22 Feb 2009

இனி வாங்குவது கஷ்டம், தங்கத்தை விற்க விரும்பும் மக்கள்!

இனி வாங்குவது கஷ்டம்
தங்கத்தை விற்க விரும்பும் மக்கள்!

விலை உயர்வால் தங்களிடமுள்ள பழைய தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.11,500 கடந்து ரூ.12 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் விற்பனை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் மாதத்துக்குப் பிறகு விலை குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதுவும் உறுதி என்று கூறிவிட முடியாத நிலை. இதனால் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று காசாக்க மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இப்போது விற்றுவிட்டு மீண்டும் விலை குறையும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, பழைய நகைகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் நகைக் கடைகளை நோக்கி நடந்த வண்ணம் உள்ளனர்.

இன்னொன்று வங்கிகளில் கடன் வாங்கும் சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளதால், இனி இருக்கும் நகைகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, கடனில்லாத வாழ்க்கைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

"பழைய நகைகளை எந்த நிலையில் இருந்தாலும், சந்தை விலையைவிட 1 சதவீதம் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். கடந்த 10 நாட்களாக, தங்கத்தை விற்பதற்காக வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விலை தொடர்ந்து அதிகரித்தால் இது மேலும் அதிகரிக்கும் என பிரபல நகைக்கடை ஜுக்ராஜ் காந்திலால் நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்குச் சந்தை சரிவால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில் தங்கத்துக்கான தேவை 84 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

No comments: