23 Jul 2008

“ஙே…’ன்னு இருந்தால்…! : ரத்த சோகையாக இருக்கலாம், மருந்தில்லாம குணப்படுத்தலாம்

சிலரை பார்த்தால் “ஙே…’ன்னு இருப்பர். திடீரென சோர்வடைவர்.
தலை கிறுகிறுக்கும் என்னவென்றே தெரியாமல் திணறுவர். ஆனால், அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும் என்பது தெரியாது.

இப்படி அளவு குறைவாக ரத்த சிவப்பு அணுக்கள் இருந்தால், அனீமியா குறைபாடு உள்ளது என்று பொருள். இதற்காக உடனே “டென்ஷன்’ ஆக வேண்டாம். டாக்டர் சொல்படி, சத்தான உணவுகளை சாப்பிட்டால் போதும் ஒரு ஆண்டில் ரத்த சோகையை விரட்டி விடலாம்!

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பணி மிக முக்கியம். சிவப்பு அணுக்கள் சீராக இருந்தால் தான், எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை அனுப்ப முடியும் குறைபாடாக இருந்தால் பாதிப்பு தான் அதனால் தான் தலை கிறுகிறுப்பு, மயக்கம், சோர்வு எல்லாம். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் ஒருவருக்கு 12 கிராம் இருக்க வேண்டும். அதில் குறைபாடு இருந்தால் பாதிப்பு ஆரம்பமாகும். எட்டுக்கு கீழ் இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படுவது போல, ரத்த சோகையும் பல காரணங்களால் ஏற்படுகிறது. அதனால், 400 வகை ரத்த சோகைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக உள்ளது சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை தான். மற்றபடி, வேறு பெரிய நோயால் ஏற்படும் ரத்த சோகை, ரத்தத்தில் பாரசைட் காரணமாக ஏற்படும் ரத்தசோகை, கருத்தரித்த போது ரத்த சோகை என்று பல வகையில் உள்ளன.

உடல் உறுப்புகள் இயங்க அடிப்படையில் சில சத்துக்கள் தேவை. அவை உணவில் கிடைக்காவிட்டால், சத்து குறைபாடு அனீமியா ஏற்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லாருக்கும் ரத்த சோகை வரும். ஆறு மாதம் முதல் 35 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு முழு அளவில் போஷாக்கு தேவை. அது கிடைக்காவிட்டால் ரத்த சோகை ஏற்படும் அதுபோல, பெண்களுக்கு அதிகமாக வரும்.

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு எடுத்த சர்வேயில், இந்தியாவில் 79 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு உள்ளது பெரும்பாலோருக்கு தங்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதே தெரியாது’ என்று தெரியவந்துள்ளது.

இந்திய பெண்களில் 56 சதவீதம் பேருக்கு உள்ளது அதில், 58 சதவீத கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்களை ஒப்பிடும் போது ஆண்களுக்கு மிகக்குறைவான பாதிப்பு தான். 24 சதவீதம் பேருக்கு தான் ஏற்படுகிறது.

சத்தான உணவு சாப்பிடாமல் உள்ளவர்களுக்கு தான் அதிக அளவில் வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை கிகிச்சைக்கு பின் சிலர், வயதானவர்கள் போன்றவர்களுக்கு ரத்த சோகை வாய்ப்பு உண்டு. இதனால் தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு சாப்பிடும் படி அறிவுறுத்துவர்.

காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும். அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது.

எந்த ஒரு கோளாறு இருப்பதையும் வெளித்தோற்றத்தில் காட்டிக்கொடுத்து விடும். ஆனால், பலரும் அதை கண்டுகொள்வதே இல்லை. ரத்த சோகைக்கும் அப்படி பல அறிகுறிகள் உள்ளன. அடிக்கடி சோர்ந்து படுப்பர் எந்த வேலையும் செய்ய மனது வராது அப்படியே செய்ய முயற்சி செய்தாலும் உடல் உழைக்காது பசி எடுக்கும் ஆனால், சாப்பிடவும் பிடிக்காது. நடக்க பிடிக்கும் ஆனால், மூச்சு வாங்கும் நாடித்துடிப்பு படபடக்கும். யாருடனும் பேச பிடிக்கும் ஆனால், எரிச்சல் வரும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும் நகங்கள் வெண்மை படியும்.

வேறு அறிகுறிகள்…?
சிலர் திடீரென சாம்பல் சாப்பிடுவர் கேட்டால் விளக்கம் சொல்லத் தெரியாது. சிலர் ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு மெல்லுவர். கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார். அதுபோல, புண்ணாக்கு போன்ற கால்நடை தீவனங்கள் உட்பட மனிதர்களின் உணவல்லாத உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்கும். இவற்றை அடிக்கடி சாப்பிட்டால், அவர்களை டாக்டரிடம் காட்டுவதே நல்லது. அவர்களுக்கு கண்டிப்பாக ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

என்ன மருந்து சாப்பிட்டால், இந்த நோய் சரியாகும் என்று தான் டாக்டரிடம் கேட்கின்றனர் பலரும். ஆனால், என்ன உணவு சாப்பிட்டால் குணமாகும மீண்டும் வராது என்று யாராவது கேட்கின்றனரா? உண்மையில், மருந்து மட்டுமல்ல, உணவையும் டாக்டர் தான் சொல்லி பின்பற்ற வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், சோயா போன்ற பட்டாணி வகைகள் மற்றும் காபி, டீயில் கூட சத்துக்கள் இல்லாமல் இல்லை.

எச்சரிக்கை என்ன?

இவற்றை எல்லாம் சாப்பிட்டாலும், அதை அதிகமாக சூட்டில் சமைத்தாலோ, பிரிஜ்ஜில் வைத்து மீண்டும் சமைத்தாலோ சத்து இருக்காது. இவற்றை மட்டும் ஒரு ஆண்டு பின்பற்றினால், ரத்த சோகை மட்டுமல்ல, பல உடல் கோளாறுகளுக்கும் இடமில்லை.

-செந்தில்

No comments: