17 Jul 2009

பயமுறுத்தும் பாக்கெட் தண்ணீர்

மனித வாழ்விற்கு அடிப்படை தேவைகளாக இருப்பவை உணவு, நீர், உடை, இருப்பிடம் முதலியவை. உணவும், நீரும் அத்தியாவசிய தேவையாகும்.

சத்தான உணவும், தூய்மையான நீரும்தான் ஆரோக்கிய மனிதனை உருவாக்கும். வளரும் நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுகளில் குடிநீருக்காக நாட்டுக்குநாடு போரிட வேண்டிய நிலை உலகளவில் ஏற்படலாம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக மக்கள் தொகையில் இரண்டாம் நிலையில் உள்ள நம் நாடு பெருமளவில் குடிநீர் தேவையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நீர் தேவையை நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் மூலம் பெற்று வந்தோம். மக்கள் தொகை அதிகரிப்பால் காடுகளையும், நீர்நிலைகளையும் அழித்து மக்கள் வாழ இருப்பிடங்களை ஏற்படுத்திவிட்டோம்.

மேலும் சில ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் காணாமல் போய்விட்டன. ஆறுகள் எல்லாம் காய்ந்துவிட்டன. புயல் மழைக் காலங்களில் நீரை சேமிக்க இயலாமல் கடலில் கலக்கின்றன. மேலும் ஆற்றுப் பகுதி அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து கழிவு நீர் சாக்கடைகளாக மாறியுள்ளன.

இப்படி பல வகைகளில் நீர் மாசடைவதால் மக்களுக்கு தூய்மையான குடிநீர் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இந்த சுகாதாரமற்ற நீரால் மக்களை பலவிதமான நோய்கள் தாக்குகின்றன. நீரால் ஏற்படும் நோய்களைத் தடுக்க நீரை நன்கு கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும் என்று சுகாதாரத்துறையும், மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய அவசர கால நிலையில் எப்போதும் காய்ச்சிய நீரைக் கொண்டு செல்வது என்பது இயலாத ஒன்று. இத்தகைய அசாத்திய நிலையில்தான் சில நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரான மினரல் வாட்டர்களை விற்பனைக்கு கொண்டுவந்தன.

இத்தகைய குடிநீர் பெரிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஆரம்பத்தில் விற்கப்பட்டு வந்தது. இது சாமான்ய மக்களுக்கு பயன்படாமல் இருந்துவந்தது. இதற்குக் காரணம் இவற்றின் விலைகளே. இதைப் பயன்படுத்தி சிறு பாக்கெட்டுகளில் 200 மி.லி தண்ணீரை அடைத்து விற்பனை செய்தனர்.

இந்த நீர் மக்களிடையே மிகவும் பிரபலமானதால் சில மோசடி பேர்வழிகள் சரியாக சுத்திகரிக்கப்படாத தூய்மையற்ற குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இந்த நீர் குடிக்க தகுந்ததா என்று சோதித்துப் பார்த்தால் சுகாதாரமற்ற குடிநீராக இருக்கிறது.

வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அதிகம்பேர் இந்த நீரையே வாங்கி அருந்துகின்றனர். இந்த குடிநீரால் டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், காமாலை நோய்கள் மற்றும் ஜலதோஷம், ஈரல் பாதிப்பு என பலவகையான நோய்களுக்கு இந்த நீர்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

எது தூய்மையான நீர் என்பதை சாதாரண மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அரசும் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட நீரே தூய்மையான நீர் என அறிவித்து போலியான நிறுவனங்களை கண்டறிந்து மூடியது. இருந்தும் கள்ளச் சந்தையில் போலி தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகிறது.

குறிப்பாக மதுபானக் கடைகளில் விற்கப்படும் குடிநீர்கள் தரமற்றவையாக இருக்கின்றன. இப்படி பாக்கெட் நீரை அருந்துவதை தவிர்த்து, சிரமம் பாராமல் வீட்டிலிருந்து நீரை எடுத்துவருவது மிகவும் நல்லது.

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி குடிக்க வேண்டும். கொதிக்க வைக்காமல் சிலர் இலேசாக சூடானவுடன் நீரை அருந்துகின்றனர். இளஞ்சூட்டில் நீரில் உள்ள கிருமிகள் அழியாது. நன்கு கொதிக்க வைத்தால்தான் கிருமிகள் அழியும்.

நீரினை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகத்தை கலந்து கொதிக்க வைத்து அருந்துவது மிகவும் நல்லது. பிளாஸ்டிக் குடங்களில் அதிக நாட்கள் நீரை சேமித்து வைப்பது நல்லதல்ல. முடிந்தவரை மண்பானைகளில் நீரை வைத்து பருகுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பிய கேன்களை நன்கு பரிசோதித்து வாங்குவது நல்லது. அந்த நீரில் ஏதும் மாசுக்கள் இருந்தால் தண்ணீர் நிறுவனத்திற்கு தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் செய்ய வேண்டும்.

இதற்கு எல்லாம் நேரம் இல்லையென்றும், நீதிமன்றத்தில் புகார் கூறினால் அடிக்கடி அழைப்பார்கள் என்றும் சிலர் ஒதுங்கிவிடுவார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒதுங்கிச் செல்வதால் அனைத்திலும் போலிகள் புகுந்து விளையாடுகின்றன.

இந்த நிலையை அன்றே உணர்ந்த சித்தர்கள் குடிக்கும் நீரை குப்பியில் அடைத்துகூவிக் கூவி விற்பான் - என்றார். அது உண்மையாகப் போய்விட்டது. நாம் உடலைப் பாதுகாக்க தூய்மையான நீரும் அவசியம் என்பதை உணர்ந்து விழிப்புடன் செயல்பட்டு போலி குடிநீர் பாக்கெட்டுகளை தவிர்ப்போம்.

- நக்கீரன்

No comments: