28 Jan 2010

பெப்பர் ஸ்ப்ரே... பெண்களின் கையில் புதுவித ஆயுதம்!

பெப்பர் ஸ்ப்ரே...

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!

''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!

"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.

ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,

இது இப்போது காவல்துறையால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் அவசியத்தையும் கூறினார்.

"அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, 'மக்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினால் என்ன?' என்று எனக்கு யோசனை எழ, அதற்கான தகவல்கள் சேகரித்ததில் 'பெப்பர் ஸ்ப்ரே' தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.

என்னுடைய யோசனை மற்றும் சேகரித்த தகவல்களை சென்னை, காவல்துறை ஆணையரின் முன் வைத்தேன். அவரும் பரிசீலித்து ஒப்புதல் தர, இப்போது பொதுமக்களுக்கு 'பெப்பர் ஸ்ப்ரே' பற்றிய விழிப்பு உணர்வும் விநியோகமும் எங்கள் துறை சார்பாக நடக்கிறது" என்றவர்,

"இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்

முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறோம். இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும்.

இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" என்று குறிப்பிட்ட முரளி,"பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்மளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது.

இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள் என அனைவரும் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.

பெருங்குடி, திருமலைநகரில் உள்ள 'நிசி' விமன்'ஸ் ஹாஸ்டலில் இருந்து இந்த 'ஸ்ப்ரே' வேண்டி ஏற்கெனவே போலீஸூக்கு விண்ணப்பங்கள் வந்தாகிவிட்டன.

இதுபற்றி அங்குள்ள பெண்கள் கூறுகையில், "எங்களப்போல கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத் துல இருந்து தப்பிக்க இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். துரைப்பாக்கத்துல பார்த்தீங்கனா சாலை யோரத்துல எப்பவுமே நிறைய லாரிகள் நிக்கும்.

இடம் தாராளமா இருந்தாலும் நாங்க போற வழியில இடைஞ்சலா நிக்கறது, உரசுறதுனு லாரி டிரைவர்கள் சிலர் தினமும் 'டார்ச்சர்' பண்றாங்க. இனி அந்த 'ஈவ் டீஸிங்' குரூப்புக்கும் காத்திருக்கு 'ஸ்ப்ரே ட்ரீட்மென்ட்'!" என்றார்கள் பலநாள் கொடுமைக்கு சவுக்கடி கொடுக்கப் போகும் தெம்புடன்!

தொடர்புக்கு: துரைப்பாக்கம் சரகம், காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம், 044--23452776

2 comments:

PUTHIYATHENRAL said...

உங்கள் எழுத்து பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். என் பெயர் அபூ சுமையா நான் அமேரிக்கா கலிபோனியாவில் உள்ளேன். என்னுடைய இனைய தளம் www.sinthikkavum.blogspot.com

PUTHIYATHENRAL said...

உங்கள் எழுத்து பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். என் பெயர் அபூ சுமையா நான் அமேரிக்கா கலிபோனியாவில் உள்ளேன். என்னுடைய இனைய தளம் www.sinthikkavum.blogspot.com