20 Jan 2008

நாம் யார் ?

வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் !

வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம்கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !

சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் !

தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள் !

ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள் !

நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள் !

பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் !

ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே வாரிசுகளை வாரியணைத்து கொஞ்சமுடியாத கல் நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலே உறங்கும் முன் தன்னையறியாமலே தாரை தாரையாக வழிந்தோடும் கண்ணீர் துளிகள் !

அபஷி என்ற அரபி வார்த்தைக்கு அனுபவத்தின் மூலம் அர்த்தமானவர்கள் !உழைப்பு என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்கள்!

முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன் ஊர் செல்லும் நோயாளிகள் !

கொளுத்தும் வெயிலிலும் குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள் !

பெற்ற தாய்க்கும் வளர்த்த தந்தைக்கும் கட்டிய மனைவிக்கும் பெற்றெடுத்த குழந்தைக்கும் உற்ற குடும்பத்திற்கும் இடைவிடாது உழைக்கும் தியாகிகள் !
from ALAUDEEN

No comments: