11 Dec 2008

உயர் குருதி அழுத்தமா ? சமையலறைக்கு ஓடுங்கள்

உயர் குருதி அழுத்தம் இருக்கிறதா ?

கவலை வேண்டாம் தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.

இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று. பழங் காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது தான் நமது பாட்டி வைத்தியம்.

இப்போது அது மருத்துவ அங்கீகார முலாம் பூசப்பட்டு அறிவியல் அறிக்கையாக வந்திருக்கிறது.

பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனத்துக்குக் குட்டு வைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்.

இன்றைக்கு வினியோகிக்கப்படும் உயர் குருதி அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட அதிக பலனளிக்கக் கூடியது இந்த பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகெங்கும் பல கோடி பேர் மிகச் சாதாரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் குருதி அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த விரிவான ஆராய்ச்சி சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. பல்வேறு உலக ஆய்வுகளின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவாகத் தான் பூண்டு, பல உயர் குருதி மாத்திரைகளை விட வலிமை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பான மருத்துவர் கேரின் ரெய்ட் இதைக் குறித்துக் கூறுகையில், உயர் குருதி அழுத்தத்தை மருந்துகளால் குணப்படுத்த முடியுமோ இல்லையோ, பூண்டின் மூலம் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

உயர் குருதி அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !!

No comments: