27 Aug 2007

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா


வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா॥? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற அலட்டல்கள் முன்பு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் செய்வதுண்டு।
சிறுவயதில் எனக்குத் தெரிந்து வெளிநாடு சென்றுவிட்டு எளிமையாக வந்தவர் எனது நண்பரின் தந்தை ஒருவர் । அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு ஒவ்வொரு 3 அல்லது 4 வருட இடைவெளியிலும் வருவார். அவர் வந்துவிட்டால் புது டேப் - வெளியில் அலரும் ஸ்பீக்கர் - செண்ட் வாசனை என்று கமகமக்கும். ஆனால் சென்று விட்டு வந்த எனது நண்பனின் தந்தையை விடவும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அலட்டல் சில சமயம் தாங்க முடியாது. புதிய டேப்பில் சத்தம் அதிகம் வைப்பது – டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவது என்று அலட்டல்கள் ஆரம்பித்துவிடும்.


நம்ம துபாய்காரங்க என்ன அவுகளுக்கு குறைச்சலா என்ன॥? எனது ஊரில் உள்ள பல இளைஞர்கள் துபாய் சென்றுவிட்ட வந்தவர்களின் அலட்டலுக்காகவே துபாய் செல்ல விரும்புவார்கள்। அந்த அளவுக்கு அலட்டல்ங்க.


துபாயிலிருந்து அந்த இளைஞர் இந்த தேதிக்கு வருகிறேன் என்று தொலைபேசி வந்தவுடனையே இவர்கள் குடும்பத்தோடு விமான நிலையம் செல்ல தீர்மானித்துவிடுவார்கள்। இதில் சொந்தக்காரர்களில் , அவர்களை கூப்பிடவில்லை , இவர்களைக் கூப்பிடவில்லை என்று குறைவேறு.


துபாயிலிருந்து வருகிறவர்களுக்கே இடம் இல்லாதபடிக்கு ஆட்களை அதிகமாக வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.


அட அந்த சென்னை & திருச்சி செல்லும் சாலை மிக மோசமான சாலை। அடிக்கடி விபத்து நேரிடும் பகுதி॥அதில இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகணுமா..? யாராவது ரெண்டு பேர் மட்டும் போனா பத்தாதா..? சொன்னா கேக்குறாங்களா..? சரி விமான நிலையத்தை பார்க்கிற ஆசையில இருக்கலாம்.


துபாயிலிருந்து வருகிறவர் விமானநிலையத்தில் கொண்டு வந்த தங்க நகைகளை காப்பாற்றி எலெக்ட்ரானிக் அயிட்டங்ளை சுற்றி சாக்லேட் ,சோப்பு, துணிமணிகள் வைத்து சுற்றி பெட்டிக் கட்டிக்கொண்டு வருவார்.
துணியை வைத்து சுத்துனா ஸ்கேன்ல தெரியாமலா போகும்…? என்ன ஆளுங்கய்யா॥?


கஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு எதுவுமே இல்லைங்க வெறும் சாக்லேட் துணிமணிகள்தான் என்று பொய் ஒன்றைச் சொல்லி ,பெட்டியை இழுத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் ஆகிவிடும்।


ஆனால் வெளியில் உள்ளவங்களுக்கு இது தெரியுமா..? "விமானம் வந்து எவ்வளவு நேரமாச்சு.? இன்னும் வரக்காணோம்..முதல் ஆளா வரவேண்டடியதுதானே..?" என்று எரிச்சல்படுவார்கள்.
அட இதென்ன பேருந்து நிலையமா? விட்டவுடன் நேரா வெளியே வர்றதுக்கு॥விமான நிலையம்பா....


அவர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........
கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..
செண்டிமெண்ட் பேத்தல்கள் கொஞ்சநேரம் நடக்கும்। அப்புறம் வேனில் வரும்பொழுதே அவர் இல்லாமல் இருக்கும்பொழுது, ஊரில் நடந்தவைகள் அனைத்து தேதிவாரியாக உறவினர்கள் சொல்லிவிடுவார்கள்.


அவர் ஊரில் வந்து இறங்கியவுடனையே அலட்டல்களின் காட்சிகள் அரங்கேறிவிடும்। அவரு கொண்டு வந்த பெட்டியை அவரு சீக்கிரம் திறந்து விடக்கூடாது. அட அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வர்றாரு அவரு திறக்க கூடாதாங்க? சரி அவங்க அம்மா, அப்பா யாராச்சும் திறக்கலாம். ஆனா திறக்க கூடாதாம். சொந்தக்காரர்களில் அவங்க வரலை,இவங்க வரலை,எல்லாரும் வந்தவுடன்தான் பெட்டியை திறக்கணுங்கிற கூத்து நடக்கும் பாருங்க எங்க ஊர்ல॥வேடிக்கைதான்..


அவரு என்ன பெட்டிக்கடையா திறக்கப்போறாரு॥? பெட்டியைத்தானே திறக்க போறாரு.. அதுக்கு ஏங்க சொந்தக்காரங்க எல்லாரும் வரணும்..? யாராச்சும் சொந்தக்காரங்கல விட்டுட்டு திறந்திட்டார்னு அந்த சொந்தக்காரர் கோவப்பட்டுட்டு வீட்டுக்கு வரமாட்டாராம்। "அவன் என்ன மதிக்கலை..நான் அவனுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்னு " சண்டை போட ஆரம்பிச்சுறுவாங்க.. ஆமாங்க இது உண்மைதான் எங்க ஊர்ல இதனால் மனக்கசப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?


சரி எப்படியோ பெட்டிக்கு திறப்பு விழா பண்ணியாச்சா॥? அப்புறம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணிமணிகள் - நறுமணப்பொருட்கள் - எலக்ட்ரானிக் சாதனங்கள் - குழந்தைகளுக்கு பொம்மைகள் - சாக்லேட் - சொர்ணம் - சோப்புகள் - சப்பு சவரு என்று எடுத்து பிரித்து வைத்துவிடுவார்கள்।


எல்லா நண்பர்களுக்கும் வாங்கி வர முடியாவிட்டாலும் உயிர் நண்பர்களுக்காகவாவது ஏதாச்சும் வாங்கி வரணுமே? துபாய்ல ஈரானிய மார்க்கெட்டில் இரண்டு திர்ஹமுக்கு அள்ளி வரலாம் பொருட்களை । பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருள் போலவே இருக்கும். ஆனா விலை கம்மி தரமும்தான். அங்கபோய் உயிர் நண்பர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் வாங்கிப் போட்டிருப்பாங்க॥அதை எடுத்து கொடுத்திருவாங்க....


அந்த ஆளு துபாய்ல இருந்து வந்துட்டாருங்கிறதை மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து அலருகிற சத்தத்தில் வருகிற இந்திப் பாடலை வைத்து புரிந்து கொள்ளலாம்।

அப்புறம் இவரு ஊர்ல இருக்கிற நாள் வரையிலும் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் இவர்தான் டிக்கெட் எடுப்பாராம்…மத்தவங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னாலும்॥


"டேய் டிக்கெட் 30 ரூ தானே..அங்க எனக்கு வெறும் 3 திர்ஹம்தாண்டா.. என்று திர்ஹம் - ரூ கதையளப்பார்கள்."
(அங்க அவனுங்க 1 திர்ஹமுக்கு அழுவாங்க)
எனது நண்பன் ஒருவன் ஊரில் பிச்சைகாரியிடம் 5 ரூ போட்டுவிட்டு பெருமையாகச் சொன்னான்। "துபாய்ல வெறும் ½ பில்ஸ்தானடா" என்று.


ஆனா இவனுங்க விடுமுறை முடியும் பொழுது தான் தெரியும் உண்மையான நிலைமை॥முதலில் தாம் தூம்னு செலவழிக்கிறவனுங்க..திரும்பவும் துபாய்க்கு செல்கிற நாட்கள் வரும்பொழுது அப்படியே கமுக்கமா அடக்கி வாசிப்பாங்க..பின்னே கொண்டு வந்த காசெல்லாம் செலவழிச்சிடுவாங்க.. யார்கிட்ட காசு கேட்டாலும் கவுரவம் போயிடும்.. அதனால வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க..


வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கப்போகிற பொழுது சைக்கிளின் பின்புறம் துபாய்ல இருந்து கொண்டு வந்த பூப்போட்ட துண்டுக்கு (ஈரானி மார்க்கெட்ல 2 திர்ஹம் துண்டுதான்) நடுவுல அரபு எழுத்துக்கள் வெளியே தெரிகிறது போல உள்ள சோப்பினை வைத்துகொண்டு செல்வார்கள்। அந்த அரபு எழுத்து பதிந்த சோப்பினை காண்கிறவர்கள் தலைவரை துபாய் பார்ட்டின்னு நினைப்பாங்களே… அதுக்குத்தான்॥


அப்புறம் துபாய் தமிழ் பஜார்ல மொலினா என்கிற சிங்கப்பூர் கடையில் வாங்கிய சிங்கப்பூர் வேஷ்டியை உடுத்துட்டுதான் வலம் வருவாங்க॥அதுதான் தலைவரு துபாய் பார்ட்டின்னு பளிச்சினு காட்டிக்கொடுக்கும்..


செண்ட் அடிக்காம வெளியே வந்திறமாட்டாறு தலைவரு॥ அப்படி அடிச்ச செண்ட்ல மயங்குன கூட்டம்தான்ங்க, இதுபோல நாமும் செண்ட் அடிக்கணும்னு பறந்து இப்போ துபாய்ல சுத்திகிட்டு இருக்காங்க..


துபாய் பற்றியோ, அரபு நாடுகள் பற்றியோ, வெளிநாடு அனுபவம் சற்றும் இல்லாத நண்பர்களை கூட்டி வச்சிட்டு அடிக்கிற அரட்டைதாங்க தாங்க முடியாது। "இங்க இருக்கிற எல் ஐ சி எல்லாம் என்ன கட்டிடம்॥அங்க வந்து பாருங்க ஒரு தெருவுல போனோம்னா தலையை உயர்த்திக்கிட்டேதான் போகணும்॥ அந்த அளவுக்கு உயரமான கட்டிடங்களை பார்க்கலாம்..அது மாதிரி ஒரு கட்டிடத்திலதான் நான் தங்கியிருக்கேன்.."
"அங்கல்லாம் லிப்ட் நாமாத்தான் பட்டனை அழுத்தணும்..போத்தீஸ்ல மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்கமாட்டாங்க.. நான் தினமும் லிப்ட்ல நானாக ஏறி நானாக இறங்கிவேன் தெரியுமா?"
"நைட்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் சுத்தலாம் தெரியுமா..? வியாழக்கிழமை இரவுல நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி பீச்சுக்கு போய்ட்டு வருவோம்..கிரிக்கெட் விளையாடுவோம்.."
"ஒரு கார்டு கொடுப்பாங்க அந்த கார்டை வச்சிக்கிட்டுதான் நாம எங்கே வேண்டுமானாலும் போகணும். கார்டை தொலைச்சோம்னா அவ்வளவுதான் ஜெயில்ல போட்டுறுவாங்க.."
"வெள்ளிக்கிழமையானா போதும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஒரு இடத்துல கூடுவோம். "
(உண்மையில வெள்ளிக்கிழமைதான் நல்லா தூங்குவாங்க)..
"டேய் இந்திலாம் தெரியுமாடா உனக்கு? " என்று எந்த அப்பாவியாவது கேட்டுவிட்டால் போதும்
"தெரியுமாவா..? கான காயா..? ஆப் கா நாம் கியா ஹே? தும் பாகல்..? "என்று தமக்குத் தெரிந்த லோக்கல் இந்தியை நண்பர்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுவார்கள்..
"அங்க இந்தி தெரியலைன்னா அவ்வளவுதான்.. நாங்க ஆபிஸ்ல இந்திதான் பேசுவோம் தெரியமா.. சும்மா சரளமா பேசுவோம்.."
( ஆனா அங்க போனாதான் தெரியும் இவங்க பேசுற இந்தியோட லட்சணம்… இந்தி தெரிஞ்சவன் எவனாவது கேட்டான்னா காறித் துப்பிடுவான்..அந்த அளவுக்கு இந்தி மோசமாக இருக்கும்)
"ஒரு டிவி 150 திர்ஹம்தான்…
1 திர்ஹம் கொடுத்தா 1 பெப்சி டின் வாங்கிடலாம்…
நான் தினமும் பெப்ஸிதான் குடிப்பேன்.."
( ஆமா சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி பெப்ஸி மட்டும்தான் குடிப்பாரு இவரு :)


இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய இளைஞர்களை துபாய் கொண்டு தள்ளிய புண்ணியம் இதுபோன்ற எங்களின் முன்னோடி இளைஞர்கள் பலரைச் சாரும்। அவர்கள் மட்டும் அலட்டல் காட்டாமல் இருந்தாங்கன்னா நிறைய பேருக்கு வெளிநாடு மோகமே இருந்திருக்காது॥


நானும் துபாய் அப்படி இப்படி என்று நண்பர்களிடம் கதையளக்கலாம் என்று வந்தால் எல்லாப் பயலுவலுமே துபாய்க்கு வந்துட்டானுங்க॥என்ன பண்றது..? பார்க்கலாம் யாராவது ஒரு அப்பாவியாவது துபாய் பற்றி கேக்காமலா போகப்போறான் ? அவன்கிட்ட வச்சுக்கறேன் என்னுடைய பீலாவை.. இதைப் படிக்கிற யாராச்சும் கேப்பீங்களாங்க..?


இப்படி நிறைய பேர் இருக்காங்க அலட்டல்வாதிகள்। வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.


நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை।

- ரசிகவ் ஞானியார்

No comments: