21 May 2008

பிளஸ்-1 வகுப்பில் சேர அரசு நிதி உதவி

அரசுப் பள்ளிகளில் 10-வது படித்தவர்கள்
சிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேர அரசு நிதி உதவி
சிறந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


சென்னை, மே 21-

அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள், சிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயில அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.56 ஆயிரம் நிதி உதவி

ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பை சார்ந்த திறன்மிக்க மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயில அரசு நிதியுதவி வழங்கும் திட்டம், 2007-2008-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 2 மாணவர்கள் 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து பிளஸ் 1 பயில ஆண்டொன்றுக்கு ரூபாய் 28,000-த்துக்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு மொத்தம் ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம்

இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தலைசிறந்த பள்ளிகளில் சேர்ந்து பயில்வதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் இடம் பெற்றும்ள கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகம் விரைவில் வெளியிடப்படவிருப்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று பயன் பெறலாம்.

No comments: