்கு கணவர் பங்கு கொடுக்க வேண்டும். இதற்கு ஏற்றார்போல், இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு சட்டக்கமிஷன் பரிந்துரைத்துள்ளது.


1400 வருடங்களுக்கு முன் திருக்குர்ஆன்

4:11 உங்கள் மக்களில ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

15 Jun 2008

தீண்டத்தகாத உணவா சோறு?

அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை.

முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். "சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்" என்றேன். "அப்ப சோறை நிப்பாட்டட்டா" என்றார்.

நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு "சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேற என்ன சாப்பிடுவிர்கள்" என அப்பாவியாகக் கேட்டேன்.

"வேறை என்ன? இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்" என்றாள்.

உரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல "சரி நான் சோத்தை கைவிடுகிறன்" என்றார்.

"சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே!" என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டாக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.

காச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே "இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு "பிரட், ரெஸ்க் கொடுக்கிறேன் என்றாள்.

ஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது? அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள்.

இவை தவறானகருத்துத்தான். ஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும் இவை அதிக உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.

இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசைபோன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.இரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது.

அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக ஜிரணம் ஆகும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.

காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல. எனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம்.

சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.

- டாக்டர் எம்.கே. முருகானந்தன் -
தகவல் : மருத்துவம்

10 Jun 2008

பிளஸ் 2 பெயிலானவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் 11.06.2008 முதல் வினியோகம்

பிளஸ் 2 பெயிலானவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் 11.06.2008 முதல் வினியோகம்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2 தேர்வில் 3 பாடங்களுக்குள் தேர்ச்சி அடையாத மாணவ, மணவிகளுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் நடக்கின்றன.

தேர்வு எழுத ஏற்கனவே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கடந்த 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. கடைசி தேதி வரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்புவோர் அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாமல் இருந்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்புவோர் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன்படி ஒரு பாடத்துக்கு ரூ.85 மற்றும் ரூ.1,000 சேர்த்து செலுத்த வேண்டும். இரண்டு பாடங்களுக்கு ரூ.135 மற்றும் ரூ.1,000 சேர்த்து செலுத்த வேண்டும். மூன்று பாடங்களுக்கு ரூ.185 மற்றும் ரூ.1000 சேர்த்து செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணங்களை,
அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை -60
என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தனித்தேர்வர்கள் சிறப்புக் கட்டணமாக ரூ.1,000க்கு மட்டும் டிடி எடுத்து சமர்ப்பித்தால் போதும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக தேர்வுத் துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் தேர்வு எழுதுவோருக்கான விண்ணப்பங்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வினியோகிக்கப்படும்.

விண்ணப்பங்களை சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள்,

திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள்,

புதுச்சேரியில் உள் இணை இயக்குனர் (கல்வி) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 13ம் தேதி மாலைக்குள் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

எனவே, சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் சமர்ப்பிக்கும் போது அப்போதே பதிவு எண் மற்றும் தேர்வு மையம் குறிப்பிட்டு ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல் : தமிழ்முரசு

துபாய் சிட்டி ரவுண்ட்

துபாய் சிட்டி ரவுண்ட்

அதிசய பேருந்து

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பேருந்து இது. சாலையில் வந்து கொண்டே இருப்பீர்கள் திடீரென்று எட்டிப்பார்த்தால் அந்தப் பேருந்து கடலில் செல்லும். என்னடா பேருந்து கவிழ்ந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சாலையில் இருந்து கடலுக்குள் செல்லுகின்றது இந்தப்பேருந்து.

44 இருக்கைகள் அடங்கிய இந்தப் பேருந்து 2002 ம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேருந்து அமெரிக்காவின் கைவண்ணம்.

முழுவதுமாய் குளிரூட்டப்பட்ட பெரிய டிவி மற்றும் குளியல் அறை கொண்ட பேருந்து இது. பயண நேரங்களில் தேவைக்கேற்ப உணவும் குளிர்பானமும் வழங்கப்படுகின்றது.

பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இருக்கையின் கீழும் லைப் ஜாக்கெட் வைக்கப்பட்டுள்ளது. பயணமானது பர்ஜுமான் என்ற பெரிய அங்காடிப்பகுதியிலிருந்து ஷேக் செய்யது சாலை அல் வாசல் பாலம் வாபி சிட்டி என்ற பொழுது போக்கு மையம் - அல் பூம் உணவகம் வழியாக கடலில் சென்று விழுகின்றது.

கிரீக் பார்க் - துபாய் நீதிமன்றம் - அல் மக்தூம் பாலம் - ஷேக் மரியம் அரண்மனை வழியாக கடலில் பயணம் செய்து மீண்டும் பர்ஜுமான் அங்காடியை அடைகின்றதுசுமார் இரண்டு மணி நேர பயணத்தில் துபாயைச் சுற்றுகின்றது.

ஒரு நாளைக்கு இரண்டு முறையாக காலை 11 மணியளவிலும் மாலை 4 மணி அளவிலும் இந்த பேருந்து செயல்படுகின்றது.பேருந்து கிளம்புவதற்கு 20 நிமிசம் முன்பாகவே அந்த அங்காடிப் பகுதிக்கு வந்துவிடவேண்டும்.

3 முதல் 12 வயது உள்ள சிறியவர்களுக்கு 115 திர்ஹம்பெரியவர்களுக்கு 75 திர்ஹமும் வசூலிக்கின்றார்கள்.

கட்டணம் வித்தியாசமமே தவிர பெரியவர்களுக்கும் குழந்தை தனத்தைக் கொடுத்து குதூகலமூட்டும் இந்தப்பயணம்.



பாலைவனப் பயணம்

சாலையிலும் கடலிலும் பணம் செய்வதை விடவும் ஆள் அரவமே இல்லா பாலைவனத்திற்குள் பயணம் செய்வது என்பது மிகவும் மெய் மறக்க வைக்கின்ற செயலாகும்.

தினமும் மாலை 3.30 அல்லது 4.30 மணியிலிருந்து ஆரம்பிக்கின்ற பயணம் சுமார் 5 அல்லது 6 மணிநேரப்பயணமாக பாலைவனத்திற்குள் சுற்றுகின்றது.

கார் பாலையின் மேடு பள்ளங்களில் பாய்கின்றபொழுது கலைத்து வீசப்படுகின்ற மணலும் தூசி மண்டலங்களும் கார் கவிழ்ந்து விட்டதோ என்று நம்மை அலற வைக்கின்ற தருணங்களும் மிகவும் திரில்லாக இருக்கும்.

இந்த பயணத்தில் ஒட்டகச் சவாரி - உணவக வசதி - பெயிண்டிங் ( கைகளில் கால்களில் பெயிண்ட்டிங் செயது கொள்ளலாம் ) - சீஷா என்று அழைக்கப்படுகின்ற அரபிக்கள் குடிக்கின்ற சிகரெட் போன்று ஆனால் போதையில்லாத உடலுக்கு கேடு தராத வாட்டர் பைப் - பெல்லி நடனம் ( மின்விளக்கில் ஆடுகின்ற நிலவுகள் ) ஆகியவை உள்ளடக்கம்.

பயணத்தின் போது சூரிய அஸ்தமனத்தைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். அத்தனை அழகு காட்சி.

தண்ணீருக்குள் இருந்து சூரியன் வருவதைக் கன்னியாகுமரியில் கண்டிருப்பீர்கள். ஆனால் பூமியில் முளைக்கின்ற சூரியனைக் கண்டிருக்கின்றீர்களா..? பயணத்தின் உச்சக்கட்டமே இதுதான்.

175 திர்ஹம் பெரியவர்களுக்கு 110 திர்ஹம் சிறியவர்களுக்கு.


ஆடம்பர கார் பயணம்

(Luxuries Limo) இந்த காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு துபாயை சுற்றிப்பார்க்க கிளம்பலாம்.

மிகவும் ஆடம்பரமான மற்றும் நீளமான காரில் ராஜாக்களைப் போல நாம் வலம் வரலாம். காரினுள் உணவக வசதி உண்டு.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் இதுபோன்ற காரில் பயணம் செய்த அனுபவம் வேண்டும்.


இரட்டை அடுக்கு பேருந்து

திறந்த மேல் அடுக்கினைக் கொண்ட இந்த இரட்டை அடுக்கு பேருந்தில் உல்லாசமாக சுற்றி வரலாம்.


லண்டனுக்கு அடுத்து இந்த பேருந்து கம்பெனி துபாயில்தான் அதன் சர்வீஸை ஆரம்பித்துள்ளது.

பேருந்தின் மேல் அடுக்கில் 41 இருக்கைகளும் கீழ் அடுக்கில் 27 பேர் அமரும்படிhயக இருக்கைகள் உள்ளன. இந்த பயணமானது 1 .30 மணி நேரம் பயணிக்கின்றது.

ஆனால் இந்த நேரம் வாகன போக்குவரத்து நெருக்கடியைப் பொறுத்தது. இந்தப் பயணத்தில் வாபி சிட்டி என்ற பொழுதுபோக்கு மையம் துபாய் கடற்கரைப்பகுதி பிரிட்டிஷ் தூதரகம் துபாய் மியுசியம் - பர்துபாய் பழைய மார்க்கெட் வீதி - ஜுமைரா பீச் பகுதி - ஷேக் செய்யது அல் மக்தூம் வீடு மற்றும் கலாச்சாரக் கட்டிடங்கள் - தங்க மார்க்கெட் வீதி ஆகிய பகுதிகளை கடந்து துபாய் இரட்டைக் கோபுரத்தில் வந்து முடிகின்றது.

காலை 10 மணியிலிருந்து ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒரு பேருந்து வாபி சிட்டியில் இருந்து ஆரம்பிக்கின்றது. இரவு 10 மணி வரை இந்த பேருந்து சர்வீஸ் உண்டு.

இதன் விலையானது பெரியவர்களுக்கு 50 திர்ஹமாகவும் சிறுவர்களுக்கு 30 திர்ஹம் ஆகவும் இரண்டு பெரியவர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட உள்ள ஒரு குடும்பத்திற்கு 130 திர்ஹமும் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு இலவசமாகவும் நிர்ணயித்துள்ளது.

ஆனால் சீசன் காலங்களில் இதன் விலை வித்தியாசப்படுவதுண்டு. இந்தப் பேருந்தை தனியாக நாம் மட்டும் வாடகைக்கு அமர்த்தி நமது குடும்பங்கள் - நண்பர்கள் - உறவினர்கள் என்று உல்லாசாய் சுற்றலாம்.


ஹத்தா சபாரி

ஹத்தா என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பகுதியானது மலைப்பாங்கான பகுதியாகும். சமீபத்தில் எங்களுடன் வந்த எனது நண்பர் ஒருவர் பயணத்தின் போது பயத்தில் கண்களை திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்துவிட்டார். அந்த அளவிற்கு மிக ஆழமான பள்ளங்கள் - மேடுகள் என்று பயணம் மிகவும் திரில்லாக இருக்கும்.

இங்கே மில்லியன் ஆண்டு பழங்கால வித்தியாசமான நிறங்களில் மலைகள் மற்றும் மண்களின் நிறங்கள்.. வாடி என்று அழைக்கப்படுகின்ற நீர் வீழ்ச்சி -இயற்கை நீச்சல் குளங்கள் மற்றும் போர்ச்சுக்கீசியர்களின் 16 வது நூற்றாண்டு கோட்டை மற்றும் விவசாய விளை நிலங்கள் என்று பயணம் கொஞ்சம் வித்தியாசமான சூழலைத் தருகின்றது.



அல் அய்ன் சுற்றுலா


அல்அய்ன் என்று அழைக்கப்படுகின்ற இந்த நகரமானது அமீரக கூட்டமைப்பில் உள்ள ஒரு சிறிய நாடாகும்.

மிகவும் பசுமை நிறைந்தது. இங்குள்ள நிலங்களில் இருந்துதான் அதிகமான காய்கறிகளும் பேரீத்தம் பழங்களும் உற்பத்தியாகின்றன.

இங்கு ஹில் சிட்டி என்று அழைக்கப்படுகின்ற பசுமை நிறைந்த தோட்டங்கள் வழியாக செல்லுகின்ற பயணம் அமீரகத்தின் மிகப்பெரிய ஒட்டக சந்தையில் முடிகின்றது.

இந்தச்சுற்றுலாவில் அல் அய்ன் மியுசியம் - உயரமான மலைப்பகுதி - கண்கவரும் நிலப்பகுதிகள் என்று பயணம் தொடர்கின்றது.



படகு உணவுப் பயணம்


வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நிலாச்சோறு உண்டிருப்பீர்கள். ஆனால் நிலாவுடன் பயணதித்துக்கொண்டே நிலா வெளிச்சத்தில் உணவு உட்கொள்வதற்கான அருமையான தருணம்.

பிறந்த நாள் விழா - திருமண விழா என்று நண்பர்களுக்கு உறவினர்களுக்கு விருந்து கொடுக்கலாம். படகில் இருந்த படியே சுற்றியுள்ள கலாச்சாரக் கட்டிடங்களையும் மன்னரின் பிறந்து வளர்ந்த இடங்களையும் ரசித்துக்கொண்டே பயணப்படலாம்.

இரவு நேரங்களில் கடல் வெளியினில் உணவு உட்கொண்டு கொண்டே பயணப்படுவது என்பது மனசை மிகவும் மகிச்சியூட்டும் செயலாகும்.

- ரசிகவ் ஞானியார்

8 Jun 2008

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.12

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.2.12

இந்தியாவில் அல்ல, வெனிசுலாவில் தான்

உலகிலேயே துருக்கியில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.113.

ஆனால் வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 12 பைசா மட்டும்தான்.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்க உலகம் முழுவதும் பாதிப்புகள் தெரியத் தொடங்கிவிட்டன.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 130 டாலரை தாண்டிவிட்டது. இந்நிலையில் அதற்கு சமமான விலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விற்க முடியாதால் பெட்ரோலிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

அதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, டீலர்களுக்கு சப்ளை குறைப்பு என ஏகப்பட்ட விளைவுகள்.

சரி... மற்ற நாடுகளில் நிலவரம் எப்படி?

உலகிலேயே துருக்கியில்தான் பெட்ரோல் விலை அதிகம். அங்கு ஒரு லிட்டர் ரூ.113.30 க்கு விற்கப்படுகிறது.

நார்வேயில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112.

ஆனால் இதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத விலை வெனிசூலா, சவூதி அரேபியா, ஐக்கி அரபு எமிரேட்சில் உள்ளது.

வெனிசுலாவில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 12 பைசா மட்டும்தான்.

அந்நாட்டு அரசு கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு, மானியம் தருவதால்தான் இவ்வளவு குறைவாக விலை உள்ளது.

உலகிலேயே இந்த விலைக்கு வேறெங்கும் பெட்ரோல் விற்கப்படுவது இல்லை.

சவூதி அரேபியாவில் ஒரு லிட்டர் விலை 5 ரூபாய்தான். இந்தியாவில் விற்பதில் இது 10ல் ஒரு பங்குதான். ஐக்கிய அரபு எமிரேட்சில் லிட்டர் விலை ரூ.15.65.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.76.

இந்த விலையில் 52 சதவீதம் வரிகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் : தமிழ் முரசு

4 Jun 2008

முத்துபேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மாபெறும் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி!

முத்துபேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் மாபெறும் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி!

பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3



பக்கம் 4